புது தில்லி: ரபேல் ஒப்பந்தத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தவிர்க்கப்பட்டதற்கு காங்கிரஸே காரணம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தினை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த விவகாரத்தில் தனியார் நிறுவனத் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர். இது ஒரு கூட்டு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அதன் உச்சமாக ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி செவ்வாயன்று விமர்சனம் செய்திருந்தார்.
அத்துடன் மத்திய பாதுகாப்பபுத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதனை திறனைப் பற்றி நிர்மலா சீதாராமன் அவநமபிக்கையுடம் பேசுவதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தவிர்க்கப்பட்டதற்கு காங்கிரஸே காரணம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறியதாவது:
ரபேல் போர் விமானங்களை தயாரிப்பது தொடர்பாக டசால்ட் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்த ஷரத்துகளில் உள்ள விஷயங்கள் மற்றும் உத்தரவாதம அளித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் விளைவாக அப்போது ஒப்பந்தம் ஏற்படவில்லை.
இதன் காரணமாகத்தான் இரண்டும் இணைந்து செயல்பட முடியவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் நலனையோ அல்லது விமானப்படையின் நலனையோ கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
எனவே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனமானது ரபேல் ஒப்பந்தத்தில் இடம் பெறாது தொடர்பான கேள்வியை காங்கிரஸிடம்தான் கேட்க வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.