ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்துக்கு அருகில் இருக்கும் கரட்டடிபாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வா.மணிகண்டன். தனது பள்ளிப்படிப்பை கோபிசெட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் முடித்துவிட்டு, இளநிலைப் பொறியியல் படிப்பை (பி.ஈ) சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும், முதுநிலைப் படிப்பை (எம்.டெக்) வேலூர் பல்கலைக் கழகத்திலும் முடித்தவர்.
கட்டுரைகள், சிறுகதைகள், கவிதை என எழுதிக்கொண்டிருக்கும் இவர் இதுவரை, இரண்டு கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். பெங்களூரில் இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராகத் தற்போது பணியாற்றி வரும் மணிகண்டன், www.nisaptham.com என்கிற அவரது வலைத்தளத்துக்காக 2013-ம் ஆண்டின் சுஜாதா இணைய விருதைப் பெற்றவர்.
எழுத்து தவிர தனது நிசப்தம் அறக்கட்டளை மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வருவதோடு, கல்வி ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.