தேர்தல் தோல்வி: காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தேர்தல் தோல்வி: காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாயின. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 52 இடங்களிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றது.

இந்த தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தான் ஏற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜிநாமா கடிதம் அளிக்க வாய்ப்புள்ளது' என்றன.

கொண்டாட முடியாத வெற்றி..: காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ராகுல் வெற்றி பெற்றார். 

ஆனால் இந்த முறை, மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியுற்றார்.

அமேதி தொகுதியை குறி வைத்து பாஜக தேர்தல் வியூகம் வகுத்து வந்த நிலையில், இரண்டாவது தொகுதியில் போட்டியிட ராகுல் முடிவு செய்தார். 

அதையடுத்து கேரளத்தின் வயநாடு போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் அங்கு ராகுல் வெற்றி பெற்றார். எனினும் இந்த வெற்றி காங்கிரஸýக்கு எவ்வித ஆறுதலையும் அளிக்க முடியாத வகையில், நாட்டின் பல இடங்களில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்துள்ளது.

வெற்றி பெறாத வியூகம்..: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு பாஜகவுக்கு எதிராக ராகுல் தீவிர பிரசாரம் செய்தார். எனினும், அவரது தொகுதியான அமேதியில் கூட இந்த முறை ராகுலால் வெற்றி பெற இயலவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை மற்றும் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளது. 

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டும் தேர்தலில் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் பதவி விலகுவாரா என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பேசத் தொடங்கி விட்ட நிலையில், அவர் தனது ராஜிநாமா கடிதத்தை செயற்குழு கூட்டத்தில் அளிக்க வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 மாநிலங்களில் காங்கிரஸýக்கு "பூஜ்யம்'..: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை சற்று அதிகரித்து 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா..: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியில் தோல்வியுற்றதற்குப் பொறுப்பேற்று அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஒடிஸா சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தனது ராஜிநாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். 

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா?


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கடந்த 1969-ஆம் ஆண்டு முதல்முறையாக அளிக்கப்பட்டது. அதையடுத்து 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் ஆட்சியின்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சட்டப்பூர்வமாக அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன்படி,  அவையின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களைப் பெற்ற கட்சியின் எம்.பி. எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கலாம்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 44 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதால், மக்களவையில் முறைப்படி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காங்கிரஸால் பெற இயலவில்லை.

கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான எண்ணிக்கை காங்கிரஸýக்கு கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com