30. தடுக்காத ஊசி மருந்துகள்!

எந்த நோயைத் தடுப்பதற்காக அது கொடுக்கப்படுகிறதோ அந்த நோயை உண்டாக்கும் என்று நம்பப்படுகிற கிருமியைத்தான் அந்த மருந்து அல்லது ஊசி மூலம் குழந்தைக்கு உள்ளே அனுப்புகிறார்கள்!

வேக்ஸின் கொடுப்பது காட்டுமிராண்டித்தனமான பழக்கம். வேக்ஸினானது ஓர் அசிங்கம். ஓர் அசிங்கம் இன்னொரு அசிங்கத்தை நீக்கும் என்று நம்புவது முட்டாள்தனமானது.

 - மகாத்மா காந்தி (A Guide to Health என்ற தனது நூலில்)

வேக்ஸினா டாக்ஸினா

உங்கள் குழந்தைக்கு ஏதாவது காய்ச்சல், சளி வந்து காட்டுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி: தடுப்பூசியெல்லாம் போட்டாச்சா என்பதுதான். அதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் அவர் ‘ட்ரீட்மென்ட்’டை ஆரம்பிப்பார். ஏன்? அவை அவ்வளவு முக்கியம் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.

‘வேக்ஸின்’ என்று சொல்லப்படும் தடுப்பு மருந்துகளும் ஊசிகளும் நவீன வாழ்வின் தவிர்க்கமுடியாத, அத்தியாவசியமான அம்சங்களாகிவிட்டன. பத்து குழந்தைகளில் ஒன்பது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. சொட்டு மருந்துகள் வாய்க்குள் விடப்படுகின்றன. பெற்றோரின் விருப்பத்துடன். பெற்றோரின் அனுமதியுடன். பெற்றோரின் உதவியுடன். பெற்றோர் ஏன் விரும்புகிறார்கள்? இது என்ன கேள்வி? குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமல்லவா? போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராமல் தடுத்துவிடலாம் அல்லவா? பிசிஜி போட்டால் டிபி வராமல் தடுத்துவிடலாம் அல்லவா? பிசிவி போட்டால் நிமோனியா வராமல் தடுத்துவிடலாம் அல்லவா? எம்.எம்.ஆர். போட்டால் பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை போன்றவை வராமல் தடுத்துவிடலாமல்லவா? 

ஆம். குழந்தை பிறந்தது முதல் ஆறு வாரத்தில், ஒன்பது மாதத்தில், ஒரு ஆண்டு கழித்து - இப்படி காலக்கிரமப்படி போட வேண்டிய மருந்துகள், ஊசிகளின் பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ‘வேக்ஸின்’ கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து குழந்தையை டாக்டரிடம் காட்டப்போனால் போதும், மற்ற முடிவுகளை அவரே எடுத்துக்கொள்வார். என்ன ஊசி போட்டார், என்ன மருந்து கொடுத்தார் என்று உங்களிடம் சொல்லலாம். ஆனால், காட்டமாட்டார். சொல்வது வேறு, காட்டுவது வேறு அல்லவா? (அது ஒரு பத்து பக்கங்களுக்கும் மேல் இருக்கும் ஒரு சமாசாரம். அதில் contraindications  என்ற பெயரில் விளைவுகளைப் பட்டியலிட்டிருப்பார்கள். சொறி, காய்ச்சல், மயக்கம், அரிப்பு, சிவந்துபோதல், டிபி வருதல் என எல்லாம் அதில் போட்டிருக்கும்).

சில பெரிய மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன் டாக்டர்களோ அல்லது அவர்களின் உத்தரவின் பேரில் செவிலியர்களோ தடுப்பூசி போட்டுவிடுகிறார்கள். அதற்கான அனுமதியைக்கூட பெற்றோரிடம் கேட்பதில்லை. ஒருவேளை பிரசவத்துக்காக சேர்க்கும்போதே அந்தப் படிவத்தில் அந்த விஷயமும் இருக்குமோ என்னவோ. அதற்கும் சேர்த்துக் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்களோ என்னவோ. மேஜை மீது வைக்கப்பட்ட குழந்தை வீர் வீர் என வலியில் விறைக்க விறைக்க தடுப்பூசி குத்துவதைப் பார்ப்பதைப்போல ஒரு கொடுமை கிடையாது!

உண்மையிலேயே தடுப்பு மருந்துகள் கொடுப்பது, தடுப்பூசிகள் போடுவதெல்லாம் சரியா என்று யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிக்க வேண்டும். ஏனெனில் இது நம் உயிரைவிட மேலான குழந்தைகளின், நனவான நம் வண்ணக் கனவுகளின், உயிருள்ள கவிதைகளின் உயிர் சம்பந்தப்பட்டது.

நான் பள்ளிக்கூடப் பையனாக இருந்த காலகட்டத்தின் ஒரு பகுதி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது மறக்கமுடியாத ஒரு ‘ஹாரர் ஷோ’! என்னை வலிக்க வலிக்க, துடிக்கத் துடிக்க வைத்த கணங்கள் அவை. அப்போது எனக்கு என்ன வயது என்றுகூட நினைவில் இல்லை. ஆனால் என் தாய்மாமா ஒருவர் நான் அசைந்துவிடாதவாறு என்னைத் தூக்கி இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். நான் கைகால்களை உதறி, கதறிக்கொண்டிருந்தேன். ஏன்? என் கையில் அம்மை குத்திக்கொண்டிருந்தார்கள். அதாவது, அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான ஏற்பாடாம். ஆனால் அது ஊசியல்ல. ஊசியெல்லாம் நவீன காலத்தின் ஆயுதங்களாகும். அப்போதெல்லாம் கற்கால ஆயுதங்கள்தான்.

அடுப்பூதும் குழல் மாதிரி எதையோ நீளமாக எடுத்து என் தோள்பட்டைக்குக் கீழே கையின் சதைப்பகுதியில் வைத்து, சுவரில் ’ட்ரில்லிங்’ பண்ணுவது மாதிரி, நான் கதறக்கதற திருகிக்கொண்டே இருந்தார்கள். நெருப்பை வைத்து தீய்ப்பதுபோல் இருந்தது. இரண்டு கைகளிலும் தீத்திருகல்கள். இன்னும் அந்தத் தழும்புகள் என் கைகளின் மேல்புறம் உள்ளன. அவை நிரந்தரமான தன்மை கொண்டவை. என் உடல் இருக்கும்வரை அதைப் பார்க்கலாம். கொழுந்துவிட்டு எரியும் என் கடந்த காலம் அது!

அதனால் எனக்கு என்ன நன்மை ஏற்பட்டது? ஒன்றுமில்லை. தீமைதான் ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் வந்து அவதிப்பட்டேன். என் தாய்மாமாவை என்னால் வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவே முடியவில்லை. அன்று அம்மை குத்தியவர்கள் மீது ஏற்பட்ட அச்சம் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலம் வரை இருந்தது. உயர்நிலைப் பள்ளிக்கு தடுப்பூசி போடுபவர்கள் வந்தால் நான் உடனே சுவரேறிக் குதித்து ஓடிவிடுவேன்! க்ளாஸ் லீடர், கோஎஜுகேஷன் வகுப்பு என்றெல்லாம் பார்க்காமல், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் ஓடிப்போவேன்! வெட்கப்பட்டால் உயிர் தப்ப முடியுமா என்ன?!

தெய்வாதீனமாக அந்த அம்மை தடுப்புக் குத்தலால் நான் சாகாமல் பிழைத்துக்கொண்டேன். அதனால்தானோ என்னவோ இப்போது உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சரி, அப்படியானால் நான் என்ன சொல்லவருகிறேன்? வேக்சினேஷன் என்று அறியப்படும் நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளெல்லாம் போடக்கூடாதென்று சொல்லவருகிறேனா?

ஆமாம். ஏன்? ஏன் என்பதற்கான என் பதிலைத் தெரிந்துகொள்ளும் முன் தடுப்பு மருந்துகள் என்ன செய்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகளுக்குள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்வோமா? வாருங்கள்.

வேக்ஸின்களுக்கு உள்ளே இருப்பது என்ன?

கிருமிகளால் நமக்கு நோய் வராமல் தடுப்பதற்கு வேக்ஸின்கள் கொடுக்கப்படுகின்றன என்கிறது மருத்துவ உலகம். கிருமிகளைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டோம். கிருமிகள் தீமை செய்வதில்லை என்பதால் வேக்ஸினேஷன் வேண்டாம் என்று சொல்ல வருகிறேனா? அப்படியில்லை. வேக்ஸின்களில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதிர்ச்சியும் அடையலாம். 

சமீபத்தில் எனக்கு ஒரு பேரனும் ஒரு பேத்தியும் பிறந்தார்கள். அவர்களுக்குத் தடுப்பூசியோ மருந்தோ கொடுக்கவேண்டாம் என்றும், அதற்கான காரணங்களையும் விவரமாக என் மருமகனுக்கும் மகளுக்கும் எடுத்துச் சொன்னேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள். என் பேரக் குழந்தைகளுக்கு வேக்ஸின்கள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் புரிந்துகொண்டதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களுக்கு எதை விரும்புகிறீர்களோ, அதைப் போன்றதையே அடுத்தவருக்கும் விரும்புங்கள் என்று நபிகள் நாயகத்தின் பிரபலமான நபிமொழி ஒன்றுண்டு. என் பேரக் குழந்தைகளுக்கு நான் என்ன செய்தேனோ அதையே இவ்வுலகக் குழந்தைகள் அனைவருக்கும் செய்ய விரும்புகிறேன்.

அப்படியானால் வேக்ஸின்களில் என்னதான் உள்ளது?

எந்த நோயைத் தடுப்பதற்காக அது கொடுக்கப்படுகிறதோ அந்த நோயை உண்டாக்கும் என்று நம்பப்படுகிற கிருமியைத்தான் அந்த மருந்து அல்லது ஊசி மூலம் குழந்தைக்கு உள்ளே அனுப்புகிறார்கள்! நன்றி கலந்த வணக்கம் என்று சொல்வது மாதிரி அதிர்ச்சி கலந்த உண்மை இதுதான்!

இன்னும் கொஞ்சம் விவரமாகவே சொல்கிறேனே. உதாரணமாக, போலியோ நோயை உண்டாக்கும் கிருமிகளைத்தான் போலியோ சொட்டு மருந்துக்குள் வைத்து வாய்க்குள் அனுப்புகிறார்கள். நல்லவேளை, கிருமி ராட்சசனை அனுப்பாமல், மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட கிருமிக் குழந்தையை மட்டுமே அனுப்புகிறார்கள். புரியவில்லையா? கிருமியின் வீரியத்தையெல்லாம் குறைத்து, அது குற்றுயிரும் கொலையுயிருமாக (இது சரியா?) இருக்கும்போது அதை உள்ளுக்கு அனுப்புகிறார்கள். ஏன்?

இந்தக் கேள்விக்கான பதிலை டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் மிக அழகாக ஒரு உரையாடல் மூலம் ‘நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள்’ என்ற தன் நூலில் சொல்கிறார். அதை அப்படியே இங்கே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.

“உங்களிடம் கிருமிகள் இருக்கின்றன என்று ஆங்கில மருத்துவர்கள் பயமுறுத்துகிறார்கள். நீங்கள் ஆங்கில மருத்துவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி நிறுத்துங்கள். இப்பொழுது கேளுங்கள். நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளும், அவர்களின் பதில்களும் இவ்வாறு தான் அமையும்.”

கேள்வி: எங்கள் உடலில் நோய்க்கிருமிகள் இருக்கின்றன என்று கூறுகிறீர்களா? 

பதில்: ஆம்

கேள்வி: அதனால் தவறு என்ன? 

பதில்: அது நோய்களை உருவாக்கும்

கேள்வி: எது நோய்களை உருவாக்கும்? 

பதில்: ஒவ்வொரு நோய்க்கிருமியும் ஒரு குறிப்பிட்ட நோயை உருவாக்கும். உதாரணமாக டி.பி. கிருமிகள் டி.பி. நோயை உருவாக்கும். மஞ்சள்காமாலை கிருமிகள் மஞ்சள் காமாலையை உருவாக்கும்.

கேள்வி: டி.பி. நோயிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது? 

பதில்: டி.பி. நோயை உருவாக்கக்கூடிய அதே நோய்க்கிருமிகளைக் கொடுக்க வேண்டும்

கேள்வி: மஞ்சள்காமாலை நோயிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது?

பதில்: மஞ்சள்காமாலையை உருவாக்கக்கூடிய அதே நோய்க்கிருமிகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். 

கேள்வி: நோய்க்கிருமிகளை உடலுக்குள் செலுத்துவதனால் என்ன பலன்? 

பதில்: உங்கள் உடலில் குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

கேள்வி: நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகுமா? அல்லது நோய்க்கிருமிகளுக்கு எதிராகவா?

பதில்: மன்னிக்கவும். நோய்க்கிருமிகளுக்கு எதிராகத்தான்.

கேள்வி: நோய்க்கிருமிகளை எவ்வாறு கொடுப்பீர்கள்? நோய்க்கிருமிகள் நோயை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்களே? நோய்களுக்குக் காரணம் நோய்க்கிருமிகள்தான் என்று கூறுபவர்களும் நீங்கள் தானே? 

பதில்: ஆம். நோய்களுக்குக் காரணம் நோய்க்கிருமிகள்தான்.

கேள்வி: பிறகு, ஏன் நோய்க்கிருமிகளைத் தடுப்பூசி என்ற பெயரில் உடலுக்குள் செலுத்துகிறீர்கள்? அது நோய்களை உருவாக்காதா?

பதில்: உங்கள் கேள்வி சரிதான். நாங்கள் நோய்க்கிருமிகளை அதே வீரியத்தில் கொடுப்பதில்லை. அதனுடைய வீரியத்தை குறைத்துத்தான் நாங்கள் கொடுக்கிறோம். ஆகவே, அது நோயை ஏற்படுத்தக்கூடிய திறன் பெறாததாகத்தான் இருக்கும்.

கேள்வி: நோயை உருவாக்கக்கூடிய திறன் பெறாத ஒரு நோய்க்கிருமி நமக்கு நோயைத் தோற்றுவிக்காது இல்லையா?

பதில்: ஆம். நோயைத் தோற்றுவிக்காது.

கேள்வி: நோயைத் தோற்றுவிக்காத, பலவீனமான, ஏறக்குறைய இறந்துவிட்ட ஒரு கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தி எவ்வாறு உருவாக முடியும்? அதுதான் நோயையே தோற்றுவிக்க முடியாதே? பிறகு எப்படி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்? நோய் என்பது கிருமிகள் வீரியத்துடன் இருந்தால்தான் உருவாகும். அந்த வீரியமிக்க கிருமிகளுக்கு எதிராகத்தான், வீரியமிக்க நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாக முடியும். அதைப் போன்றே வீரியம் குறைந்த மிக பலவீனமான நோய்க்கிருமிக்கு எதிராக, அதே அளவுக்கு பலவீனமான, எந்தத் திறனும் இல்லாத, மிகவும் வீரியம் குறைந்த எதிர்ப்பு சக்தியே உருவாகும். இதற்கு உங்கள் பதில் என்ன? அதாவது, நீங்கள் கொடுக்கும் எந்த ஒரு தடுப்பு ஊசிக்கும், மருந்துகளுக்கும் எந்த சக்தியும் கிடையாது. அப்படித்தானே? 

பதில்: என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதைத்தான் நாங்கள் கூற முடியும். எங்கள் மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். உங்கள் கேள்வியில் உண்மை இருக்கிறது. இதற்கான பதில் இப்போது எங்களிடம் இல்லை என்பதையும் உணர முடிகிறது.

கேள்வி: சுய உணர்வும், சுய சிந்தனையும் இல்லாமல் எப்படி ஒரு மருத்துவம் மனிதர்களுக்கு நன்மையை பயக்க முடியும்?

பதில்: மருத்துவப் புத்தகங்களில் என்ன எழுதியிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் கூறுகிறோம்.

கேள்வி: அதைத்தான் நீங்கள் செய்யவும் செய்வீர்களா? 

பதில்: நாங்கள் ஏவப்பட்ட பிரகாரம் செய்கிறோம்.

கேள்வி: உங்களுடைய ஆங்கில மருத்துவத்தில் இவ்வளவு தவறுகளும், நம்பிக்கைக்குக் தகுதியில்லாத விஷயங்களும் இருந்தால் கூடவா நீங்கள் அதை மக்களிடம் பிரயோகிப்பீர்கள்? நியாயமாக நீங்கள் கூறுங்கள். அதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? 

பதில்: செய்யக்கூடாதுதான்.

கேள்வி: இப்போது மஞ்சள்காமாலை நோய்க்குத் தடுப்புக் கிருமிகள் ஊசிகள் மூலமாகச் செலுத்துகிறோம் என்று செய்துகொண்டிருக்கும் செயலைச் செய்யலாமா?

பதில்: கூடாதுதான்.

கேள்வி: டி.பி. நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக டிபி நோய்க் கிருமிகளை வைத்திருக்கிறோம் என்று கூறுகிறீர்களே, அது டி.பி.யைத் தடுக்கும் என்று இனியும் நீங்கள் கூறுவீர்களா? 

பதில்: கூற முடியாதுதான்.

கேள்வி: போலியோவை இவ்விதமே உங்களால் தடுக்க முடியுமா? 

பதில்: உங்களுடைய கேள்விகளுக்கு அடிப்படையில் எங்களிடம் இப்போதைக்கு பதில் இல்லை.

இவ்விதமாகச் செல்கிறது அந்த கற்பனை உரையாடல். அதன் மூலமாக ஒரு உண்மையை மிகத் தெளிவாக நமக்கு டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் விளக்குகிறார். ஒவ்வொரு வேக்ஸினுக்குள்ளும் அந்த நோயை உண்டாக்கும் கிருமிகள்தான் வீரியமற்ற தன்மையில் நம் உடலுக்குள் அனுப்பப்படுகின்றன.

இதுமட்டுமல்ல. தடுப்பு மருந்து மற்றும் ஊசிகளுக்குள் கிருமி மட்டுமில்லை. அவை எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற விவரத்தைக் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு வாந்தி வரலாம். அப்படி என்ன அசிங்கம் உள்ளது? ஆமாம். அசிங்கம்தான் உள்ளது. மகாத்மா காந்தி மிகச் சரியாகத்தான் வேக்ஸின்களை அசிங்கம் என்று கூறியிருக்கிறார். உதாரணமாக அம்மை வராமல் தடுக்கும் அம்மை நோய்த் தடுப்பு மருந்து எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்துப் பாதுகாப்பார்கள். இந்தச் சீழை பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்தப் புண்களுக்குள் செலுத்துவார்கள். இப்புண்களின் வழியே அதிகமான சீழ் பிடித்து அது வெளியேறத் தொடங்கும். பசுக்களின் சீழை எடுத்து அதோடு சில ரசாயனங்களைக் கலந்து அம்மை மருந்து தயாரிக்கப்படுகிறது.

அடுத்தது போலியோ சொட்டு மருந்து தயாரிப்பு. போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகள் குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. சிறுநீரகச் சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாகத் தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குரங்குகள் உரிய சோதனைகளுக்குப் பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இவ்வாறு 1950-களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV 40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரியவந்தது. சொட்டு மருந்தின் மூலம் பரவும் இந்த வகை தாக்கத்தால், பல வருடங்கள் கழித்து மூளை, கல்லீரல், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்று நோய் உருவாகவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள், பக்கம் 26).

சீழ், பசு, குரங்கு வழியாக மனிதர்களுக்கு! அதுவும் நம் அன்புப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு! இதனால்தானோ என்னவோ ஒரு மருத்துவரிடம் வேக்ஸின்கள் பற்றிப் பேசுவதும் ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் சைவ உணவு பற்றிப் பேசுவதும் ஒன்று என்று சொன்னார் பெர்னார்ட் ஷா!

சரி, இப்படி கொடுக்கப்படும் வேக்ஸின்கள் உண்மையிலேயே நோயைத் தடுக்குமா? அல்லது நோயை உண்டாக்குமா? அல்லது வேறு பிரச்னைகளை ஏற்படுத்துமா?

பார்க்கத்தானே போகிறோம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com