கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீடிக்காது: எடியூரப்பா

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான
கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீடிக்காது: எடியூரப்பா


கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் புதன்கிழமை பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: 
கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்கள் நீடிக்காது. அரசு நிலைக்குமா? என்ற அச்சத்தில் உறைந்துள்ள முதல்வர் குமாரசாமி, பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி அழைப்பு விடுத்து வருகிறார். 
ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆட்சி நிலைக்காது என்பதைத் தெரிந்து கொண்டபிறகு, பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீச முதல்வர் குமாரசாமி முயன்று வருகிறார். அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாவிட்டால், பாஜக எம்எல்ஏக்களை இழுக்க முதல்வர் குமாரசாமி முயற்சிப்பதேன்? இந்த அரசு அதிக நாள்கள் பதவியில் நிலைக்காது.
அண்மையில் கலபுர்கி சென்றிருந்த முதல்வர் குமாரசாமி, அங்கு பாஜக எம்எல்ஏ சுபாஷ் குத்தேதாருவை மஜதவுக்கு இழுக்க அழைப்பு விடுத்துள்ளார். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதைத்தான் இது காட்டுகிறது. 
கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தானாகவே கவிழும். அரசு கவிழ்ந்துவிட்டால் என்ன செய்ய வேண்டுமென்பதை கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். 
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகிவிட்டது. ஆனால், மக்கள் நலப் பணிகளில் அரசு கவனம் செலுத்தவில்லை. விதான செளதாவுக்கு எந்த அமைச்சரும் வருவதில்லை. நீர்ப் பாசனம், பொதுப்பணித் துறைகளில் தரகு இல்லாமல் எந்தத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதில்லை. 
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஏ.மஞ்சு, அமைச்சர் ரேவண்ணா செய்துள்ள ஊழல் குறித்து பேசியுள்ளார். 
இதுதொடர்பாக முதல்வர் குமாரசாமி பதிலளிக்க மறுத்து வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 24-25 இடங்களில் பாஜக வெற்றி பெறும். மாநில அரசுக்கு எதிராக பாஜக விரைவில் போராட்டம் நடத்தும்.
விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்க கூட்டணி அரசு முயற்சிக்கவில்லை. குடகு மாவட்ட வளர்ச்சிக்கு எந்த முயற்சியையும் கூட்டணி அரசு எடுக்கவில்லை. ஆனால், பாஜகவின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து குடகு மாவட்ட மறு கட்டமைப்புக்கு நிதி ஆதாரத்தைக் கேட்டுள்ளோம் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி, எம்.பி.க்கள் பிரஹலாத் ஜோஷி, நலீன்குமார் கத்தீல், ஷோபா கரந்தலஜே, முன்னாள் அமைச்சர்கள் சி.எம்.உதாசி, ஆர்.அசோக், கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com