அத்தியாயம் 7 - கற்பனையே விற்பனையாகும்

ஒரு நிறுவனத்துக்குள் நுழைவது மிகச் சுலபம். வாசலில் உள்ள செக்யூரிட்டியை சமாளித்தால் போதும்.


ரு நிறுவனத்துக்குள் நுழைவது மிகச் சுலபம். வாசலில் உள்ள செக்யூரிட்டியை சமாளித்தால் போதும். ஆனால், அந்த நிறுவன ஊழியராக உள்ளே நுழைய, படிப்பு மட்டும் போதாது. நேர்முகத் தேர்வு என்று ஒன்று நடத்துவதே, படிப்பை மீறி, நம் குணாதிசயம், மனோபாவம், மற்ற திறன்களை அறிந்துகொள்ளத்தான்!

அந்த வகையில்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஊழியராக வர விரும்புபவரிடம், குறிப்பிட்ட சில திறன்களை எதிர்பார்க்கும். அத்தகைய திறன்களில் முதன்மையானதாக, ‘கவனமாக இருப்பது பற்றி’ சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.

அடுத்து, ஒரு நிறுவனம் என்ன எதிர்பார்க்கும் என்று கற்பனையைத் தட்டிவிடச் சொல்லியிருந்தேன்.

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு நிறுவனங்கள், முந்தைய சூழலிலிருந்து வேறுபட்டு, புதிய யுக்திகளைக் கையாண்டு தொழில் செய்து வருகின்றன. அதுவும், இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால், இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கு அடிப்படையான காரண குணாதிசயம் ஒன்று இருக்கிறது.

உதாரணமாக, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன் ஆகியவை வகை தொகை இல்லாமல், எண்ணற்ற வடிவங்களில், நிறைய வசதிகளுடன் வருகின்றன. ஆனால், பொதுவாக கம்ப்யூட்டருக்கு ஒரு விசைப்பலகை, மவுஸ் எனப்படும் சுட்டி, மானிட்டர், சிபியு ஆகியவை இருந்தால் போதும். ஆனால், அதில் மட்டுமே ஏகப்பட்ட மாடல்கள், நிறங்கள், வடிவங்கள் என்று நம்மை தேர்ந்தெடுக்கவே தேர்வெழுத வைக்கின்றன

இந்தக் கதை இப்படியென்றால், ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் தொடு திரை செல்பேசிகள்! ஒரு புள்ளிவிவரம் என்ன சொல்கிறதென்றால், கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செல்பேசிகளின் எண்ணிக்கையைவிட, கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செல்பேசிகளின் மாடல்களின் எண்ணிக்கை அதிகமாம்! அதாவது, நாம் தேர்ந்தெடுக்கவே குழம்பும் அளவுக்கு மாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு என்ன அடிப்படை என்று யோசித்தால், ஒரே பதில்தான் கிடைக்கும் - ‘கற்பனை வளம்’.

இந்த நூற்றாண்டில் மனித வளமும், கற்பனை வளமும்தான் நமது வாழ்வின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. ஆகவே, நிறுவனத்துக்குள் மனித வளமாக நுழையும் ஒரு நபரின் கற்பனை வளத்தைத்தான் அடுத்ததாக உன்னிப்பாகக் கவனித்துப் பார்ப்பார்கள். அதைத்தான், சென்ற அத்தியாயத்தின் கடைசியில் சூசகமாகச் சொல்லியிருந்தேன்.


பொதுவாக, நமது தகவல் தொடர்புத் திறனைத்தான் பார்ப்பார்கள் என்று நினைப்போம்,. ஆனால் அது அடுத்த கட்டம்தான். ஏனெனில், ஏற்கெனவே பார்த்தபடி, தனது ரெஸ்யூமேவிலேயே தனது கற்பனைத் திறனை ஒருவர் காட்டிவிட்டார் என்றால், அதனை மீண்டும் சோதிக்கத் தேவையிருக்காது. நேரடியாக தகவல் தொடர்புக்குப் போய்விடலாம்.

ஆனால் நமது ஆள், வெள்ளைத்தாளில் கருப்பு எழுத்துகளில் தன்னைப் பற்றி தட்டையாகச் சொல்லியிருந்தாலும், அதில் ஏதாவது கற்பனைத் திறனான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எதுவுமே செய்யாமல், மண்டபத்தில் எழுதி வாங்கி வந்த ரெஸ்யுமேவாக இருந்தால், அதனை வைத்துக்கொண்டு திறனை எடை போட முடியாததால், நேர்முகத் தேர்வில் முக்கியமானதாக கற்பனைத் திறன் பங்கு வகிக்கிறது.

கற்பனைத் திறன் ஏன் தேவை என்று தெரிந்துகொள்ள, இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, இணையம் என்ற ஒரு அமைப்பைப் பார்த்தாலே போதும். எத்தனைவிதமான வடிவமைப்புகளுடன் இணையதளங்கள் வருகின்றன? இணையம் சார்ந்த ஊடகங்கள் இருக்கின்றன? விளம்பரங்கள்? ஓவியங்கள், டிஜிட்டல் படங்கள், காணொலிகள் என்று இணையத்தை மையமாக வைத்து, கற்பனை வளம் எப்படிப் பெருகியிருக்கிறது. கற்பனை வளத்தை மையமாக வைத்து இணையம் எத்தகைய சாதனைகளைச் செய்திருக்கிறது? இவ்வளவு வண்ணமயமான உலகத்துக்குப் பின்னால், விஞ்ஞானிகள் மட்டுமல்ல, கற்பனை வளம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் போதும்.

இதில்கூட ஒரு முக்கியச் சிறப்பு இருக்கிறது. இந்தியர்களின் கற்பனைத் திறன் அலாதியானது. அதற்கு நமது முன்னோர்கள் சாட்சியாக விட்டுச் சென்றிருக்கும் பலவிதமான கலைப் பொக்கிஷங்கள்தான் ஆதாரம். இது நமது மரபணுவிலேயே ஒன்றிப்போன ஒரு விஷயம். ஆனால், ஒரு சிறிய மாற்றம்.

இப்போதெல்லாம் நம் கற்பனைத் திறனை, சினிமா போய்விட்டு வந்ததை மறைக்கவும், தாமதமாக வந்ததற்குக் காரணம் சொல்லவும், செய்த தவறை செய்யவில்லை என்று பூசி மெழுகவும், பெற்றோர்களைத் திசை திருப்பவும், நண்பர்களையோ, காதலன், காதலியையோ வசீகரிக்கவோ பயன்படுத்துகிறோம். இப்படி சொல்லப்படுபவை பொய் எனப்படுகிறது. இதையே மிகத் தெளிவாக, தகுந்த லாஜிக்குடன் இன்னும் கவனமாகச் சிந்தித்து ஒரு படைப்பாக உருவாக்கினால், அதனை கற்பனை என்று சொல்லலாம்.

ஏனெனில் இன்றைய காலகட்டத்தில், ஒரு நிறுவனத்தின் ஊழியர் என்பவர் அதன் சொத்தாகவே பார்க்கப்படுகிறார். அவர் எவ்வளவு திறமையானவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு, அந்தச் சொத்தின் மதிப்பு அதிகரிக்கும். அப்படி மதிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், சொத்துக்கு, அதாவது ஊழியருக்கு கற்பனை வளம் அவசியம். நம் கற்பனை வளத்தை பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளத்தான் நிறுவனங்கள் விரும்பும்.

ஏனெனில், இன்று உலகின் முன்னணியில் விளங்கும் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர, அந்த நிறுவனம் ஒருமுறை ஒரு அறிவிப்பு வெளியிட்டது. ‘உங்கள் கல்வியோ, மதிப்பெண்ணோ எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான்! உங்களுக்கு கற்பனைத் திறன் பொங்கி வழிகிறது என்று நீங்கள் நம்பினால், எங்கள் நிறுவனத்தின் மேற்கண்ட முகவரியில் 12 இருக்கைகளும் அதன் முன்னால், கணிப்பொறிகளும் காத்திருக்கின்றன. வந்து அமர்ந்துகொள்ளுங்கள். கற்பனைக்கேற்ப உங்களை விற்பனை செய்துகொள்ளுங்கள். இப்படிச் சென்றது அந்த அறிவிப்பு.

அப்படியென்றால், இந்தக் காலகட்டத்தில் கற்பனை வளம் அத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.

கூகுள் நிறுவனத்தையே எடுத்துக்கொண்டால், அவர்கள் கற்பனைத் திறனின் உச்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். கூகுள் டாக்ஸி என்ற ஓட்டுநர் இல்லா காரை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சிந்தனையின் அடிப்படை என்ன தெரியுமா?

ஜுராஸிக் பார்க் என்ற திரைப்படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற அமெரிக்க இயக்குநரின் படைப்பு. அந்தப் படத்தில், ஓட்டுநர் இல்லா கார்கள் வரும். அதை அடிப்படையாக வைத்து, உண்மையிலேயே அந்த வகை கார்களை உருவாக்கியும் காட்டிவிட்டார்கள். இது ஒரு சோறு பதம்தான்!

இப்படித்தான், எக்கச்சக்கமான நிறுவனங்கள் கற்பனைத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது முக்கியத் தேவை, அவர்களது ஊழியர்களுக்கு அத்தகைய கற்பனைத் திறன் நிறைய இருக்க வேண்டும் என்பதுதான்.

இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. நாம் முதலில் பார்த்தது கவனமாக இருக்க வேண்டும் என்பதை. உண்மையில், கவனமாக இருப்பவர்களுக்கு எல்லாமே கண்ணில் படும். அதில் என்ன புதுமைகள் செய்யலாம் என்று மூளை கொஞ்சம் ஓவர்டைம் எடுத்து வேலை பார்க்கும். அப்போது தானாகவே, கற்பனை ஊற்றெடுக்கும். இந்தக் கற்பனைத் தி்றன் அதிகமாகிவிட்டதென்றால், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் திடீரென்று உருவாகும்.

இப்படியும் யோசிப்போம். ஒரு காலகட்டத்தில், மின்சாரம் இருந்தது. ஆனால், அதன்மூலம் வெளிச்சத்தை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. இருள் என்ற மிகப்பெரிய பிரச்னை இருந்தது. அதில் இருந்து மீள முடிவெடுத்தார் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற மனிதர். அவர் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய விஞ்ஞானி. ஆகவே விளக்கை உருவாக்க, அவரது கற்பனையைத் தூண்டிவிட்டு, பல்வேறு பொருள்களை மின்சார புலத்தில் சோதித்துக்கொண்டே இருந்தார். மின்சார விளக்கை ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார். அதுதான், நம்முடைய இருள் பிரச்னைக்குத் தீர்வாகிவிட்டது. இதுதான் கற்பனை வளத்தின் வெற்றி!

அத்தகைய கற்பனை வளம் மிகுந்தவர்களை நிறுவனங்கள் ‘வாடா ராஜா’ என்று அள்ளிக்கொள்ளும். இதனை எப்படி நம்மிடம் தெரிந்துகொள்கிறார்கள் என்றால், முதலில் நமக்கு பெட்டியைவிட்டு சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அதென்ன பெட்டியை விட்டு சிந்திக்கும் ஆற்றல்? ஆங்கிலத்தில், OUT OF THE BOX THINKING என்று சொல்வார்கள்.

ஒரு பிரச்னை என்றால், அதற்குள்ளேயே சிந்திக்காமல் அதற்கும் மேல் சிந்தித்தால், அதை மேற்கண்டவாறு சொல்லலாம். ஆனால், அப்படிச் சிந்திக்கிறோமா இல்லையா என்பதுதான் இன்றைய கேள்வி! பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் ஆற்றலை சோதிக்க பல்வேறு முறைகள் இருக்கின்றன.

மிகச் சுலபமாக ஒரு கேள்வி


5 + 5 + 5 = 550. இந்த கூட்டுத்தொகை நேரடியாகப் பார்த்தால் தவறு! ஆனால், உங்களிடம் ஒரு கோடு தரப்படும். அந்தக் கோட்டைப் பயன்படுத்தி, இந்த கூட்டுத்தொகை சரி என்று நிரூபிக்க வேண்டும். ‘=’ என்ற குறியில் கை வைக்கக்கூடாது. Not Equal To என்று போடக்கூடாது. ஆனால், வேறு எங்காவது அந்தக் கோட்டைப் போட்டு, அந்தக் கூட்டுத்தொகை உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டும். இதில் உங்கள் கற்பனைத்திறன் வெளிப்படும். கற்பனையைத் தூண்டிவிட்டு முயற்சி செய்யுங்கள்.

அடுத்த இதழில் விடையுடன் சந்திப்போம்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com