சர்வதேச அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 16-ஆவது இடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுளள்ளதாவது:
உலகம் முழுவதும் பரபரப்பாக இயங்கிவரும் விமான நிலையங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பட்டியலில், தில்லி விமான நிலையம் 16-ஆவது இடத்தில் உள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 6.34 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாண்டிருக்கிறது. கடந்த 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 14 சதவீதம் அதிக பயணிகளை அந்த விமான நிலையம் கையாண்டிருக்கிறது.
பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஹர்ஸ்ஃபீல்டு ஜாக்சன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.
இந்த விமான நிலையம், கடந்த ஆண்டில் மொத்தம் 10.39 கோடி பேரை கையாண்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பெய்ஜிங் விமான நிலையம் இடம்பிடித்தது. இது, 9.58 கோடி பயணிகளை கடந்த ஆண்டு கையாண்டிருக்கிறது.
துபை (8.82 கோடி பயணிகள்), டோக்கியோ (8.54 கோடி பயணிகள்), லாஸ் ஏஞ்சல்ஸ் (8.45 கோடி பயணிகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.