புது தில்லி: ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
கடந்த 2000- ஆமாவது ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம், விமானப் படை தரப்பில் இருந்து 126 போர் விமானங்கள் படைக்கு வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகமாகி வந்த சூழலில் நவீன வான் போர் கருவிகளைக் கொண்டிருப்பது முக்கியமான ஒன்றாகும்.
தற்போதுள்ள சூழலில் நாட்டின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகி விட்டன. எனவே விமானப் படைக்கு 126-க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். ஆனால் தேவைக்கு ஏற்ப செயல்படாமல் மோடி அரசானது வெறும் 36 விமானங்களை மட்டுமே வாங்குவதற்கு ஒருமனதாக ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம், நாட்டின் பாதுகாப்பினை கேள்விக்குறிக்குள்ளாக்கியிருப்பதுடன், விமானப் படைகளின் போர் தயாரிப்பு நிலையையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
'பாதுகாப்பு கொள்முதல் குழு' என்னும் அமைப்பு மட்டுமே எத்தனை ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் வாங்குவது என்பது குறித்து முடிவெடுக்க முடியும். இந்நிலையில் 36 விமானங்களை வாங்குவது என்று கடந்த 2015-ல் மோடி அறிவித்தது பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறையில் நிகழ்ந்த பெரிய விதிமீறலாகும்.
'பாதுகாப்பு கொள்முதல் குழு' 126 விமானங்களை வாங்குவதற்காக செய்த ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரையானது தற்போதும் நடைமுறையில் உள்ளது. எனவே எப்போது இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும், விமானங்களின் எண்ணிக்கையினை குறைத்தது யார் என்றும் தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.