கொச்சி: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல்லை, திருச்சபை பணிகளில் இருந்து விடுவித்து வாடிகன் உத்தரவிட்டுள்ளது.
ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிரான்கோ முலாக்கல் மீது கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதைக் கேரள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை, பேராயர் மீது பாலியல் புகாரை முன்வைத்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை சம்பந்தப்பட்ட திருச்சபை வெளியிட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு பிரான்கோ முலாக்கல் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 25-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அத்துடன் அதே தேதியில் கேரள அரசு இதுதொடர்பாக விரிவான மனுதாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுசமயம் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல் சிறப்பு விசாரணைக் குழு முன் புதனன்று விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல்லை, திருச்சபை பணிகளில் இருந்து விடுவித்து வாடிகன் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு அடிக்கடி கேரளா சென்று வர வேண்டியதாக இருப்பதால், ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பணிகளிலிருந்து தன்னை தற்காலிகமாக விடுவிக்குமாறு கோரி வாடிகன் திருச்சபைக்கு பேராயர் பிராங்கோ முலாக்கல் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.