திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி குவிந்து வருகின்றனர். குறிப்பாக கருட சேவை முதல் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு சுகாதாரத்தை காக்கும் விதமாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை தலைமை அதிகாரி மருத்துவர் எஸ்.ஷர்மித்ஸா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதியில் சுகாதார்த்தை காக்கும் விதமாக 2,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பகுதிகளில் செயல்பட்டு சுகாதாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு குடிநீர், தேநீர், காபி, பால் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்க 800 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் அமைந்துள்ள அனைத்து மடங்கள், உணவகங்களில் தரமான உணவுகள் வழங்கபடுகிறதா என்று தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது. லட்டு பிரசாதம் மற்றும் குடிநீரும் போதிய தர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள சாலைகள் ஒவ்வொரு மணிநேரமும் சுத்தப்படுத்தப்பட்டு கழிவுகள் அனைத்தும் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 90 டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
நான்கு மாட வீதிகளிலும் 41 நிரந்தர கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வைகுந்த ஏகாதசிக்குள் மேலும் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். மலைப்பாதைகளிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு அவை அனைத்தும் தூய்மையாக வைக்கப்பட்டு வருகிறது என்றார்.