ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு பரிந்துரைத்ததால் வேறு வழியில்லாமல் அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது என முன்னாள் பிரெஞ்சு அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்ட் தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசு ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் தாமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும், இதில் அரசு தலையீடு எதுவும் இல்லை என்றும் பாஜக சார்பில் அருண் ஜேட்லியும், நிர்மலா சீதாராமனும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் பிரெஞ்சு அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்ட் பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு பரிந்துரைத்தது, அதனால் வேறு வழியில்லாமல் அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, "ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது யார்? எதற்காக அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது?" என்பதாகும்.
அதற்கு பதிலளித்த அவர்,
"இதுதொடர்பாக நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. இந்திய அரசு இந்த நிறுவனத்தை பரிந்துரைத்தது. இதையடுத்து, டஸால்ட் நிறுவனம் அம்பானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. எங்களுக்கு வேறு வழியில்லை, எங்களிடம் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்" என்றார்.
பிரெஞ்சு அதிபரின் இந்தப் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
"ரஃபேல் ஒப்பந்தத்தில், டஸால்ட் நிறுவனத்துடன் கைகோர்க்க குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை இந்திய அரசு பரிந்துரைத்ததாக முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஹோலன்ட் தெரிவித்துள்ள கருத்து சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த வர்த்தக முடிவில் இந்திய அரசும், பிரெஞ்சு அரசும் தனிப்பட்டு முடிவெடுப்பதற்கு எதுவும் இல்லை என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது" என்றார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி டிவிட்டரில் தெரிவிக்கையில், "2012-இல் 590 கோடியாக இருந்த ஒரு ரஃபேல் போர் விமானம், 2015-இல் 1690 கோடி என 1100 கோடி ரூபாயாக விலை உயர்ந்தது எப்படி என்பதையும் முன்னாள் பிரெஞ்சு அதிபர் எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த கணக்கில் யுரோ டாலர் மதிப்பு பிரச்னையாக இருக்காது என்பது உறுதி" என்றார்.
ஏற்கனவே, ரஃபேல் விவகாரத்தில் பாஜகவினர் பொய் கூறி வருவதாக காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரெஞ்சு அதிபரின் இந்த பேட்டி ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்து.