மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் லக்னௌவில் துவக்கி வைத்தார்.
50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
ஆயுஷ்மான் பாரத்- தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 10.74 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில்,
"இந்தியாவில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பெரிதளவில் உதவும் வகையில், 'மோடி அரண்' ஆக இருக்கும். ஏழை மக்கள் தற்போது அவர்களது குடும்பத்தாரிடம் சிகிச்சைக்காக கையேந்த வேண்டாம். வேலை வாய்ப்புகளையும் இந்த திட்டம் உருவாக்கும். தேசிய டிஜிட்டல் சுகாதார ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஜிடிபியில் இருந்து 2.5 சதவீதம் சுகாதாரத்துக்காக செலவிடப்படவுள்ளது" என்றார்.
இந்த திட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் 6 கோடி மக்கள் பயனடையவுள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோதி ஆதித்யநாத் கோரப்பூரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.