பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநரும், திரைக்கதையாசிரியருமான கல்பனா லஜ்மி உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 64. சிறுநீரகக் கோளாறு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
கல்பனா லஜ்மியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆபூர்வமான படைப்பாளியை திரையுலகம் இழந்திருக்கிறது. கல்பனாவின் திறமைகள் அனைத்தும் திரையில் அவரது வலிமையையும், உறுதியையும் பிரதிபலித்தது. அஸ்ஸாம் மக்களின் வாழ்வை திரைப்படங்கள் வாயிலாக அவர் சித்திரித்துக் கூறிய விதம் போற்றத்தக்கது. கல்பனாவின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பெண்ணியம் சார்ந்த கருத்துகளையும், வசனங்களையும் திரைப்படங்களில் எந்த சமரசமும் இன்றி அழுத்தமாகக் கூறிய இயக்குநர்களில் கல்பனா லஜ்மி குறிப்பிடத்தக்கவர். திரைத் துறையில் பெண்கள் அதிகம் கோலோச்சாத காலத்திலேயே தனக்கென தனி முத்திரை பதித்தவர். அதிரடி காட்சிகளும், ஆக்ரோஷ வசனங்களும் வெண் திரையை ஆக்கிரமித்திருந்த சூழலில், யதார்த்தங்களை மட்டுமே தனது படைப்புலகமாக கட்டமைத்துக் கொண்டவர் கல்பனா லஜ்மி.
அவரது இயக்கத்தில் வெளியான "ஏக் பல்', "ருதாலி', "தர்மியான்', "தமன்', "சிங்காரி' ஆகிய படங்கள் பாராட்டுகளையும், விருதுகளையும் ஒருசேரக் குவித்தன. ஹிந்தி திரையுலகில் அழியாத் தடம் பதித்துள்ள கல்பனா லஜ்மியின் உடலுக்கு நடிகர்கள் சபானா ஆஸ்மி, சோனி ரஸ்தான், இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் சார்பில் அந்த மாநில அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கல்பனா லஜ்மியின் உடல் தகனம் செய்யப்பட்டது.