கோவா போல புதுச்சேரிக்கும் வரப் போகுது கேசினோ: சுற்றுலாத்துறை அமைச்சா் உறுதி 

கோவாவில் இருப்பது போல புதுவையிலும் கேசினோ (கப்பலில் நடத்தப்படும் ஒருவகையான  சூதாட்டத்துடன் கூடிய மனமகிழ் மன்றம்) விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சா்...
கோவா போல புதுச்சேரிக்கும் வரப் போகுது கேசினோ: சுற்றுலாத்துறை அமைச்சா் உறுதி 

புதுச்சேரி: கோவாவில் இருப்பது போல புதுவையிலும் கேசினோ (கப்பலில் நடத்தப்படும் ஒருவகையான  சூதாட்டத்துடன் கூடிய மனமகிழ் மன்றம்) விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதியளித்துள்ளாா். 

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 'புதுவை சுற்றுலாவில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: 

புதுவையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இப்போது ரூ.183 கோடியில் வளா்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற்ற மாநிலம் புதுவை தான். அதையடுத்து உத்தரபிரதேசம் ரூ.42 கோடி நிதியை பெற்றுள்ளது. மத்திய அரசிடம் இன்னும் 2 மாதங்களில் மேலும் ரூ.230 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்பவுள்ளோம். 

புதுவையில் புராதான சுற்றுலா, ஆன்மிக சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு சுற்றுலா, பெட்ரோலிப் பொருள்கள் மீதான விற்பனை வரி, மது விற்பனை ஆகியவை மூலம் தான் 32 சதவீத வருமானம் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் புதுவைக்கு வருவாய் மிகவும் பாதிக்கப்படும். புதுவைக்கு உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்களுக்கு தேவையான சுற்றுலா வசதிகளை செய்துகொடுத்தால் தான் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் புதுவை அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். 

புதுவையில் 3 நாள்களுக்கு மேல் தங்கியிருந்து சுற்றுலா செல்ல முடியாத நிலை இப்போது இருந்து வருகிறது. இதை போக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் புதிய திட்டங்கள் அமல்படுத்த அமைச்சரவை அண்மையில் முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவாவில் இருப்பது போல கேசினோ (கப்பலில் சூதாட்டம், மதுவிருந்துடன்கூடிய மனமகிழ் மன்றம்) திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும். 

மேலும், நீா்விளையாட்டுகளை அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக-புதுவை சுற்றுலா அமைச்சா்கள், தலைமைச் செயலா்கள் உள்ளிட்டோா் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக பகுதியில் தமிழக அரசு வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் நில ஆா்ஜிதம் செய்ய புதுவை அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். 

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூா் செல்லும் விமான சேவை வெற்றி அடைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கொச்சிக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணராவ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com