உடுமலைப்பேட்டையில் கடந்த 2016ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சங்கரை, மனைவி கௌசல்யாவின் குடும்பத்தினரே படுகொலை செய்தனர். இந்த தாக்குதலில் கௌசல்யாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதேப்போன்றதொரு சம்பவம் தற்போது தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.
பிரனாய் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை, அவரது மனைவி அம்ருதவர்ஷினியின் தந்தையே கூலிப்படை ஏவி படுகொலை செய்துள்ளார்.
தனது கணவர் சங்கரின் மரணத்துக்கு நீதி கோரி போராடி வரும் கௌசல்யா, இன்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பிரனாயியின் வீட்டுக்குச் சென்று அம்ருதாவைச் சந்தித்துப் பேசினார்.
ஜாதி மறுப்பு ஆர்வலரான தனது வழக்குரைஞருடன் பிரனாயியின் வீட்டுக்குச் சென்ற கௌசல்யா, தனக்கு நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து அம்ருதாவுடன் பகிர்ந்து கொண்டார். சங்கர் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் கௌசல்யா காண்பித்தார். மேலும், இந்த வழக்கில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்தது என்பதையும் அம்ருதா கேட்டறிந்து கொண்டார். சட்ட நடவடிக்கைகள் குறித்து கௌசல்யாவின் வழக்குரைஞர் அம்ருதாவுக்கு விளக்கமாகக் கூறினார்.
கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து 58 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த போதெல்லாம், கௌசல்யா அதனை எதிர்த்து அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்ததையும் வழக்குரைஞர் எடுத்துக் கூறினார்.
உங்கள் கணவரின் கொலைக்கு என்ன காரணம்? ஜாதியா? என்று அம்ருதா கேட்க, ஆம், ஜாதி மட்டுமே ஒரே காரணம் என கௌசல்யா பதிலளித்தார்.
அப்போது, பிரனாயியின் மரணத்துக்குக் காரணமான 7 பேரையும் தூக்கிலிட வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவேக் கூடாது. எனது மாமா ஜாமீனில் வெளியே வந்தால் கூட என்னை அவர்கள் கொலை செய்யக் கூடும் என்று கூறினார்.