9. நிபா வைரஸ் காய்ச்சல் - பகுதி 2

தரையில் விழுந்துகிடக்கும் பல் பட்ட, கடிக்கப்பட்ட, குதறிய, ஓட்டை விழுந்த, கெட்டுப்போன பழங்களை எடுத்து, அணில் கடித்தது, இனிப்பாக இருக்கும் என்று நினைத்து கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
9. நிபா வைரஸ் காய்ச்சல் - பகுதி 2

நிபா வைரஸ் காய்ச்சல் குறித்த முதல் பகுதியில் நிபா வைரஸ், நோய் அறிகுறிகள், பரிசோதனை முறைகள் குறித்து விரிவாகப் பார்த்தோம். இப் பகுதியில் நிபா வைரஸ் குறித்து மேலும் பல தகவல்களைப் பார்ப்போம்.

மருத்துவச் சிகிச்சை - மருந்துகள் இல்லை

நிபா வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் பிரத்தியேகமான வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கு தற்சமயம், ரிபாவிரின் (Ribavirin) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் பயன் கிடைக்குமா என்பதில் மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் மருத்துவ உலகம் இருக்கும்போது, இதைத் தவிர வேறு வழியில்லை. அதாவது, இந்த வைரஸுக்கு எதிரான மருந்தைப் பொறுத்தவரை.

தடுப்பூசிகள் இல்லை

இந்த நிபா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுத்துக்கொள்ளலாமா என்றால், அதற்கான தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வரும்முன் காப்பதுதான் சிறந்தது என்று மக்கள்தான் தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆனாலும், வாய்ப்பு உள்ளது; ஆறுதலும் உள்ளது…

இந்த வைரஸை ஒத்த ஹென்ரா (Hendra virus) வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே (HENV-) நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதங்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி குதிரைகளிடம் சோதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எப்படித்தான் சிகிச்சை செய்வது?

இந்த வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளும், தடுப்பூசிகளும் இல்லாதநிலையில், இந்தக் காய்ச்சல் கண்டவரை அல்லது நிபா வந்தவரென சந்தேகப்படுபவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் இதற்கென உள்ள பிரத்தியேக வார்டுகளில் உள்நோயாளியாகச் சேர்த்து, அவரை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அங்கு அவருக்கு இரண்டுவிதமான சிகிச்சை அளிக்கப்படும்.

1. தொந்தரவுகளை கட்டுப்படுத்தும் சிகிச்சை (symptomatic treatment)

2. தொற்றால், சுவாசம் - மூளை - நரம்பு மண்டலப் பாதிப்புகளில் இருந்து (supportive care treatment) விடுபட, செயற்கை சுவாசம், அவரது இதயத் துடிப்பு (நாடித் துடிப்பு), ரத்த அழுத்தம் ஆகியவை சீராக இருக்கவும், தேவையான ஆக்ஸிஜனை மூளையும், நரம்பு மண்டலமும் பெறவும் சிகிச்சை அளிக்கப்படும்.

தேவையான சத்துகள், குளுக்கோஸ் ஆகியவையும் சிரை மூலமாக அவருக்குச் செலுத்தப்படும். தொடர்ந்து, சுவாசம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை - நரம்பு மண்டல தேவைகளுக்கு ஏற்பட தொடர் கண்காணிப்பு சிகிச்சை தரப்படும்.

வௌவால்கள் பாதிக்கப்படுமா?

இந்த நிபா வைரஸை உடலில் கொண்டிருக்கும் வௌவால்கள் நோய்வாய்ப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், பன்றிகள் மற்றும் பிற விலங்குகள் இந்த நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. பன்றிகளுக்குக் கடுமையான இருமல், மூச்சுத்திணறல், தசைப்பிடிப்பு, தடைத்துடிப்பு, நடக்கத் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் இருக்கும். பன்றி வளர்ப்புப் பண்ணையில் உள்ளவர்கள், பன்றிகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அது நிபாவாக இருக்குமோ என சந்தேகிக்க வேண்டும். இதன்மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பிற பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

நோய் பரவாமல் தடுப்பது எப்படி?

முதலில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப்போடுங்கள்.

சிலர் வௌவால்களையே சாப்பிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வௌவால்களிடம் இந்த நிபா வைரஸ் மட்டுமின்றி, கொஞ்ச காலத்துக்கு முன்பு நம்மைப் பயமுறுத்திய எபோலா, சார்ஸ் தொடங்கி ரேபீஸ் வெறிநாய்க்கடி வைரஸ் வரை சுமார் 60 வகை வைரஸ் வகைகளைச் சுமந்து திரிகிறது.

எனவே, வௌவால் கடித்தாலும் ஆபத்துதான். அதன் உமிழ் நீர், பிற உடல் நீரினாலும் மனிதர்களுக்குப் பல்வேறு வைரஸ் தொற்று ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை.

விலங்கு நல மருத்துவர்களும், வனவிலங்குகளைக் கையாள்பவர்கள், ஆராய்ச்சியாகள், வனப் பாதுகாப்புத் துறையினர், சுற்றுலா செல்பவர்கள் என அனைவருமே சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அடுத்து, நோய்த்தொற்று ஏற்பட்டவர்களோடு இருப்பவர்கள், முகக் கவசம், கையுறை, உடல் பாதுகாப்பு உடைகளை அணிந்தே அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்று ஏற்பட்டவரின் பழைய உடைகளை எரித்துவிட வேண்டும். இவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மருந்தோ, தடுப்பூசியோ இல்லாத காரணத்தால், சுய பாதுகாப்பு முறைதான் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

பொதுமக்கள், வீட்டு விலங்குகள் மற்றும் பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளிடம் மாற்றம் தெரிந்தால், உடனடியாக விலங்கு நல மருத்துவரிடம் காண்பித்து நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். தொற்று ஏற்பட்ட விலங்குகள் பன்றியாகவோ, குதிரையாகவோ, எதுவாக இருந்தாலும், அவற்றை அழிப்பதன் மூலம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

நோயுற்ற இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்ணக் கூடாது. சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவ்வளவுதான்.

தரையில் விழுந்துகிடக்கும் பல் பட்ட, கடிக்கப்பட்ட, குதறிய, ஓட்டை விழுந்த, கெட்டுப்போன பழங்களை எடுத்து, அணில் கடித்தது, இனிப்பாக இருக்கும் என்று நினைத்து கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.

எந்தக் காய்ச்சல் என்றாலும் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சல் கண்டவரை, அரசு மருத்துவமனையில் வைத்து அதற்கான வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

வீடு அருகே எலியோ பூனையோ எந்த விலங்கோ இறந்தாலும், உடனடியான வனத் துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கள், பதநீர் என திறந்த நிலையில் தயாரிக்கப்படும் பானங்கள், எந்தப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று தெரியாமல் தயாரிக்கப்படும் பழச் சாறுகளையும் தவிர்க்க வேண்டும்.

மருத்துவத் துறையில் இருப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவராகட்டும், செவிலியராகட்டும், ஆய்வுக்கூட பரிசோதகராகட்டும், மருத்துவமனை ஊழியராகட்டும், அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற தொற்றுநோய்க் கிருமி பாதிப்பு திடீரென ஏற்படும்போது, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனை கேட்கப்பட்டு, தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் மேற்பார்வையில் ஆய்வு நடத்தி, குறிப்பிட்ட மாநில சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து சிகிச்சைகள் மட்டுமல்லாது, பாதுகாப்பு - தற்காப்பு - தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

வேறு ஒரு வைரஸ் காய்ச்சல் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com