கோவாவில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் அண்மைக்காலமாக அமெரிக்காவுக்குச் சென்று உயர் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் தற்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரிக்கர் சிகிச்சை பெற்று வருவதால், கோவா முதல்வர் மாற்றப்படலாம் என்ற பேச்சுகள் அடிபட்டது. ஆனால், கோவா முதல்வராக பாரிக்கரே நீடிப்பார் என்று பாஜக தெரிவித்தது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் உரிமை கோரினர்.
இந்நிலையில், கோவா பாஜக மையக் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டிவிட்டரில் கூறுகையில்,
"கோவா பாஜக மையக் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கோவா அரசை மனோகர் பாரிக்கர் தொடர்ந்து வழிநடத்திச்செல்வார். விரைவில் அமைச்சரவை மற்றும் அவர்களது இலாக்காக்கள் மாற்றப்படவுள்ளது" என்றார்.