பாகிஸ்தான் வழியே, இந்தியா -ஆப்கானிஸ்தான் இடையேயான வர்த்தக வழித்தடத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு அந்த நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் -இந்தியா வர்த்தக வழித்தடத்தை மீண்டும் பயன்படுத்தவதற்கு அனுமதியளிக்க பாகிஸ்தான் 2 மாதங்களுக்கு முன்பு விருப்பம் தெரிவித்ததாகவும், இது பாகிஸ்தானின் நீண்ட கால விருப்பம் என்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஜான் பாஸ் ஊடகத்துக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் சனிக்கிழமை வெளியானது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மகமூது குவெரெஷி கூறுகையில், பாகிஸ்தான் வழியாக, வர்த்தகம் மேற்கொள்ள இந்தியாவுக்கு பாகிஸ்தான் அனுமதியளிக்க திட்டமில்லை. அந்த வழித்தடத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் அரசியல் பிரச்னைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஜான் பாஸ் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தானின் இந்த நிலைமை நீடித்து வந்தால் மத்திய மற்றும் தெற்கு ஆசியா இடையேயான போக்குவரத்து, இரு தரப்பினருக்கும் இடையேயான வர்த்தக அதிகரிப்பு ஆகியவை தவறவிட்ட வாய்ப்புகளாக அமையும்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.