புது தில்லி: ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம் ரஃபேல் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே சமீபத்தில் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியது.
அதேசமயம் விமானத்தை தயாரிக்கும் பிரான்சின் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான உதவி நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என்னும் வகையில் ஒப்பந்தம் இருந்ததாக விளக்கம் அளித்திருந்தது. காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் . பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் ரஃபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.
முதலில் இதுதொடர்பாக ராகுல் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டேவின் கருத்து வெளியாகிறது. இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டது போலவும், இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் இருக்கின்றன
மொத்தமாக ராகுல் ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர்.
முதலில் தான் கூறியதற்கு மாறாக ஹாலண்டே, “ரஃபேல் ஒப்பந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என டசால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்கு தெரியாது என்றும், இதுகுறித்து டசால்ட் நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்” என்றுமம் தெரிவித்துளார். என, குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம் ரஃபேல் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது. திட்டமிட்டபடி ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்.
இவ்வாறு அருண் ஜேட்லி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.