52. நமக்குள் ஒரு ஞானி - 4

நோயாக இருந்தால், அது கேன்ஸராயினும் சரி, எய்ட்ஸாயினும் சரி, உடலே சரி செய்துகொள்ளும். ஆனால், உடல் சரி செய்துகொள்வதற்கான சூழ்நிலையை மட்டும் நாம்தான் உருவாக்க வேண்டும்.
டாக்டர்களும் வைத்தியர்களும் தருகின்ற எதையும் என்னால் சாப்பிட முடிவதில்லை. அவர்கள் மக்களின் கஷ்டத்தைப் பணம் பண்ணுகிறார்கள். அவர்களின் பணம் ரத்தத்தால் தோய்ந்ததுபோல் உள்ளது.ராமகிருஷ்ண பரமஹம்சர் (ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு, பக்கம் 488).

நண்பனின் எதிரி, எதிரியின் நண்பன்

ஹீமோகுளோபின் பற்றி ஏற்கெனவே கொஞ்சம் பார்த்தோம். அது எப்படி அற்புதமான முறையில் உருவாகிறது, எப்படி ஆக்ஸிஜனைத் தசைகளுக்குக் கொண்டுசெல்கிறது, அப்படிக் கொண்டுசெல்ல எப்படி அது ஹீம் க்ரூப் என்ற இடுக்கிகளைப் பயன்படுத்துகிறது என்றெல்லாம் பார்த்தோம். அது தொடர்பாக இன்னொரு முக்கியத் தகவலை இப்போது பார்க்கப் போகிறோம். அது என்ன? அதுவும் ஏற்கெனவே சொன்ன விஷயம்தான். ஆனால் கொஞ்சம் ஆச்சரியமானது. அது என்ன?

நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும் ஹீமோகுளோபின், நுரையீரலுக்குள் கார்பன்-டை-ஆக்ஸைடை விட்டுச் செல்கிறது. சரி, இதிலென்ன விஷேஷம் என்ன என்கிறீர்களா? அதில் விஷேஷம் ஒன்றுமில்லை. ஆனால், அங்கிருந்து அது நேராக நம் உடலின் தசைகளுக்குச் செல்கிறது. தசைகளில் உள்ள செல்களெல்லாம் உணவின் ஊட்டச்சத்துகளையெல்லாம் எரித்து கார்பன்-டை-ஆக்ஸைடை உருவாக்கிவைத்திருக்கும். அங்கே செல்லும் ஹீமோகுளோபின், நுரையீரலிலிருந்து கொண்டுவந்த ஆக்ஸிஜனை அங்கே விட்டுவிட்டு, கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு மீண்டும் நுரையீரலுக்குச் செல்கிறது. அங்கே போய், மீண்டும் கார்பன்-டை-ஆக்ஸைடை அங்கே விட்டுவிட்டு, அங்கிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு போகிறது! இப்படியே மாற்றி மாற்றி செய்துகொண்டிருக்கிறது!

இதில் விசேஷம் என்ன? எங்கே போனால் என்ன செய்ய வேண்டுமென்று அதற்குத் தெரிந்திருப்பதுதான்! கடைக்குப் போய் ஐந்தாறு பொருள்களை வாங்கிவரச் சொன்னபோதெல்லாம், நான் முக்கியமான பொருளை மறந்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், ஹீமோகுளோபினுக்கும் நம்மைப் போன்ற மறதி ஏற்பட்டால் நம் கதி என்னாகும் என்று நினைத்துப் பாருங்கள்! அட, மறக்கக்கூட வேண்டாம். இங்கே கொடுக்க வேண்டிய பொருளை அங்கேயும், அங்கே கொடுக்க வேண்டிய பொருளை இங்கேயும் கொடுத்தால் போதும், அவ்வளவுதான்! நுரையீரலுக்கு நண்பனாக இருக்கும்போது தசைகளுக்கு எதிரி போலவும், தசைகளுக்கு நண்பனாக இருக்கும்போது நுரையீரலுக்கு எதிரி போலவும் தோன்றும் ஹீமோகுளோபின், உண்மையில் யாருக்குமே எதிரி அல்ல. உயிர் காப்பான் தோழன் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் நம் உயிர் காப்பது ஹீமோகுளோபின்தான் போலுள்ளது!

நம் உடம்பில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 900 மில்லியன் சிவப்பணுக்கள் உருவாகின்றன. ஒரு சிவப்பணுவில் மட்டும் 300 மில்லியன் ஹீமோகுளோபின் மாலிக்யூல்கள் உருவாகின்றன! அப்படியானால், ஒவ்வொரு கணமும் கோடிக்கணக்கான ஹீமோக்ளோபின்கள் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் உள்ளன!

லைசோசோம் அடியாட்கள்

லைசோசோம் என்பதும் ஒரு என்ஸைம்தான். அதன் முக்கிய வேலை காலி செய்வது! ஒரு செல்லின் அளவைக் குறைத்து மீண்டும் அதைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது, சில செல்களைக் கிழித்து வழி உண்டாக்கி புதிய உறவுகளுக்கு வழி அமைத்துக் கொடுப்பது – இப்படிப்பட்ட வேலைகளை லைசோசோம்கள் செய்கின்றன. என்ன, புரியவில்லையா?

ஒரு பெண் கருவுற்ற பிறகு, அவளது கர்ப்பப்பை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகும் அல்லவா? அது இயற்கைதான். கரு வளர வளர அதுவும் பெரிதாகித்தானே ஆக வேண்டும்? சரி, ஆனால் குழந்தை பிறந்த பிறகு? கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டுமல்லவா? அப்படியானால், பெரிதாகிக்கிடக்கும் கர்ப்பப்பையை மீண்டும் பழைய அளவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதற்குத்தான் லைசோசோம்கள் பயன்படுகின்றன. சில சிறப்பு என்ஸைம்களைச் சுரந்து, பத்துப் பதினைந்து நாட்களில் கர்ப்பப்பையை பழைய நிலைக்கு, பழைய அளவுக்கே போகும்படிச் செய்கின்றன லைசோசோம்கள்! இது கரு உருவான பிறகு.

கரு உருவாவதற்கு, முதலில் ஒரு ஆணின் விந்து பெண்ணின் கரு முட்டையைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைய வேண்டுமல்லவா? அதற்கும் உதவுவது இந்த லைசோசோம்கள்தான். விந்தின் தலையில் இருப்பது லைசோசோம்தான்! கரு முட்டையின் மேற்புறத் தோலைக் கிழித்து விந்து உள்ளே நுழைய உதவுவது லைசோசோம்தான். கரு உண்டாக கருமுட்டையைக் கிழிப்பதும் லைசோசோம், குழந்தை பிறந்த பிறகு கர்ப்பப்பையை பழைய நிலைக்குக் கொண்டுபோவதும் லைசோசோம்!

சர்ஃபாக்டன்ட்

காற்று இருந்தால் மட்டும் ஒருவர் உயிர் வாழ்ந்துவிட முடியாது. அந்தக் காற்றை நாம் சுவாசிக்க வேண்டுமல்லவா? சுவாசிப்பதற்கு மூக்கு, சமயத்தில் வாய், உள்ளே நுரையீரல் – எல்லாம் வேண்டுமல்லவா? ஆமாம். ஆனால், அது மட்டும் போதாது. நம் நுரையீரலுக்குள் ஏறத்தாழ 300 மில்லியன் குட்டிக்குட்டி காற்றுப்பைகள் உள்ளன. அவற்றுக்கு அல்வியோலை (alveoli) என்று பெயர். (அல்வியோலஸ் என்பது ஒருமை).

அந்த ஒவ்வொரு அல்வியோலஸுக்கு மேலேயும் மேல்பூச்சுபோல ஒரு அமைப்பு இருக்கும். கொஞ்சம் திரவ நிலையில் இருக்கும் அதைச் சுரந்து உருவாக்குவது அல்வியோலைதான். அதற்கு சர்ஃபாக்டன்ட் (surfactant) என்று பெயர். தமிழில் இதற்கு என்ன பெயர் என்று தேடினேன். ‘பரப்பிழுவிசைக் குறைப்பி’ என்று போட்டிருந்தது! என்ன நீங்கள் சபிக்கக்கூடாது என்பதால் ஆங்கிலப் பெயரையே பயன்படுத்துகிறேன்.

நாம் ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் அல்வியோலை திறந்து திறந்து மூட வேண்டும். அதற்கு உதவுவதுதான் இந்த சர்ஃபாக்டன்ட். இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் இது உருவாகிறது! அப்படியானால், குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு இது இருக்காது! அப்படியானால், அந்தக் குழந்தை பிறந்தவுடன் மூக்கால் மூச்சுவிட வேண்டுமல்லவா? அதற்கான வசதி இல்லாததால், அதாவது சர்ஃபாக்டன்ட் இல்லாததால், மூச்சுவிட முடியாமல் குழந்தை இறந்துபோகலாம்! ஆனால், இப்படி நடப்பது அரிதினும் அரிது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

ஒற்றுமை ஓங்குக

நமக்குள்ளிருக்கும் கோடிக்கணக்கான செல்களும் ஒன்றாக இணைந்து அன்புடனும் ஒற்றுமையுடனும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் இயங்கவோ இருக்கவோ முடியும். செல்கள் ஒன்றோடொன்று கோபித்துக்கொண்டோ, பகைமை பாராட்டிக்கொண்டோ இருந்தால் நம்மால் இயங்க முடியாது. நான் தலையில் உள்ளவன், நீ காலில் உள்ளவன், நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்றெல்லாம் வேறுபாடு பேச முடியாது. ஜாதி, மதம், நிறம், இனமெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான் கோடிக்கணக்கான செல்கள் பின்பற்றும் வேதமாகும். செல்களுக்கு இடையே செய்தியைக் கொண்டுபோகவும் கொண்டு வரவும் உருவாக்கப்படும் செய்தியாளரின் பெயர்தான் ஹார்மோன்!

ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன உருவாக வேண்டும், எவ்வளவு உருவாக வேண்டும், எங்கே உப்பு வேண்டும், எங்கே சர்க்கரை வேண்டும் என்றெல்லாம் சொல்வது இந்த ஹார்மோன்கள்தான். ஹார்மோன் மட்டும் இல்லாவிட்டால் உடலில் ஒழுங்கு இருக்காது. சமநிலை இருக்காது. எல்லாமே குழப்பமாகி உடல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். நம்முடைய ரத்த அழுத்தத்திலிருந்து நம்முடைய வளர்ச்சிவரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது இந்த ஹார்மோன்கள்தான்!

ஆக்ஸிடாக்சின் என்ற ஒரு ஹார்மோன் வேலை செய்யத் தொடங்கியதும்தான் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும்! மூளைப் பகுதியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்துதான் இந்த ஹார்மோன் வருகிறது. அது வந்தவுடன்தான், அம்மாவின் கருப்பை தசைகளுக்கும் மார்பகங்களுக்கும் செய்திகள் அனுப்பப்படுகின்றன! ஒன்று குழந்தை பிறக்க, இன்னொன்று பால் சுரக்க!

ஆக்ஸிடாக்ஸின் மாதிரி ஆயிரக்கணக்கான ஹார்மோன்கள் உள்ளன. நம் உடல் சரியாக வேலை செய்ய அவையே உதவுகின்றன. அவைதான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றன; அவைதான் செயல்படுத்துகின்றன; மற்ற செல்களோடு பேசுகின்றன; தேவையான சுரப்புகளைத் தூண்டுகின்றன – இப்படி ஏகப்பட்ட முக்கிய வேலைகளை ஹார்மோன்கள்தான் பார்க்கின்றன.

தண்ணீர் தண்ணீர்

நமது உடலில் உள்ள தண்ணீரின் அளவு ஒரு துளியளவு கூடினாலும் குறைந்தாலும் நமது செல்களுக்குத் தெரிந்துவிடும். அப்படிக் கண்டுபிடிக்கின்ற முக்கியப் பகுதி ஒன்று நமது மூளையில் உள்ளது. பாதாம் கொட்டை அளவு இருக்கும் அதன் பெயர் ஹைபோதலாமஸ். ஹைபோதலாமஸ் என்றால் ‘தலாமஸின் கீழே’ என்று அர்த்தம். மூளையில் ஹைபோதலாமஸ் இருக்கும் இடத்தைப் பார்த்தால் இது புரியும்.

இந்த ஹைபோதலாமஸ், பல முக்கியமான வளர்சிதை மாற்றங்களுக்கு உதவி செய்கிறது. முக்கியமாக, நமது ரத்தத்தில் எவ்வளவு நீர் கலந்துள்ளது என்று அது கணக்கு வைத்துக்கொள்கிறது! தேவையான தண்ணீரின் அளவு கொஞ்சம் குறையும்போது, நமது ரத்த அழுத்தம் கொஞ்சம் உயரும். உடனே நம் இதயத்தில் உள்ள சில உயிரணுக்கள் ஹைபோதலாமஸுக்கு செய்தி அனுப்பிவிடும். உடனே, ஹைபோதலாமஸ் தனக்குக் கீழே பட்டாணி அளவு இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிக்குத் தகவல் அனுப்பிவிடும். பாதாம்கொட்டை பட்டாணிக்குச் சொன்னவுடனே, அது ADH என்ற ஒரு ஹார்மோனைச் சுரக்க ஆரம்பிக்கும்.

நமது ரத்த ஓட்டம் வழியாக அந்த ADH நம் சிறுநீரகங்களுக்குச் செல்லும். ஒரு பூட்டினுள் சாவி பொருந்திக்கொள்வதுபோல, அந்த ADH-ம் சிறுநீரகங்களுக்குள் பொருந்திக்கொள்ளும். அல்லது சிறுநீரகங்கள் பொருத்திக்கொள்ளும். பூட்டுக்குள் சாவியை வைத்தால் என்ன, சாவிக்குள் பூட்டை வைத்தால் என்ன, எல்லாம் ஒன்றுதானே? இது நடந்தவுடன், சிறுநீரகம் தன் தண்ணீரைச் சேமிக்க ஆரம்பித்துவிடும், இழந்த நீர்ச்சத்தை சரிசெய்ய. நமக்கு தாகமெடுத்தாலும் மூளைக்கு அறிவிப்பது இந்த ஹார்மோன்தான்.

இந்த நுட்பமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கவில்லையென்றால், நாம் தினமும் 15 முதல் 20 லிட்டர் வரை தண்ணீர் குடித்தால்தான் தாகத்தால் சாகாமல் இருக்க முடியும்!

இந்த நிகழ்ச்சி ஒரு நாளைக்கு பல நூறு தடவை நம் உடலில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது, நமக்குத் தெரியாமலே!

ஹார்மோன்களுக்கு நாம் ரொம்ப கடமைப்பட்டுள்ளோம். ஒரு ஆணுக்கு கம்பீரமான ஆண் குரலும், பெண்ணுக்கு இனிமையான பெண்குரலும், ஆணுக்கு தாடியும், பெண்ணுக்கு கூந்தலும் வளர்வதற்கும் ஹார்மோன்கள்தான் காரணம். அப்படியானால், நாம் இருப்பது ஒரு பெண்ணுக்குள், அல்லது ஒரு ஆணுக்குள் என்று ஹார்மோன்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இறைவனின் அதிசயங்களுக்கு அளவே இல்லை. ஆனால், சில மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு மார்பகங்களே இல்லையாம்! ஆண்களைப்போல தட்டையான நெஞ்சு இருக்கிறதாம்! ஏன் அப்படி? இயற்கைக்கு மாறாகவும் ஹார்மோன்களுக்கு எதிராகவும் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று ‘திருமணம்’ செய்துகொண்டு ‘வாழ்க்கை’நடத்த முயற்சிப்பதால், ஹார்மோன்கள் கடுப்பாகி பழிவாங்குகின்றன போலும்!

இன்சுலின் சங்கிலி

இன்சுலின் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி சர்க்கரை வியாதி பற்றிய கட்டுரையிலேயே பார்த்தோம். அந்த இன்சுலினும் ஒரு ஹார்மோன்தான். இதில் விசேஷம் என்னவெனில், இன்சுலினானது 51 அமினோ ஆஸிட்களால் ஆக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வரிசையில் அவை உருவாக்கப்பட வேண்டும். வரிசை மாறினால் இன்சுலின் கிடைக்காது! இதுவரை உலகில் உருவான எல்லா மனிதர்களின் உடல்களிலும் உருவான இன்சுலின் அனைத்தும் இந்த ஃபார்முலாவில்தான் உருவாகியுள்ளது! இந்த சூத்திரத்தின்படிதான் உருவாக வேண்டும் என்று இன்சுலினுக்குச் சொன்னது யார்? பிரபஞ்ச சூத்திரதாரியான இறைவன்தான்!

எங்கும் என்ஸைம்கள்

என்ஸைம்கள் என்பவை புரோட்டீன் மாலிக்யூல்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம். என்ஸைமின்றி உயிருடன் இருக்க முடியாது. எந்த வேகத்தில் ஒருவர் செயல்பட வேண்டும் என்பதையும் என்ஸைம்கள்தான் முடிவு செய்கின்றன. இல்லையெனில், ஐந்து விநாடிகளில் படிக்க முடிகிற ஒரு விஷயத்தை நாம் படித்து முடிக்க 1500 ஆண்டுகளாகுமாம்!

இப்படி உடலைப் பற்றி, அதன் உள்ளே இருக்கும் கோடிக்கணக்கான செல்களையும், அவற்றின் வியக்கவைக்கும் அறிவையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பல புத்தகங்கள் எழுதலாம். இது ஒரு சின்ன குறிப்புதான். நமது உடலானது நம்மைவிட அறிவானது என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆரோக்கியம் பற்றி நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆரோக்கியம் பற்றிய கவலையை விட்டு வெளியே வருவதுதான். ஏனெனில், மனம் எப்படி உடலை பாதிக்கிறது என்று ஏற்கெனவே பார்த்தோம். எனவே, கவலையும் அச்சமும் இன்றி நம் மனதை வைத்துக்கொண்டால், நம்பிக்கையுடன் இருந்தால், அதுவே தேவைப்படும் விதத்தில் ஆரோக்கியமாக உடலை மாற்றவல்லதாக உள்ளது என்பதையும் விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது.

பல ஆராய்ச்சி நூல்களில் இருந்தும், மனசாட்சியுள்ள பல டாக்டர்கள், ஹீலர்கள், நண்பர்கள் ஆகியோரின் ஆடியோ, வீடியோக்கள், புத்தகங்களில் இருந்தும், என் சொந்த அனுபவத்திலிருந்தும் எனக்குப் புரிந்ததை உங்களுக்கும் புரியவைக்க என்னால் ஆன விதத்தில் முயன்றுள்ளேன். அந்த மனிதர்களுக்கும், நூல்களுக்கும் நன்றிகள்.

நான் கொடுத்த விஞ்ஞானபூர்வமான தகவல்களில் தவறு இருந்தால் அதை திருத்திக்கொள்ளலாம். ஆனால் அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை. உடலே உடலைப் பார்த்துக்கொள்ளும் என்ற ஞானமே அடிப்படையானது. மருந்துகளும், மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சைகளும் நம்மை ஆரோக்கியமானவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக, நோயாளிகளாகவே வைத்து கஷ்டப்படுத்திக்கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உடலுக்கு நன்மை செய்கின்ற, அல்லது தீங்கு செய்யாத மாற்று மருத்து சிகிச்சை முறைகள் எத்தனையோ உள்ளன. அதேபோல, மருந்தில்லா மருத்துவமும் பிரபலமாகிவிட்டது. கேன்ஸர், எய்ட்ஸ் போன்ற வியாதிகளை உயிர்க்கொல்லி வியாதிகள் என்பதாக நாம் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறோம். எந்த நோயும் வராமல் ஆரோக்கியமாகவே நாம் வாழ்ந்தாலும், ஒருநாள் போய்த்தான் ஆக வேண்டும். அதுவரை ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்ற கேள்விதான் நமக்கு முக்கியமானது.

அப்படியானால், அலோபதி மருத்துவ முறையை அடியோடு ஒதுக்க வேண்டுமா?

இந்தக் கேள்விக்கு ஆமாம் என்றும், முற்றிலுமாக ஒதுக்க வேண்டியதில்லை என்றும் நான் பதில் சொல்வேன். நோய் என்றால் அது எதுவாக இருந்தாலும் அலோபதி தேவையில்லை. திடீரென்று அடிபட்டு மண்டை உடைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அலோபதி மருத்துவமனைக்குச் சென்று முதல் உதவி பெற்றுக்கொள்ளலாம் என்பதே என் கருத்து. ஏனெனில், மண்டை உடைந்தது ஒரு விபத்து; அது நோயல்ல. நோயாக இருந்தால், அது கேன்ஸராயினும் சரி, எய்ட்ஸாயினும் சரி, உடலே சரி செய்துகொள்ளும். ஆனால், உடல் சரி செய்துகொள்வதற்கான சூழ்நிலையை மட்டும் நாம்தான் உருவாக்க வேண்டும்.

அது என்ன சூழ்நிலை?

  • பசிக்கும்போது மட்டும் உண்ண வேண்டும்.
  • தாகம் எடுக்கும்போது மட்டும் குடிக்க வேண்டும்.
  • இரவில் சீக்கிரம் படுத்துறங்க வேண்டும்.
  • குறிப்பிட்ட ருசிக்கு அடிமையாகிவிடக் கூடாது.
  • வாரம் ஒரு முறையோ அல்லது எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் நோன்பு பிடிக்கலாம்.
  • வாரம் ஒருமுறை, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
  • பாரம்பரிய உணவு வகைகளை மட்டும் பிரதானமாகச் சாப்பிட வேண்டும்.
  • செயற்கை உணவுகளை, பானங்களையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும்.
  • பழங்கள், காய்கறிகளை அடிக்கடி சாப்பிட வேண்டும் (பழங்களும் உணவும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது முதலில் பழங்களைச் சாப்பிட வேண்டும்).
  • உடம்பு சரியில்லாதபோது, திட உணவைத் தவிர்த்து, உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
  • ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து வீட்டுச் சாப்பாட்டையே அதிகம் உண்ண வேண்டும்.
  • உணவுக்கு நன்றி சொல்லிச் சாப்பிட வேண்டும்.
  • பிடித்த உணவை மட்டும் எந்தப் பயமும் இல்லாமல் உண்ண வேண்டும்.
  • சாப்பிடும்போது, சாப்பிடுவதில் மட்டும் கவனம் இருக்க வேண்டும்.
  • மனிதர்களை, உயிர்களையெல்லாம் நேசிக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் வெறுக்காமலாவது இருக்க வேண்டும் (இதற்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். புரியாவிட்டால், மனிதர்களை நேசித்துத்தான் பாருங்களேன். எவ்வளவு சீக்கிரம் உங்கள் நோய் குணமாகிறது என்பதை உணருவீர்கள்)!
  • ஆரோக்கியம் பற்றி இணையம், வாட்ஸ் அப் - இப்படி வந்து குவிந்துகொண்டிருக்கும் தகவல்களையெல்லாம் குப்பைகளைப்போல் சேர்த்து வைத்துக்கொண்டு, அதை அடுத்தவருக்கும் ஃபார்வர்டு செய்துகொண்டெல்லாம் இருக்கக் கூடாது!

அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

இறையருள் துணை நிற்குமாக.

அன்புடன்

நாகூர் ரூமி

(தொடர்புக்கு – ruminagore@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com