இந்தியாவை விட்டு கருப்பு பணம் வெளியேறுவதே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைய காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
கோவா மாநிலம், மார்கோவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை. நாட்டை விட்டு மிகப்பெரிய அளவில் கருப்புப் பணம் வெளியேறுவதே இதற்கு காரணம்.
உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதனால் அந்நாட்டின் செலாவணியான டாலர், உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும். அமெரிக்க டாலருக்கு சவால் விடுக்கும் வகையில், உலகில் வேறு எந்த செலாவணியும் தற்போதைக்கு இல்லை.
இலங்கையில் ராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், ராவணன் தில்லி அருகே உள்ள பீஷ்ராக் கிராமத்தில்தான் பிறந்தார் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் செலாவணிகளில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் ரூபாய் மதிப்புதான் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. நிகழாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கிட்டு பார்த்தால், ரூபாயின் மதிப்பு சுமார் 14 சதவீதம் குறைந்து விட்டது.