புது தில்லி: சகோதரனின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது பெண்ணை, தில்லி மகளிர் ஆணையம் எலும்புக்கூடாக மீட்டுள்ளது அதிர்ச்சிளிக்கிறது.
தில்லி ரோஹினி பகுதியில், வீட்டின் மொட்டை மாடியில் அனாதையாக விடப்பட்ட இந்த பெண்ணுக்கு, 4 நாட்களுக்கு ஒரு முறை ஒரு துண்டு ரொட்டி மட்டும் உணவாக அளிக்கப்பட்டுள்ளது.
தலை முடிகள் காய்ந்து ஒட்டிப் போன நிலையில், எலும்பும் தோலுமாக இருந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சொந்த சகோதரனால், வீட்டிலேயே சித்ரவதை செய்யப்பட்டு, பட்டினியாக விடப்பட்டுள்ளார் இந்த பெண். மிகவும் அவலமான நிலையில் அவளை மீட்ட தில்லி மகளிர் ஆணைய அதிகாரிகள், அவரால் பேசவோ, நடக்கவோ, மனிதர்களை அடையாளம் காணவோ முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சகோதரன் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
வெறும் 50 வயதான பெண்மணி, 2 ஆண்டுகள் பட்டினியோடு, பரிதாபகரமான நிலையில் விடப்பட்டதால், அவரைப் பார்க்க 90 வயது பாட்டி போலக் காணப்படுகிறார்.
இந்த சம்பவம் பற்றி அந்த பெண்ணின் மற்றொரு சகோதரர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார். மகளிர் ஆணைய அதிகாரிகள் பக்கத்து வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து அந்த பெண் இருக்கும் மாடியில் குதித்து கடும் பிரயத்தனம் செய்தே அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க வேறு யாரையும் சகோதரர் அனுமதிக்காமல் மாடியிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.