தில்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
தில்லியின் துவாரகா பகுதியில் சுமார் 221.37 ஏக்கர் நிலத்தில் ரூ.25,703 கோடி மதிப்பில் அந்த அரங்கத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஐஐசிசி அரங்கம் என்பது அளவிலும், தரத்திலும் உலகில் தலைசிறந்து விளங்கும் அரங்குகள் அல்லது மையங்களோடு போட்டியை ஏற்படுத்துவதாக அமையும்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள், கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள் போன்றவற்றை அந்த அரங்கில் நடத்த முடியும்.
நாட்டிலேயே மிகப் பெரிய உள்மாநாட்டு அரங்காகவும், உலகிலேயே 10-ஆவது பெரிய அரங்கமாகவும் ஐஐசிசி திகழும்.
இந்த விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டம் 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் அணுகுமுறையை வெளிப்படுத்தும். இது வெறும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி அரங்கமாக மட்டும் அமைந்துவிடாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் முக்கியப் பங்காற்றும் அரங்கமாக அமையப்போகிறது.
தில்லிக்குள் இது ஒரு சிறு நகரமாக இருக்கப்போகிறது. இந்த ஒரே அரங்கத்துக்குள் கருத்தரங்கம், கண்காட்சி அரங்கம், மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம், விடுதி, அங்காடி, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.