முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2104-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதியன்று தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் தரப்பில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தில்லி பெருநகர நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுனந்தாவை தற்கொலைக்கு சசி தரூர் தூண்டியிருக்க வாய்ப்புள்ளதாகவும், சுனந்தாவுக்கு அவர் கொடுமை இழைத்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியும், அவரது பயணதிட்டங்களை தெரிவித்துவிட்டு, வெளிநாடு செல்லும் காலம் வரை ரூ.2 லட்சம் பிணையத் தொகை செலுத்திவிட்டு, இந்தியா திரும்பியவுடன் அதை திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு தில்லி பெருநகர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தில்லி பெருநகர நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.