இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார்.
அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.
மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஆதாரை அதிகாரமிக்க முன்னேற்றத்துக்கான கருவியாகவே காங்கிரஸ் கட்சி பாவித்தது. ஆனால் பாஜக-வுக்கு ஆதார் என்பது தனி மனிதன் மீதான ஒடுக்குமுறை மற்றும் கண்காணிப்புக்கான கருவியாகவே பயன்படுத்தி வருகிறது.
எனவே இவ்விவகாரத்தில் இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்.