ஊரோடி வீரக்குமார் எனும் பெயரில் எழுதும் S.V.P.வீரக்குமார், தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி. எழுபதுகளில் தனது வேளாண்மை வாழ்க்கையைத் தொடங்கி, விவசாயம், கால்நடை குறித்து எழுதுவதை தனது பணியாகக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பிரபல வேளாண் இதழ்களில் கட்டுரைகள் எழுதுவதுடன், நிறைய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
சக உழவர்களின் வாழ்வுக்கான உந்துதலை ஏற்படுத்த, கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம், இயற்கை வேளாண்மை வளர்ச்சி மையம், சந்தை, பாரம்பரிய விதைகள் மையம் போன்ற முகநூல் குழுக்களில் தீவிரமாக எழுதி, எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார்.
மௌஸை கிளிக்கினால் அரிசியும் பால் பாக்கெட்டும் உற்பத்தி செய்ய இயலாது என்பதை வரும் தலைமுறைகள் உணர்ந்து, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பது இவரது விருப்பம்.