மும்பை: ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரிக்கும் வண்ணம் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பேசியதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான தாரிக் அன்வர் அறிவித்துள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுக் குடியுரிமை குறித்து விமர்சித்துப் பேசியதன் காரணமாக, சரத் பவார், சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினை சரத் பவார் துவங்கினார். அதில் பொதுச் செயலாளர் உட்பட முக்கியப் பதவிகளை தாரீக் அன்வர் வகித்துள்ளார். பலமுறை மக்களவை எம்பியாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரிக்கும் வண்ணம் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பேசியதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான தாரிக் அன்வர் அறிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரூ.58 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்குப் சரத் பவார் பேட்டி அளித்தார். அப்போது ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டப்படுகிறது என்றும் எந்தவிதமான ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே ஏற்பட்ட திடீர் நட்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாரீக் அன்வருக்கு பிடிக்கவில்லை. எனவே தனது பொதுச்செயலாளர் பதவி, கத்தார் தொகுதி மக்களவை உறுப்பினர் பதவி ஆகிய இரண்டையும் அவர் வெள்ளியன்று ராஜிநாமா செய்தார்.
இது குறித்து தாரிக் அன்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த சரத் பவாரின் கருத்துக்களோடு முற்றிலும் நான் வேறுபடுகிறேன். அதனால் கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழலில் நான் ராஜினாமா செய்கிறேன். அரசியலில் ஒழுக்கம், வாக்குத் தவறாமை ஆகியவற்றை வலியுறுத்தி இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.