நாடெங்கிலும் 198 அணைகளை பாதுகாப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை திருத்தி அமைப்பதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
முன்னதாக, இந்த திட்டத்துக்கு ரூ.2,100 கோடி ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது ரூ.3,466 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 198 அணைகளை புனரமைப்பதற்கு இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 198 அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேம்படுத்தும் வகையிலும், அணைகளின் கீழ் பகுதிகளில் உள்ள மக்களுக்கும், அவர்களது சொத்துக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, அணை பாதுகாப்புக்கான ஆறு ஆண்டு செயல்திட்டத்தை கடந்த 2012-இல் தொடங்கி 2018 ஜூன் மாதம் வரையிலும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
அதன் பிறகு, அந்தத் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதற்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.