ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை சந்தித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்தது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பிரதமர் மோடி விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனத்தை கடைபிடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி, விரைவில் அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியிடம் (சிஏஜி) காங்கிரஸ் கட்சி கடந்த 19-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. சௌதரியை திங்கள்கிழமை சந்தித்து விரிவான கோரிக்கை மனு அளித்தனர். அதில், கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், ஒரு சில தொழிலதிப நண்பர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அரசு நடத்தும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறம் தள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த குழுவில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா, கபில் சிபல், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, மணிஷ் தேவாரி, விவேக் தன்கா, பர்மோத் திவாரி மற்றும் பிரனவ் ஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.