தெலங்கானாவில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புது காதல் தம்பதி மீது பெண்ணின் தந்தை இன்று (புதன்கிழமை) மாலை கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் தெரிவித்ததாவது:
சந்தீப் (21) ஸ்விகியில் பணிபுரிகிறார். இவரும் மாதவி (21) என்ற பெண்ணும் திருமணத்துக்கு முன் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு மாதவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. சந்தீப்பின் பெற்றோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் உள்ளூர் போலீஸாரிடம் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் போரபந்தாவில் உள்ள சந்தீப்பின் பெற்றோர் இல்லத்துக்குச் சென்றனர்.
இந்நிலையில், இன்று மாலை சந்தீப் மற்றும் மாதவி இருவரும் எர்ரகடா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாதவியின் தந்தை வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த இளம் தம்பதியினர் வாகனத்தை நிறுத்தி இறங்கினர்.
அப்போது, மாதவியின் தந்தை நரசிம்மசாரி தனது பையில் இருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதையடுத்து, இளம் தம்பதியினர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயல்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சந்தீப் உறவினர்கள் கூறுகையில், இரண்டு குடும்பத்தாரும் கடந்த 16-ஆம் தேதி சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சந்தீப்பும் மாதவியும் பிரிவதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த பேச்சுவார்த்தை கடுமையான விவாதமாக முடிந்தது. அதற்கு அடுத்த நாள் (17-ஆம் தேதி) மாதவியின் தந்தை மது அருந்திவிட்டு சந்தீப்பின் இல்லத்துக்கு வந்து தகாத வார்த்தைகளால் விமரிசித்தார் என்றனர்.