நேர்மையான இ-மெயில் சேவை!

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை - இருந்தாலும் இந்தப் புதிய இமெயில் பற்றி நீங்கள் தெரிந்து

பு
திதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை - இருந்தாலும் இந்தப் புதிய இமெயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்குத் தெரியும், இணையத்தில் இலவசம் வேண்டாம், கட்டண சேவைக்கு நாங்கள் தயார் என பலரும் சொல்லும் காலம் வரலாம்!

கட்டண சேவை எனும்போது, இணைய சமநிலை விவாதத்தில் சொல்லப்படும் வாட்ஸப், ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுவது போன்ற கட்டணம் அல்ல; இந்தக் கட்டணம் தனியுரிமை சார்ந்தது. அதன் மகத்துவம் புரிந்ததால் இணையவாசிகளே விரும்பி செலுத்தக்கூடியது.

இனி, சாவ்ரின்.நெட் (https://soverin.net/ ) பற்றி பார்க்கலாம்- அது தான் புதிதாக அறிமுகமாகி இருக்கும் இமெயில் சேவை! ஜிமெயில் இருக்க வேறு மெயில் சேவை எதற்கு என்று பலரும் நினைக்கலாம். ஆனால் ஜிமெயிலும் சரி, இன்னும் பிற இலவச இமெயில் சேவைகளும் சரி, பயனாளிகளின் தனி உரிமையை மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

அவை பயனாளிகளின் ஒவ்வொரு மெயிலின் உள்ளடக்கத்தையும் கண்காணிக்கின்றன. இதன் அடிப்படையில் இன்பாக்சில் விளம்பரங்களை தோன்றச்செய்கின்றன. இந்த விளம்பரங்கள்தான் அவற்றின் வருவாய் ஆதாரம். விளம்பரம் தவிர வேறு விதங்களிலும் கூட மெயிலில் பரிமாறப்படும் தகவல்கள் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர்.

ஸ்நோடனுக்குப் பிறகு!


சராசரி இமெயில் பயனாளிகள் இதைப் பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. என் மெயிலில் என்ன பெரிய ரகசியம் இருக்கப்போகிறது என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். அல்லது நம்மால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

ஆனால், ஸ்நோடன் வீசிய குண்டுக்குப் பிறகு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் என்.எஸ்.ஏ. அமைப்பில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய ஸ்நோடன், ஒவ்வொரு இமெயிலும் அரசு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது என ஆதாரங்களோடு அம்பலமாக்கி திகைப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

ஸ்நோடன் விவகாரத்துக்குப் பிறகு இமெயில் பரிமாற்றத்தைச் சங்கேத மொழியில் அனுப்புவதன் அவசியம், அதாவது என்கிரிப்ட் செய்வது பற்றி எல்லாம் பெரிதாக பேசப்படுகிறது.

இப்படி என்கிரிப்ட் செய்து மெயில் அனுப்ப உதவும் இமெயில் சேவைகளும் இருக்கின்றன.

இந்த வரிசையில்தான் சாவ்ரின்.நெட் மெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. சாவ்ரின் சேவை பலவிதங்களில் ஆச்சர்யம் அளிக்கிறது. முதலில் அதன் பெயர்! சாவ்ரின் என்றால் இறையாண்மை என்று பொருள். சாவ்ரின் குறிப்பிடுவது பயனாளிகளின் இறையாண்மையை. அதாவது அவர்கள் மெயிலின் உள்ளடக்கத்தைப் பயனாளி மற்றும் அதைப் பெறுபவர் மட்டுமே அறிந்திருக்கும் உரிமை.

இன்னொரு ஆச்சர்யம், சாவ்ரின், தனது சிறப்பை புரிய வைக்க இணைய யுகத்தில் பலரும் மறந்துவிட்ட தபால் சேவையுடன் தன்னை ஒப்பிடுவதுதான். தபால் சேவை பழங்காலத்து சங்கதியாக இருக்கலாம், ஆனால், தபாலைக் கொண்டு வருபவர் அதை ஒருபோதும் பிரித்து படித்ததில்லையே. இந்த அம்சத்தைத்தான் சாவ்ரின் சுட்டிக்காட்டி, இமெயில் விஷயத்திலும் இந்தத் தன்மை ஏன் மாற வேண்டும் என கேட்கிறது. அதாவது, பயனாளிகள் தங்கள் மெயிலின் உள்ளடக்கம் படிக்கப்படுவதை ஏன் அனுமதிக்க வேண்டும் என கேட்கிறது.

ஒவ்வொரு நாளும் உங்கள் இலவச மெயில்கள் கண்காணிக்கப்பட்டு, அதன் தகவல்கள் தரவுகளாக விளம்பர நிறுவனங்களுக்காக விற்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இதற்குத்  தீர்வாக தனிப்பட்ட இணைய முகவரியில் பிரத்யேக இமெயில் கணக்கு வசதியை முன்வைக்கிறது.

விளம்பர மெயில்


இங்கு கொஞ்ச நேரம், உங்கள் இமெயில் அனுபவத்தை நினைத்துப்பாருங்கள். ஜிமெயிலில் மெயிலை அனுப்பும்போது அல்லது வந்த மெயிலை படிக்கும்போது மேல் பகுதியில் அல்லது பக்கவாட்டில் விளம்பரங்கள் தோன்றுவதைப் பார்த்திருக்கலாம். அவை எல்லாம் உங்கள் மெயில் வாசகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிச்சொற்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விளம்பரங்கள். இதைத்தான் அந்தரங்க மீறல் என்று தனியுரிமைவாதிகள் வாதிடுகின்றார்கள். நிறுவனங்கள் தரப்பிலோ தனிநபர் அடையாளத்தை அறியாமல் வெறும் வார்த்தைகளே ஸ்கேன் செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

இலவச மெயில்களில் இருக்கும் இந்த ஊடுருவல் இல்லாமல் நீங்கள் இமெயிலை அந்தரங்கத் தன்மையுடன் பயன்படுத்தலாம் என்று சொல்வதுதான் சாவ்ரின் சேவையின் யு.எஸ்.பி.

இதுவும் மற்ற மெயில் சேவை போலத்தான், ஆனால் முற்றிலும் அந்தரங்கமானது என்கிறது. இதில் உங்கள் இமெயில் பரிவர்த்தனைகளை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்றும் உறுதி அளிக்கிறது. இதைத்தான் நடுவழியில் கடிதத்தைப் பிரித்துப் படிக்காத தபால்காரர் போல் உங்கள் மெயிலுக்குள் எட்டிப்பார்க்காத நேர்மையான சேவை என்று வர்ணித்துக்கொள்கிறது. தனியுரிமையை விரும்பி இதற்கு மாற விரும்பினால் எந்தச் சிக்கலும் இல்லை, ஏற்கெனவே பயன்படுத்திவரும் இமெயில் செயலியிலேயே இதையும் பயன்படுத்தலாம் என்கிறது.

இதற்கான கட்டணம் ஆண்டுக்கு 29 டாலர். கூடுதலாக பத்து டாலர் எனில் ஒருவர் தனக்கான தனி இணையம் முகவரியையும் பெற்றுக்கொள்ளலாம்.

இலவச இமெயிலில் இருந்து சுந்ததர மெயிலுக்கு மாறுங்கள் என்கிறது சாவ்ரின்.

நெதர்லாந்தைச் சேர்ந்த இணைய முனைவோர் இந்த மெயில் சேவையை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் தனியுரிமை


இந்த மெயில் சேவை சிறந்தது என்று வாதிடவோ, இதைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கவோ செய்யவில்லை. ஆனால் இந்தச் சேவை முன்வைக்கும் கருத்தாக்கம் முக்கியமானது.

உங்கள் தரவுகளை நீங்களே கட்டுப்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும். உங்கள் இமெயில் முகவரிப் பெட்டி, உங்கள் வாழ்க்கைக்கான தரவுகளின் ஆவணம் போன்றது.  எனவே, உங்கள் இமெயில் பரிமாற்றத்தை உங்கள் பார்வைக்கானதாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தச் சேவை முன்வைக்கும் கருத்தாக்கம்.

இணைய யுகத்தில் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்தாக்கம்தான் இது.

இணையத்தில் இலவச சேவைக்கு பழகிய உள்ளங்களுக்கு கட்டண மெயில் சேவை என்பது கசக்கவே செய்யும்.

ஆனால், நம்முடைய தகவல்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இணைய நிறுவனங்களால் இஷ்டம்போல பயன்படுத்தப்படும் நிலையில், கட்டணத்துக்குத் தயார், கட்டுப்பாடு எங்களிடம் இருக்க வேண்டும் என சொல்லும் போக்கு வருங்காலத்தில் அதிகரிக்கலாம்.

அதிலும் புகைப்படங்கள் முதல் எல்லா வகையான கோப்புகளையும் கிளவுட் சேவைகளில் சேமித்து வைக்கும் யுகத்தில் நம்முடைய தகவல்கள் இணையவெளி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களின் தனியுரிமையை முக்கியமாக கருதுபவர்கள் அந்தத் தன்மையைக் காக்க கட்டணச் சேவையைப் பயன்படுத்த முன்வரலாம்.

ஃபேஸ்புக் பாதிப்பு


சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் உதாரணம் மூலம் தனியுரிமைக்கான தேவையை இன்னும் அழகாக புரிந்து கொள்ளலாம்.

பயனாளிகளின் உள்ளடக்கத்தைப் படித்து அதற்கேற்ற விளம்பரங்களை இடம்பெறச்செய்வதில் ஃபேஸ்புக் கூகுளையே மிஞ்சிவிட்டது என்றும் சொல்லலாம். சந்தேகம் இருந்தால் ஃபேஸ்புக் டைம் லைனுக்குப் பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைக் கொஞ்சம் கவனித்துப்பாருங்கள். எல்லாமே நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களுடன் தொடர்புடயவைதான். உங்கள் பகிர்வுகளை நண்பர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ ஃபேஸ்புக் சதா கவனித்துக்கொண்டே இருக்கிறது. இலவசத்துக்குக் கொடுக்கும் விலை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

விளம்பரம் மட்டும் அல்ல, செய்திகளையும் டைம்லைன் அருகே நுழைத்துக்கொண்டே இருக்கிறது. இது வசதியாகக்கூட இருக்கலாம். செய்திகளுக்கு என்று தனியே செய்தித் தளங்களை தேடிச்செல்லாமல் ஃபேஸ்புக்கிலேயே அவற்றைப் படிக்க முடிவது வசதியாக இருக்கலாம். ஃபேஸ்புக் விரும்புவதையும் இதைத்தான். ஆனால், நீங்கள் ஏன் எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கிலேயே பெற வேண்டும்? செய்திகளை உங்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் நாமாக தேடிச்செல்லும்போது நமக்கான செய்திகளை நாமே தீர்மானித்துக்கொள்ளாம். நம் மீதான செய்தித் திணிப்பையும் நிராகரிக்கலாம்.

நமது இணைய இருப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இது பற்றி எல்லாம் நாம் யோசிப்பது நல்லது.

இமெயில் திவால்

இமெயில் தொடர்பாக மேலும் ஒரு தகவல். இணைய உலகில் உலாவும்போது இமெயில் திவால் எனும் பதத்தை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டிருக்கலாம். அதென்ன இமெயில் திவால்? திவால் என்றவுடன் கடனாளியாவது பற்றி எல்லாம் நினைத்து மிரள வேண்டாம். இது இமெயில் நிர்வாகம் சார்ந்தது. இமெயில் பயன்பாடு அதிகரித்து அதன் சுமையும் கூடும்போது ஒரு கட்டத்தில் இமெயில்களைச் சரியாக நிர்வகிக்க முடியாமல் போகலாம். அப்போது இன்பாக்சில் படிக்கப்படாத, பதில் அளிக்கப்பட வேண்டிய மெயில்கள் எக்கச்சக்கமாகக் குவிந்து கிடக்கும். மெயில்களை படிக்கவும் நேரம் இருக்காது. அதுவே ஒருவித குற்ற உணர்வை ஏற்படுத்தும் என்றால் இன்னொரு பக்கம் புதிதாக மெயில்கள் வந்து கொண்டிருக்கும்.

இப்படி ஒரு நிலையில் என்ன செய்வது?

எல்லாவற்றையும் டெலிட் செய்யுங்கள்; மீண்டும் புதிதாக துவங்குங்கள்! இந்த முடிவு எடுத்தபிறகு, மன்னிக்கவும், இமெயில் சுமை தாங்க முடியாமல் பழைய மெயில்களை எல்லாம் டெலிட் செய்து விட்டேன், நீங்கள் முக்கிய மெயில் ஏதேனும் அனுப்பி பதிலுக்குக் காத்திருந்தால் தயவுசெய்து அதை மீண்டும் அனுப்பவும் என உங்கள் தொடர்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும். இவ்வாறு பழைய மெயில்களை நீக்கி புதிதாக துவக்குவதைத்தான் இமெயில் திவால் அறிவிப்பு என்கிறனர். இணைய வல்லுநரான பேராசிரியர் லாரன்ஸ் லெசிங் தான் இந்த யோசனையை முதலில் முன்வைத்து செயல்படுத்தியதாக கருதப்படுகிறது.

எதிர்கால இமெயில் ( புக்மார்க்)


நீங்கள் விரும்பினால் உங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ளலாம் தெரியுமா? இதற்கான இணையத்தளம் தான் https://www.futureme.org/

இந்தத் தளத்தில் இமெயிலை டைப் செய்து உங்கள் முகவரிக்கே வரச்செய்யலாம். எதிர்காலத்தில் எப்போது இந்த மெயில் வரவேண்டும் என தேதி, மாதம் மற்றும் ஆண்டை குறிப்பிட்டால் போதுமானது.

இதை உங்களுக்கான நினைவூட்டல் சேவையாக பயன்படுத்தலாம். வேறு சுவாரசியமான விதங்களிலும் பயன்படுத்தலாம். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

இணைய மொழி!

பிளாக்பெரி, ஐபோன் போன்ற பலபயன்பாட்டுச் சாதனங்கள் பணியில் இருப்பவர்களை 24 மணி நேரமும் அணுக வழி செய்கின்றன. இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். நீண்ட கால நோக்கில் இது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் ; இமெயில் வல்லுநர் பிரிட்டர் பேராசிரியர் டாம் ஜாக்சன்.

                     ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com