அத்தியாயம் 6 - அமைதியே ஆதாரம்

கவனம் ஒன்றுதான் நேர்முகத் தேர்வில் முதலில் பார்க்கப்படும் முக்கியக் குணம் என்று பார்த்தோம்.

வனம் ஒன்றுதான் நேர்முகத் தேர்வில் முதலில் பார்க்கப்படும் முக்கியக் குணம் என்று பார்த்தோம். அது புரிகிறது! ஆனால், எனது கவனத்தை எப்படி வளர்த்துக்கொள்வது? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் அந்த வார்த்தைக்குள்ளேயே அடங்கி இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சூட்சுமம்.

LISTEN என்ற சொல்லில் இருந்து என்னன்ன ஆங்கில வார்த்தைகள் உருவாக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள். உடனே LIST, TEN, SIT, NET என்று பல வார்த்தைகள் தோன்றும். ஆனால், LISTEN என்ற வார்த்தையில் இருந்து உருவாக்க முடிந்த ஒரே சிறந்த வார்த்தை SILENT என்பதுதான்.

ஒரு மனிதன் முழுக் கவனத்துடன் இருக்க, அவன் செய்ய வேண்டியது - அமைதியாக இருப்பதுதான்!

அது எப்படி? அமைதியாக இருந்தால், கவனம் அதிகரித்துவிடுமா? அப்படியெனில், நான் பேருந்துப் பயணத்திலும், தனியாக நடந்து போகும்போதும், இரவில் தூங்கும்போதும் அமைதியாகத்தானே இருக்கிறேன். அது போதாதா? என்று அடுத்து தோன்றும்.

மேலே சொன்ன தருணங்கள், நம் மீது திணிக்கப்பட்ட அமைதி! ஆனால், பேசுவதற்கு வழி இருக்கும் இடத்தில், அமைதியாக இருக்கும் போதுதான் கவனம் வலுப்பெறும்.

முதலில், தினமும் நாம் செய்யும் வகையில் ஒரு பயிற்சி சொல்ல விரும்புகிறேன்

அது… தினமும் காலையில் எழுந்தவுடன், ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்திருக்க முயற்சிக்கலாம். அதாவது, காலையில் எழுந்து, அடிப்படைக் கடமைகளை முடித்த பிறகு, வீடோ, அறையோ... அதன் ஒரு பகுதியில் சென்று அமைதியாக அமர வேண்டும். பிறகு, மெதுவாக அந்த அறையில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றையும் கவனிக்கத் துவங்கலாம். அப்போது ஓர் ஆச்சரியம் நிகழும்.

நாம் அன்றுவரை கவனிக்காத பல விஷயங்கள், நாம் அமர்ந்திருக்கும் அறையில் இருக்கும். அதே இடத்தைத்தான் நாம் பல நாள்களாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றுதான் கவனிக்கிறோம். அதுவும் விழிப்புணர்வுடன் கவனிக்கிறோம் என்ற உணர்வு தோன்றும். இதுதான் அமைதியின் வெற்றி!

பேசாமல் இருப்பதைத்தான் அமைதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது இல்லை! பேசாமல் இருக்கும்போது என்ன செய்கிறோம் என்பதுதான்!

பொதுவாக, எல்லோருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியும். நாம் ஓட்டப் பழகும்போது, கைகள் எங்குள்ளது? காலில் எப்படி கியர் போடுவது என்று பல்வேறு பகுதிகளில் முழுக் கவனமும் இருக்கும். போகப்போக, வாகனம் ஓட்டப் பழகிய பின், தன்னிச்சையாக கைகளும் காலும் இயங்கும். நம் சிந்தனை வேறு எங்கோ இருக்கும். அப்படி ஓட்டிச் செல்லும்போது நாம் பேசுவதில்லை. ஆனால், சிந்தனை வேறு எங்கோ இருந்தால், சாலையில் முழுக் கவனமும் இருக்காது. அதனால், நாம் எப்படி அந்தச் சாலையைக் கடந்தோம் என்று வந்த பிறகு யோசிக்கத் தோன்றும்.

அதேபோல், போதுமான கவனமின்மையால்தான் விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகனம் ஓட்டும்போது, அந்த விநாடியில் சாலையில் எப்படிச் சென்றுகொண்டிருக்கிறோம்? அருகில் எந்த வண்டி வருகிறது? சாலையில் மேடுபள்ளங்களின் நிலை என்ன என்று கவனத்தோடு சென்றால், அதுவே ஒரு பயிற்சியாகிவிடும்.

ஆம். அதுதான் இரண்டாம் கட்டம்.

அதிகாலையில், அமைதியாக அமர்ந்து கவனம் செலுத்தத் துவங்கிய பிறகு, நாம் தன்னிச்சையாகச் செய்யும் அனைத்துச் செயல்களையும், கவனத்துடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, விழிப்புணர்வு அதிகமாகிவிடுகிறது. இதைத்தான், ‘அந்தக் கணத்தில் வாழ்வது’ என்று ஜென் தத்துவம் சொல்கிறது.

அந்தக் கணத்தில் வாழ்பவர்கள், கவனமில்லாமையால் ஒருபோதும் தவிக்க வேண்டியதில்லை. வீட்டைப் பூட்டும்போதும், கியாஸ் சிலிண்டர் வால்வை மூடும்போதும், வேறு ஒரு சிந்தனையில் இருந்துவிட்டு, வெளியில் கொஞ்ச தூரம் சென்ற பிறகு, ஆஹா... பூட்டினேனான்னு தெரியலையே? சிலிண்டரை மூடினேனான்னு தெரியலையே? என்று கவலைப்படுவது அல்லது சந்தேகத்துக்கு வந்து பார்த்துச் செல்வது என்பது இங்கு சாதாரணமாக நடக்கும் செயல். இதற்கு ஒரே தீர்வு, அமைதிதான்!

அப்படி இருக்கும்போதுதான், ஒரு கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சரியாகப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியும்.

நாம் பேசுவதை கவனமாக தேர்ந்தெடுத்துப் பேசமுடியும். நம்மில் பலருக்கு, தன்னையறியாமல் ஒரு சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப பேசும் பழக்கம் இருக்கும். எனக்குத் தெரிந்து, பல பெரிய நிறுவன அதிபர்களே, ஒரு சில வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில், எனக்குத் தெரிந்த ஒரு நிறுவன அதிகாரி, தொடர்ந்து  ‘புரியுதா?’ என்று ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையே கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்குப் பயிற்சி அளிக்கும்போது, அதைக் கவனிக்கவைத்து, விழிப்புணர்வுடன் குறைத்துக்கொண்டார். பிறகுதான் தெரிந்தது, அவருக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் அவருக்கு ‘புரியுதா மேனேஜர்’ என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது.

இப்படி, நாம் அடிக்கடி தேவையில்லாமல் பயன்படுத்தும் வார்த்தைகளை, அமைதியாகக் கவனித்தால்தான், அதைக் கண்டுபிடித்து, அந்தத் தவறைக் களையமுடியும்.

ஏனெனில், Communication எனப்படும் தகவல் தொடர்புதான் ஒரு வேலையின் முதல் தகுதிக்கூறாகப் பார்க்கப்படும். அதன் அடிப்படைதான் இந்தக் கவனம்

வேலை தேடுபவருக்கு, நேர்முகத் தேர்வில் என்னென்ன கேட்பார்கள் என்று தெரியும். அதற்குப் பதிலும் தெரியும். ஆனால், அதனை வெளிப்படுத்தத் தெரியாமல் தடுமாறுவார்கள். அப்படிப்பட்ட தகவல் தொடர்பில், பேச்சு, எழுத்து, கேட்டல், வெளிப்படுத்தல் என்று நான்கு நிலைகள் உள்ளன.

அந்த நான்கு நிலைகளை VERBAL, WRITTEN, LISTENING, PRESENTATION என்று ஆங்கிலப்படுத்தலாம். ஆனால், இந்த நான்கின் நோக்கமே, அடுத்தவருக்கு நாம் சொல்ல, எழுத வந்ததைப் புரிய வைப்பதுதான். அதை எப்படி எளிதாகப் புரியவைக்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படிப் புரியவைக்க வேண்டுமென்றால், ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதற்கு, ‘கவனம்’தான் ஒரே மருந்து! அப்போதுதான், அன்றே வேலை கிடைத்து, நண்பர்களுக்கு வைக்கமுடியும் விருந்து!

பேச்சில் எப்படி கவனத்தை வளர்த்துக்கொள்வது?

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், நமக்குள்ளேயே ஒரு சென்ஸார் போர்ட் வைத்துக்கொண்டு பேசலாம். நம்மைப் பற்றிய அறிமுகத்தை முழுமையாக மனப்பாடம் செய்துகூட வைத்துக்கொள்ளலாம். நாலு முறை கேட்ட திரைப்பாடல் நினைவில் இருக்கும்போது, நம்மைப் பற்றி கோர்வையாகச் சொல்ல மனப்பாடம் செய்வதற்கு எந்தச் சட்டத்திலும் தண்டனை இல்லை! கவலையே வேண்டாம்.

நாம் பேசும் பேச்சில், அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள், எதிர்மறை வார்த்தைகள், தேவையில்லாத வார்த்தைகள், இடைச்செருகல் வார்த்தைகளை தணிக்கை செய்து வெளியேற்றத் தொடங்கினால், நாம்தான் பேச்சில் வல்லவர் என்று சொல்லப்படுவோம். இதற்குப் பயிற்சியாக, பெரிய தலைவர்கள் பேச்சை, ஒலியாகக் கேட்கலாம். ஒளிப்படமாகப் பார்த்தால், அந்த ஒலியின் மீது செல்லும் கவனம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து, எழுத்து…


இதற்கு அதிகம் நாம் படிக்க வேண்டியது அவசியம். நிறைய வாசிக்கலாம். மற்றவர்கள் எழுதியதை ஆழமாகக் கவனிக்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் எப்படி கோர்க்கப்பட்டிருக்கிறது என்று சிந்திக்கலாம். நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பழகலாம். அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டச் சொல்லலாம்.

பிறகு, கவனித்தல்…

இதில் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் எல்லாமே வரும். ஒரு உயர்தர உணவகத்தில், தலைமை சமையல் ஆய்வாளராக பணியில் சேர வேண்டும் என்றால், நல்ல சுவை குறித்த கவனம் வேண்டும். மற்றவர் பேசுவதை மிகக் கவனமாகக் கேட்டால், தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அடுத்தவர் கடிதத்தையோ, எழுத்தையோ சரியாகப் புரிந்துகொண்டால், அதற்கேற்றார்போல் செயல்பட முடியும்.

அடுத்து, வெளிப்படுத்துதல்…

இதுதான் கவனத்தை கவரக்கூடியது. செய்தித்தாள், திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்தினால்தான் கவனத்தைக் கவரமுடியும் என்பதுதான் காரணம். மேலும், வெளிப்படுத்தும் விதத்தில்தான், நமது கற்பனா சக்தி வெளிப்படுகிறது

எடுத்துக்காட்டாக, ஒருவரைச் சந்திக்கும்போது, ‘என்ன சார்? எப்படி இருக்கீங்க?’ என்று கேட்கலாம். ‘வணக்கம் சார்! நலமா?’ என்று கேட்கலாம். இதில், முதல் வாக்கியத்தைவிட, இரண்டாவதில் ஒரு தரம் வெளிப்படுகிறதல்லவா? அதுதான், மொழியை சரியாகப் புரிந்து கொண்டு தகவல் தொடர்பு மூலம், கவனத்தைக் கவரும் வகையில் அதை வெளிப்படுத்துவது! அதற்கு முதலில், நாம் கவனமாக இருக்க வேண்டும்

முத்தாய்ப்பாக ஒன்று…

பொதுவாக, எல்லாவற்றையும் கவனிப்பவர்தான், எல்லோராலும் கவனிக்கப்படுவார்! அதற்காக, எல்லாவற்றையும் கவனிப்பதையே வேலையாகவே வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், எப்போதும் கவனமாக இருந்தால், அது ஒரு வேலையாகத் தெரியாது. தன்னிச்சையாக அமைந்துவிடும் என்பதுதான் உண்மை!

நேர்முகத் தேர்வில் முதலில் கவனிக்கப்படும், ‘கவனம் பற்றி வேண்டிய மட்டும் பார்த்தாகிவிட்டது. அதற்குப் பிறகு நமது எந்தத் திறனை நிறுவனம் அளவிடும்.? எந்தத் திறன் இருந்தால் நல்லதென்று எதிர்பார்க்கும்?

கற்பனையைத் தட்டிவிட்டுக் காத்திருங்கள். அடுத்த பாகம் சொல்லும், அதற்கான பதிலை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com