நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,18,253-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,132 பேர் உயிரிழந்ததால், கரோனா தொற்றுக்கு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83,198-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை முதன்முறையாக 10 லட்சமாக உள்ளது. மொத்தமாக 10,09,976 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,25,079-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு உயிரிழப்போரின் விகிதம் 1.63 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 19.73 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தை கடந்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பர் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.