விசாகப்பட்டிணம்: ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ., ஒருவரை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டிணம் மாவட்டத்தின் அரக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ். தெலுங்கு தேசம் கட்சியினைச் சார்ந்தவர். அவர் ஞாயிறன்று தொகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சவேரி சோமா மற்றும் கட்சிப் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
அவர்கள் வந்த வாகனம் தும்ப்ரி குடா வட்டாரத்தில் உள்ள தூத்தங்கி என்னும் கிராமப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அருகில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் திடீரென்று வெளிப்பட்டு வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கிடாரி சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். சவேரி சோமா மற்றும் கட்சியினர் படுகாயம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சவேரி சோமா மரணம் அடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஒரு பெண் மாவோயிஸ்ட் தலைவர் தலைமையிலான குழு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.