அண்ணலின் அடிச்சுவட்டில்... 3

1940-42-இல் தான் காந்தி என்கிற பெயரே கல்யாணத்திற்கு அறிமுகமாகிறது. அப்போதுதான் காந்தி என்கிற ஒரு மனிதர் இந்தியாவிற்கு
அண்ணலின் அடிச்சுவட்டில்... 3

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
1940-42-இல் தான் காந்தி என்கிற பெயரே கல்யாணத்திற்கு அறிமுகமாகிறது. அப்போதுதான் காந்தி என்கிற ஒரு மனிதர் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்கிறார் என்று கேள்விப்படுகிறார். சுதந்திரமென்றால் என்னவென்றே அப்போது கல்யாணத்திற்குப் புரியவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு நாம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தோம். அதற்கு முன்பாக மொகலாய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தோம். அதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே  கருதவில்லை. அவர்கள் எப்படி நம்மை ஆட்சி செய்கிறார்களென்பதைப் பற்றிய விவரங்களும் அறியாமல் இருந்தார். கல்யாணத்தை போலவே அவரது சக நண்பர்கள்  பலரும் எதற்காக சுதந்திரம் என்றுதான் ஆச்சரியப்பட்டனர். காரணம் அவர்களெல்லோருமே  சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்ததே!
  1935-இல் கல்யாணத்திற்கு 13 வயது. அப்போது அவரது உபநயன முகூர்த்தம் திருப்பதியில் நடைபெற்றது. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக குடும்பத்தினர் எல்லாரும் சென்னையில் தியாகராய நகரிலுள்ள அவர்களது வீட்டிற்கு வந்தனர். காவல் நிலையத்திற்கு பின்புறம்தான்   வீடு. புதிய இடம். கல்யாணமும் மற்ற குழந்தைகளோடு மகிழ்ச்சியாக விளையாடினார். அப்போது மிதிவண்டியைப் பார்த்ததும் கல்யாணத்திற்கு மிதிவண்டி ஓட்டும் ஆசை வந்தது. தன் தங்கையை பின்னால் வைத்துக் கொண்டு சாலையில் மிதிவண்டி ஓட்டத் தொடங்கினார். அதைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியுடன் ஒரு காவல்துறை அலுவலர் ஓடி வந்தார். இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கே கொண்டு சென்று விட்டார். வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரையும் காணவில்லையென்று கல்யாணத்தின் தந்தை அதிர்ச்சிக்குள்ளானார். புகார் செய்வதற்காக நேராக காவல் நிலையமே வந்து விட்டார். அங்கே குழந்தைகள் இருவரையும் கண்டதும்தான் அவருக்கு ஆறுதல் வந்தது. காவல் நிலையத்தினரிடம் தனது வருத்தத்தை தெரிவித்து விட்டு குழந்தைகளை அழைத்துச் சென்றார். அவ்வாறு கடுமையாக இருந்தது அப்போதைய சட்டம்.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திர பாடம்

 கல்யாணம் இந்திய ராணுவத்தின் தலைமையகத்தில் பணிக்கு சேர்ந்த போது அந்த அலுவலகம் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அங்கே அவர் பட்ஜெட் அசிஸ்டென்டாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  பி.காம் பட்டதாரியாக இருந்ததால் அவருக்கு அந்த வேலை அளிக்கப்பட்டிருந்தது. ஒரு வருடம் அங்கு வேலை பார்த்திருப்பார்.
 அப்போது சுதந்திரம் கிடைக்கவில்லை. கல்யாணத்தின் அலுவலகத்தின் தலைவர் ஆங்கிலேயராக இருந்தார். அவருடன் காந்திஜி சுதந்திரம் கேட்பது எதற்காக? என்று வாதம் புரிந்தார். இதைக்கேட்ட அவரின் மேலதிகாரியான ஆங்கிலேயர், "இல்லை இல்லை.. நீங்கள் கூறுவது தவறு. உங்களுக்கு சுதந்திரம் வேண்டும். நாங்கள் வெளிநாட்டவர்கள். எங்களின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருப்பது சரியல்ல'' என்று கூறி சுதந்திரத்தின் அவசியத்தை கல்யாணத்திற்கு எடுத்துக் கூறினார். அப்படி ஓர் ஆங்கிலேயரின் மூலமாகத்தான் கல்யாணம் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முதன் முதலில் ஆரம்பப் பாடமாக அறிந்து கொண்டார். அவ்வாறு அன்று அந்த சுதந்திரத்தின் பொருளைக் கற்றுக் கொடுத்தவர்தான் அவரின் அலுவலகத் தலைவர். அவரிடமிருந்துதான் கல்யாணம் நிறையப் பணிகள் செய்யவும் கற்றுக் கொண்டார்.

 அப்போது 1939 இருக்கும். டெல்லியில் கல்யாணத்தின் வீட்டின் அருகிலேயே குடியிருந்த அவருடைய ஆங்கிலேய உயரதிகாரிக்கு குழந்தைகள் கிடையாது. அவரிடம் ஒருநாள் அவருடைய மனைவி காதியில் துணி எடுக்க விருப்பப்பட்டாள். காதி பண்டார் செல்ல  கல்யாணத்தை அழைத்தார். அப்போது கல்யாணத்திற்கு காதி என்றால் என்னவென்றே  புரியவில்லை. பின் காதியைக் குறித்து அந்த வெள்ளைக்காரப் பெண்மணியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்போது காதித் துணிகள் இப்போதுபோல் மெலிதாக இருப்பதில்லை. மிகவும் திடமாகவும் கனமாகவும் இருக்கும்.  போர்வை போல் இருக்கும். காதி வாங்குவதற்காக அந்தப் பெண்மணியை சாந்தி சவுக்கிலிருக்கும் காதி பண்டாருக்கு அழைத்துச் சென்றார் கல்யாணம். அங்கேதான் முதல் தடவையாக காதி துணியினை கல்யாணம் தெளிவாகப் பார்த்தார். ஆங்கிலேயப் பெண்மணி அவருக்கான ஆடைகளை வாங்கிக் கொண்டார். அதைக் கண்டதும் கல்யாணத்திற்கும் காதியில் ஆடைகள் வாங்க விருப்பமாக இருந்தது. அவரிடம் பத்து ரூபாய்தான் இருந்தது. ஒரு பைஜாமா, ஒரு குர்தா தைத்துக் கொண்டார். அதற்கு மூன்று ரூபாயே ஆனது. பின் ஓர் அணாவிற்கு ஒரு கைக்குட்டை வாங்கினார். அதன்பின் இரண்டு ரூபாவிற்கு ஒரு ராட்டினமும் வாங்கினார். அவ்வாறு ஓர் ஆங்கிலேயப் பெண்மணி மூலமாகவே கல்யாணத்திற்கு காதி அறிமுகமானது.  
  அந்தப் பெண்மணியின் கணவர் அலுவலகத்திலிருந்து வந்ததுமே சிறிய கால் சட்டையை அணிந்து கொண்டு தோட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்.  சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் சிம்லா அருகிலுள்ள குல்லூ, மஷோப்ரா ஆகிய இடங்களுக்கும் டெல்லியில் குதுப்மினார், புரான்கிலா போன்ற விடுமுறை சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிப்பர். அப்போது அவர்கள் நட்புரீதியாக கல்யாணத்தையும் தவறாமல் அழைத்துச் செல்வர்.  
 அவர்கள் சிம்லாவில் இருக்கும் போது வெளியே சுற்றுலா செல்கையில் பல மைல் தொலைவுகளுக்கு நடந்தே போவர். குடும்பத்தினருடனான அந்தப் பயணத்தில் பனிச் சறுக்குவர். கல்யாணமும் அவர்களோடு பயணிப்பார். போகிற வழியில் ஏதாவது குண்டு குழிகள் இருந்தால் அவர்களே மேடான பகுதியிலிருந்து சிறிது மண் எடுத்துவந்து நிரப்பி விடுவார்கள். அவர்கள் அந்த அளவிற்கு கடமையாற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள். நாம் இங்கு செய்வது போல் அந்த குழியை நிரப்புவதற்காக நகராட்சி ஊழியர்களுக்காக காத்திருக்க மாட்டார்கள். 
 கல்யாணம் டெல்லியிலிருக்கும் போது மதராசியர் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கிளப்பில் ஒரு கூட்டுறவு சங்கமும் இருந்தது. அங்கே கல்யாணம் உட்பட அனைவருமே ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.  ஒருவரது வீட்டில் திருமணம் வருகிறதென்றால் சமையல், இடத்தைச் சுத்தம் செய்தல், பாத்திரங்கள் துலக்குதல், விருந்தினர்களுக்கு காப்பி, தேநீர் வழங்குதலென எல்லோரும் சேர்ந்து உதவி செய்தனர். இப்போது இருப்பது போல் அப்போது பெரிய பந்தல் கட்டி சமையல்காரர்களை வரவழைத்து சமையல் செய்கிற நடைமுறைகள் இல்லை. கல்யாண மேளத்திற்குப் பதிலாக இசைத்தட்டையே இசைப்பர். ஒருவருக்கொருவர் உதவி செய்வதை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். குறிப்பாக யாருடைய வீட்டிலாவது திருமணம் அல்லது வேறு ஏதாவது சடங்கு இருந்தால் அங்கே மிகுந்த ஆர்வத்துடன் கல்யாணம் செய்யும் உதவிகள் அனைவராலும் பேசப் பட்டவை. 

கல்யாணத்தின் முதல் சிறை அனுபவம்

 1942 ஆகஸ்ட் 9 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். மும்பையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் அந்த சிறப்புக் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் குறித்த தீர்மானம் காந்தியின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்பட்டது. அதன் வலிமைமிகு தாக்கம் இந்தியா முழுக்க படர்ந்து பரவியது.   
 வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளில் கல்யாணம் புது டெல்லியில்தான் இருந்தார். ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு வெளியேற்ற காந்தி விருப்பப்படுகிறார் என்று மட்டுமே தெரிந்து கொண்டார். ஆனால் அவர் எதற்காக அவ்வாறு விரும்புகிறாரென்று அவருக்குப் புரியவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்த போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டு பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் பல சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். 
 அந்தக் காலத்தில் டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த பலரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர்கள் அலுவலகத்தில் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எது எப்படி இருந்தாலும் கல்யாணத்திற்கு தளராத உதவும் மனப்பான்மை இயல்பாக இருந்தது. 
 அப்போது ஒரு மனிதர் கல்யாணத்தை அணுகி அவரிடம் கொஞ்சம் துண்டு பிரசுரங்களை கொண்டு தந்தார். அதில் ஏதோ நாலைந்து வரிகளில் அச்சடித்திருந்தார்கள். அதில் என்ன எழுதி இருக்கிறதென்று கூட அவர் பார்க்கவில்லை. அந்த பிரசுரத்தை பக்கத்து வீடுகளில் வாசல் கதவினடியிலுள்ள இடைவெளி வழியாகப் போடச் சொன்னார். முக்கியமாக ஆங்கிலேயர்கள் வசிக்கும் வீடுகளில் மட்டும் போட்டுவிடக் கூடாதென்று எச்சரித்தார். அங்கே நிறைய ஆங்கிலேயர்களின் வீடுகளும் இடையிடையே இருந்தன. காலையில் எழுந்ததும் அவர்கள் அந்த துண்டு பிரசுரத்தை படிக்கும் நோக்கில் இரவு நேரத்தில் போடச் சொன்னார். 
 கல்யாணமும் அவர்கள் சொன்னது போலவே ஒவ்வொரு வீட்டிலும் அந்த துண்டுப் பிரசுரத்தைப் போட்டார். வீட்டிற்கு முன்பு ஒரு முக்கிய சாலை இருந்தது. கல்யாணத்திடம் அவர்கள் சுமார் 50 துண்டு பிரசுரங்கள் தந்திருப்பார்கள். அவர்கள் கூறியபடியே இரவு 10 மணிக்கு மேல் யாரும் பார்க்காத அளவில் அந்த பிரசுரங்களை வீட்டின் கதவினடியில் கல்யாணம் செருகினார். இரண்டு நாட்கள் அவ்வாறே செய்தார். சரியாக மூன்றாவது நாளும் அவர் ஒரு வீட்டில் அந்த துண்டுப் பிரசுரத்தை திணித்த போது ஒரு போலீஸ் சர்ஜன் வீட்டின் முன்புள்ள அந்த சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
அவர் கல்யாணத்தைப் பார்த்து விட்டார். 
அருகில் வந்தார். 
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' எனக் கேட்டார். 
"இந்த துண்டு பிரசுரத்தை ஒவ்வொரு வீட்டிலும் போட்டுக் கொண்டிருக்கிறேன்'' என எந்தக் கபடமுமின்றி கூறினார் கல்யாணம். 
அவர் அதைப் படித்து விட்டு "அதில் என்ன எழுதி இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?'' எனக் கேட்டார். 
"நான் அதைப் படித்துப் பார்க்கவில்லை'' என்றார் கல்யாணம். 
"நீங்கள் ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூறுகிறீர்கள். இது தேசத் துரோகம்...'' என்று கோபத்துடன் கூறினார் அந்தக் காவல் அதிகாரி. 
"நான் அதை இன்னும் படித்துப் பார்க்கவில்லை'' என்று அழுத்தமாக கூறினார் கல்யாணம். 
அந்தப் பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. 
 கல்யாணம் கைது செய்யப்பட்டார். 
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com