வாராணசி: பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க முடியாததால் விரக்தி அடைந்த பெண் ஒருவர், லக்னௌவில் பயணிகள் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நல்லவேளையாக பேருந்தில் தீ பரவுவதற்கு முன்பு, அதில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேறிவிட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து புர்வஞ்சலை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த எண்ணிய வந்தனா ரகுவன்ஷி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாட வாராணசி வந்த மோடியை சந்திக்க முடியாததால் அதிருப்தி அடைந்து பேருந்துக்கு தீ வைத்தார். இந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்னவென்றால், கன்டோன்மென்ட் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்து மீது வந்தனா பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததை தாம் பார்த்ததாகவும், இதில் வால்வோ பேருந்தில் தீப்பற்றியதும், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்ததாகக் கூறினர்.
ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வந்தனா காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, 29ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி அவருக்கு உணவு கொடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.