பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம்

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம்


பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக, மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், செவ்வாய்க்கிழமை ருமேனியா சென்றார். 
இந்நிலையில், தலைநகர் புக்காரெஸ்டில், ருமேனிய அதிபர் கிலாஸ் வெர்னர் லோஹன்னிஸை அவர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். அதைத் தொடர்ந்து, வெங்கய்ய நாயுடு, கிலாஸ் லோஹன்னிஸ் ஆகியோர் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், வர்த்தகம், சிறு, குறு தொழில்கள், மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ராணுவம், வேளாண்மை, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ருமேனியாவின் போலஸ்தி பெட்ரோலிய பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ள பண்டித தீனதாயள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெங்கய்ய நாயுடு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா, ருமேனியா இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. 70 ஆண்டுகளாக நீடித்து வரும் அந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கிறேன். ருமேனிய அதிபருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஏற்கெனவே சிறப்பாக உள்ளது. அதை மேலும் வலுப்படுத்துவதற்கு இருவரும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
சிறப்பான எதிர்காலத்துக்கு அந்நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிபெற இந்தியா சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிரியாக உருவெடுத்துள்ளது. அது, எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானதல்ல; எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது. பயங்கரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். அப்படிச் செய்தால்தான், எதிர்கால வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் அமைதியாக முன்னோக்கிச் செல்ல முடியும் என்றார் வெங்கய்ய நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com