8. வளம் பெருக்கும் வளர்வீதம்

பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள், சுற்றத்தாரைப்போல உங்களைச் சூழ்ந்து நிற்கின்றன. இவை அனைத்தையும் முதலீட்டாளராகிய நீங்கள், ஒரே மாதிரியாகப் பார்க்கக் கூடாது.

முதலீட்டில் முக்கியமாகக் கருத வேண்டியது பாதுகாப்பு. நமது முதல் குறிப்பிட்ட சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டத்தில் பத்திரமாக இருக்குமா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டியது, இருக்கின்ற திட்டங்களில் எது கூடுதல் பயன்தரக்கூடியது என்பதே. திட்டங்களின் தன்மை, அவை ஒவ்வொன்றும் தரக்கூடிய லாபம், வட்டி உள்ளிட்ட பயன்கள் ஆகியவற்றைத் தீர ஆராய்ந்து, எவை சிறப்பானதோ அவ்வகைத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு முதலீட்டுத் திட்டங்களைத் தரம் பிரித்து நோக்க வேண்டியதன் அவசியம் குறித்த அறிவுரையை ‘சுற்றந்தழால்’ அதிகாரத்தின் கீழ் அமைந்திருக்கும் கீழ்க்கண்ட குறள் மூலம் அறியலாம். சுற்றந்தழால் என்றால் சுற்றம் தழுவுதல் என்று பொருள். இனி, அக்குறள் –

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். (528)

ஒரு மன்னன் தமது சுற்றத்தாரை எவ்வாறு அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட குறள் இது. தம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நோக்காமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஓர் அரசன் கவனிப்பானேயானால், அத்தகு சிறப்பு கருதி அம்மன்னனை விட்டு நீங்காது பல சுற்றத்தார் வாழ்ந்திருப்பர் என்பது இதன் பொருள்.

இது முதலீடுகளுக்கும் நன்கு பொருந்தி வருகிறது. உங்களது முதலீட்டுக்கு நீங்கள்தான் ராஜா. பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள், சுற்றத்தாரைப்போல உங்களைச் சூழ்ந்து நிற்கின்றன. இவை அனைத்தையும் முதலீட்டாளராகிய நீங்கள், ஒரே மாதிரியாகப் பார்க்கக் கூடாது. அவை ஒவ்வொன்றின் தகுதி என்ன, சிறப்பு என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கேற்ப முதலீட்டுத் திட்டங்களை வரிசைப்படுத்தி, இருப்பதிலேயே சிறப்பான திட்டத்தில் கூடுதல் தொகையையும், அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளவற்றில் அவற்றிற்கேற்ப தொகை அளவையும் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு தகுதி அறிந்து வரிசைப்படுத்தி முதலீடு செய்தால், நமது முதலீடுகள் நன்கு வாழும், அதாவது நீடித்து சிறந்த பயன் தரும்.

முதலீடுகளைத் தரம் பிரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு  ‘வினை செயல்வகை’ அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் எடுத்துரைத்துள்ள ஒரு குறள் சிறந்த விளக்கவுரையாக அமைகிறது.

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்

படுபயனும் பார்த்துச் செயல். (676)

எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும், அது எவ்வகையில் முடிவடையும், அவ்வாறான இலக்கை எட்டுவதற்கு இடைவழியில் நாம் சந்திக்க வேண்டிய இடையூறுகள் என்னென்ன, இவற்றையெல்லாம் கடந்து அந்தச் செயலைச் செய்து முடித்த பின்பு நாம் எய்தக்கூடிய பயன் என்ன என்பவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து அந்தச் செயலைச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.

முதலீடுகளுக்கு இதனைப் பொருத்திப் பார்ப்போம். ஒரு திட்டத்தின் கீழான முதலீடு எந்த வகையிலான இலக்கு சார்ந்தது – அதாவது அத்திட்டம் நீண்ட கால முதலீடா, குறைந்த கால முதலீடா, காப்பீட்டுத் திட்டமா, ஓய்வூதியத் திட்டமா என்ற வகைப்பாட்டையும் அது எவ்வளவு காலத்தில் எவ்விதத்தில் நிறைவடையும் என்பதையும் முதலில் நோக்க வேண்டும். அத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொண்டு குறிப்பிட்ட காலம் வரை அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நாம் இடைவழியில் சந்திக்கக்கூடிய இடையூறுகளையும், அவற்றைத் தாண்டி முதிர்வின்போது அத்திட்டத்தின் மூலமாக நாம் அடையக்கூடிய பயன்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இம்மூன்றையும் சீர்தூக்கிப் பார்த்து சிறப்பானதை உயர்வாகக் கருத வேண்டும்.

இவ்வாறு சீர்தூக்கிப் பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர், தமது உயர்வையே அதிகம் சிந்திக்க வேண்டும். இதனை ‘ஊக்கம் உடைமை’ அதிகாரத்தின் கீழ் வரும் இக் குறள் வலியுறுத்துகிறது.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (596)

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்று அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்று பிரித்துப் படிக்க வேண்டும். கருதுவதை எல்லாம் நமது உயர்ச்சிக்கானவற்றையே கருத வேண்டும். அவ்வாறு கருதிச் செயல்படும்போது அந்த உயர்வு கைகூடாமல் போனாலும்கூட, அவ்வாறு உயர்வைக் கருதிச் செயல்படுவதை நாம் கைவிட்டுவிடக் கூடாது என்று இதற்குப் பொருள். உயர்வைக் கருதிச் செல்படுவது ஓரிரு முறை பலனளிக்காமல் போனாலும்கூட, பல முறை அது பயன்தரக்கூடியது, நம்மை உயர்த்தக்கூடியது என்பதால், அவ்வாறு உயர்வு கருதிச் செயல்படுவதை எக்காலத்திலும் நாம் விட்டுவிடக் கூடாது என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

அந்தவகையில், முதலீட்டாளர் தமது முதலீட்டின் உயர்வை எது மிகுதியாகத் தரும் என்பதைக் கருதிச் செயல்பட வேண்டும். முதலீடுகளுக்கு மிகுந்த பயன் தருபவை வளர்வீத வட்டியும், வளர்நிதித் திட்டங்களும்தான். வளர்வீத வட்டி என்பது கூட்டு வட்டி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை காம்பௌண்டு இன்ட்ரஸ்ட் என்பார்கள். சாதாரண வட்டி என்பது ஆண்டுக்கு 12 சதவீதம் என்றால், அதுவே கூட்டு வட்டியாக மாதத்துக்கு ஒரு முறை கணக்கிடப்படும் பட்சத்தில் 12.68 சதவீத வட்டியாக உயர்கிறது.

முதலீடு அல்லது கடன் ஆகிய அசலுக்கான வட்டித் தொகையும் அதனுடன் சேர்க்கப்பட்டு கூடுதல் வட்டி கணக்கிட்டு வழங்குவது அல்லது பெறுவதே கூட்டு வட்டி ஆகும். இவ்வாறு வட்டி குட்டி போட்டு வளர்ந்து செல்வதால் இது வளர்வீத வட்டி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, கடன் வாங்கும்போது சாதாரண (நாமினல்) வட்டியே சிறந்தது. ஆனால் முதலீடுகளைப் பொருத்தவரை கூட்டு வட்டியே மிகச் சிறந்தது. இந்தக் கூட்டு வட்டிக்குப் பொருத்தமான திருக்குறள் ஒன்று ‘வினை செயல்வகை’ அதிகாரத்தின் கீழ் கூறப்பட்டிருக்கிறது. அக் குறள் –

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று. (678)

யானையைப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? பிடிப்பதற்காக அமைக்கப்பட்டு, அது தெரியாதவண்ணம் மறைக்கப்பட்ட குழிக்குள் விழும் யானையை ஏற்கெனவே பிடித்துப் பழக்கப்படுத்தப்பட்ட முரட்டு யானையைக் கொண்டு தூக்கி, புதிய யானையையும் கட்டுக்குள் கொண்டு வருவார்கள். நனைகவுள் யானை என்றால் ஏற்கெனவே கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட முரட்டு யானை என்று பொருள். இதனைப்போல, ஒரு செயலின் மூலம் மற்றொரு செயலையும் செய்து முடித்தல் யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பதுபோல என்று இதன் பொருள். கூட்டு வட்டியும் அதுபோலத்தான். ஏற்கெனவே இருக்கின்ற வட்டித் தொகையானது எடுக்கப்படாமல் முதலீட்டிலேயே பிணைத்து வைக்கப்பட்டிருக்கும்போது, அந்த வட்டியானது கூடுதல் வட்டித் தொகையையும் சேர்த்து அழைத்து வருகிறது.

உதாரணத்துக்கு, ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை 10 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 5 சதவீத வட்டி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது சாதாரண வட்டியாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வீதம் 10 ஆண்டுகளில் அவருக்கு மொத்தம் ரூ.50,000 வட்டியாகக் கிடைக்கும். அதுவே கூட்டு வட்டி எனப்படும் பட்சத்தில், அவருக்குக் கிடைக்க வேண்டிய வட்டித் தொகை அடுத்தடுத்து அசலுடன் சேர்க்கப்பட்டு வளர்ந்து, 10 ஆண்டு கால இறுதியில் அவருக்கு ரூ.62,896 வட்டித்தொகையாகக் கிடைக்கும். இதுதான் கூட்டு வட்டியின் மேஜிக்.

இந்தக் கூட்டு வட்டியானது, அரையாண்டுக்கு ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை என மூன்று வகைகளாகப் பிரித்து வழங்கப்படுவதுண்டு. இதில் மாதம் ஒரு முறை வழங்கப்படும் கூட்டு வட்டியே, மற்ற கூட்டு வட்டிகளைவிட முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபத்தைத் தருகிறது. ஏனெனில் கூட்டு வட்டியில் காலம்தான் வட்டி அதிகரிப்பதைத் தீர்மானிக்கிறது. எவ்வளவு குறைந்த கால இடைவெளியில் வட்டி கணக்கிடப்பட்டு அசலுடன் சேர்க்கப்படுகிறதோ அந்த அளவுக்குக் கூடுதலான வட்டி திரும்பக் கிடைக்கிறது.

முதலீட்டுத் திட்டங்களில், வங்கிகளில் அல்லது பாதுகாப்பான நிதி நிறுவனங்களில் கூட்டு வட்டி கிடைக்கும் வைப்பு நிதித் திட்டங்கள், கடன் பத்திரத் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது எவ்வித இடர்பாடுகளும் இல்லாத வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் ஆகும். அதேநேரத்தில் இடர்பாடுகளும் இருக்கும், அதற்கேற்ப கூடுதல் லாப வாய்ப்புகளும் இருக்கும் என்ற வகையிலான முதலீடானது, பங்குகள் மற்றும் பரஸ்பர நிதித் திட்டங்களில் இடப்படுகின்ற வளர்ச்சி நோக்கிலான முதலீடுகளாகும். நாம் இடுகின்ற முதலீடு மென்மேலும் வளர்ச்சி அடைந்து செல்ல வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். அதாவது குறிப்பிட்ட பங்கு முதலீடு அல்லது பரஸ்பர நிதி யூனிட் முதலீட்டை அவற்றின் பேரில் கிடைக்கக்கூடிய ஆண்டு லாப  ஈவுத்தொகையை (டிவிடெண்ட்) கணக்கில்கொண்டு மேற்கொள்ளாமல், குறிப்பிட்ட நிறுவனங்கள் நன்கு வளர்ச்சி அடையும் என்பதால் அவற்றின் பங்குகளும் பங்குச் சந்தையில் விலை அதிகரித்துச் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு மேற்கொள்வது இவ் வகையைச் சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் குரோத் ஃபண்ட் என்பார்கள். இதுதான் வளர்நிதி முதலீடு.

இதுபோன்ற திட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நிறுவனங்களில்  குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக இருந்தாலும் சரி, துறைவாரி முதலீடு எனப்படும் ஃபோர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் முதலீடாக இருந்தாலும் சரி இவ்வாறுதான் தொடர்ச்சியாக முதலீடு செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் விலை குறைந்தாலும் சரி, உயர்ந்தாலும் சரி தொடர்ந்து அவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்யப்படும்போது, குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரும்போது அதற்குரிய லாபம் ஈட்டப்படுகிறது. அதுவும் ஏற்கெனவே உள்ள திட்டத்தில் சேர்ந்துகொள்கிறது. விலையேற்றத்துக்குப் பதிலாக குறிப்பிட்ட பங்குகளின் விலை குறைய நேரிட்டாலும் கவலையில்லை. ஏனெனில் அப்போது சிறப்பான பங்குகள் விலை குறைவாக இருக்கும்போது கொள்முதல் செய்யப்பட அது வாய்ப்பாக அமைகிறது. விலை குறையும்போது வழக்கத்தைவிட அதிகமான பங்குகள் அல்லது யூனிட்டுகள் நமது திட்டத்தில் சேர்ந்துவிடும். இவ்வாறாக வளர்நிதி முதலீட்டில் கிடைக்கும் லாபமும், விலை இறக்கத்தால் கிடைக்கும் கூடுதல் பங்குகளும் தொடர்ந்து முதலீடுகளாக மாறி ஏற்கெனவே உள்ள வளர்நிதித் திட்டத்தில் இணைவதால், கூட்டு வட்டியைப்போலவே இதுவும் கூடுதல் ஆதாயத்தைத் தருகிறது.

கூட்டு வட்டி தரும் வளர்வீதத் திட்டம், வட்டியோடு வட்டி சேர்வதனாலும் தொடர் முதலீடுகளாலும் குறைவற்ற வளர்ச்சியைத் தருகிறது. அதேநேரத்தில், பங்குகளில் அல்லது பரஸ்பர நிதி யூனிட்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்நிதித் திட்ட முதலீடுகள், இடைவிடாத தொடர் முதலீடுகள் காரணமாக, சில நேரங்களில் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளையும் சாதகமாக்கிக்கொண்டு வளர்ச்சி பெறுகிறது. இதற்குப் பொருத்தமான குறள் ‘ஆள்வினை உடைமை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர். (620)

ஊழ் என்றால் நம்மை வருத்துகின்ற தலைவிதி என்று பொருள். உப்பக்கம் காண்பர் என்றால் புறங்காட்டச் செய்வர் அதாவது திரும்பி ஓடச் செய்வர் என்று பொருள். இவ்வாறாக தலைவிதியைக்கூட நம்மைக் கண்டதும் பயந்து திரும்பி ஓடச் செய்வதற்கு யார் வல்லவர்கள்? உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர். உலைவு என்றால் சோர்வடைதல் என்றும் உஞற்றுதல் என்றால் தொடர்ந்து முயற்சி செய்தல் என்றும் பொருள். எவர் ஒருவர் சோர்வடைந்துவிடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தலைவிதியைக்கூட தோற்கடித்துவிடுவார்கள் என்பது இதன் பொருள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான திட்டங்களில் அவ்வப்போது ஏற்படக்கூடிய சிறிய பாதிப்புகளுக்காக அஞ்சாமல் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள், இதனைப்போலவே, தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதகங்களையும் சாதகமாக்கிக்கொண்டு தலைவிதியை மாற்றி அமைப்பார்கள் என்பது நிச்சயம்.

***

துணைத் தகவல்

கூட்டு வட்டி சூத்திரம்

கூட்டு வட்டி என்பது பண்டைய காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. வர்த்தகர்களை மட்டுமின்றி கணக்கியல் அறிஞர்களையும் இது வசீகரித்திருக்கிறது. கூட்டு வட்டிக்கான சூத்திரம், காலம் காலமாக அவ்வப்போது சிறு மாறுதல்களை அடைந்து வந்திருக்கிறது. பொதுவாக, கடன் வாங்கியவர்கள் பல ஆண்டுகளுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், அவர்களை கூட்டு வட்டி உறிஞ்சி எடுத்துவிடும் இயல்புடையது. இதன் காரணமாகவே, பழங்கால ரோமானியச் சட்டங்களிலும் பிற நாடுகள் சிலவற்றின் சட்டங்களிலும் கூட்டு வட்டிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பிரபல அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டி பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கூட்டு வட்டி குறித்த அவரது மறக்கவொண்ணா வாசகம் – “கூட்டு வட்டி என்பது உலகின் எட்டாவது அதிசயம். அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் சம்பாதிக்கிறார்கள், அதுபற்றிப் புரிந்துகொள்ளாதவர்கள் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்”.

பொதுவாக வீட்டுக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன் வாங்குவோர் கூட்டு வட்டியில்தான் தவணைகளைத் திரும்பச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாங்கிய கடனுக்கு சாதாரண வட்டியில் செலுத்துவதைவிட கூடுதலாகவே பணம் திரும்பச் செலுத்தவேண்டி இருக்கும். அதேநேரத்தில் கூட்டு வட்டி தரும் வைப்புநிதி அல்லது தொடர் வைப்புநிதித் திட்டங்களில் முதலீடு செய்வோர் வழக்கத்தைவிட கூடுதல் லாபத்தை அனுபவிக்கிறார்கள்.

கூட்டு வட்டிக்கான சூத்திரம் = [P (1 + i)n] – P  =  P [(1 + i)n – 1]

ஆங்கில P  என்பது பிரின்சிபல் அதாவது அசலைக் குறிக்கிறது.   i என்பது இன்ட்ரஸ்ட் அதாவது வட்டியைக் குறிக்கிறது. n என்பது நம்பர் ஆஃப் பிரீயட்ஸ் அதாவது வட்டி கொடுக்கப்படும் காலங்களைக் குறிக்கிறது. அந்த வகையில் கூட்டு வட்டி = அசல் மற்றும் எதிர் வரும் காலங்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றின் கூட்டுத் தொகை – அசல்.

உதாரணத்துக்கு, ஒருவர் மூன்றாண்டு காலத்துக்கு 10 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 5 சதவீத கூட்டு வட்டித் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குக் கிடைக்கக் கூடிய கூட்டு வட்டி எவ்வளவு?

10,000 [(1 + 0.05)3] – 1 =  10,000 [1.157625 – 1] = 1,576.25.

அசல் தொகை ரூ.10,000. அதனுடன் மூன்றாண்டுகளுக்கான அசல் மற்றும் எதிர்கால வட்டித் தொகைகளின் கூட்டுத் தொகை ரூ.11,576.25. தற்போது இக் கூட்டுத் தொகையில் இருந்து அசல் தொகையான ரூ.10,000-ஐக் கழித்தால் வருகின்ற தொகை ரூ.1,576.25. இந்தத் தொகைதான் மூன்றாண்டுகளில் கிடைக்கின்ற கூட்டு வட்டித் தொகை. சாதாரண வட்டியில் முதலீடு செய்தால் அவருக்குக் கிடைப்பது ஆண்டுக்கு ரூ.500 வீதம் மூன்றாண்டுகளுக்கு ரூ.1,500 மட்டுமே. தற்போது கூடுதலாக ரூ.76.25 கிடைத்துள்ளது. இது எப்படி?

கூட்டு வட்டியில் வட்டியும் அசலுடன் சேர்ந்து விடுகிறது. இதனை சற்று விளக்கமாகப் பார்ப்போம். முதலாண்டில் ரூ.10,000 அசலுக்கு ரூ.500 வட்டி கிடைக்கிறது. இது அசலுடன் சேர்த்து இரண்டாமாண்டு தொடக்கத்தில் முதலீடு ரூ.10,500 ஆகிறது. இதற்கு 5 சதவீத வட்டி மூலம் இரண்டாமாண்டு இறுதியில் ரூ.525 வட்டி கிடைக்கிறது. அந்த வட்டியும் அசலுடன் சேர்ந்து மூன்றாமாண்டு தொடக்கத்தில் முதலீடு ரூ.11,525 ஆகிறது. மூன்றாமாண்டு முடிவில் அதற்கு 5 சதவீத வட்டியாக ரூ.551.25 சேர்ந்து முதிர்வுத் தொகை ரூ.11,576.25 கிடைக்கிறது. ஆக, கூட்டு வட்டி மூலம் ரூ.76.25 கூடுதலாக மொத்த வட்டித் தொகை ரூ.1,576.25 கிடைக்கிறது.

இந்தக் கூட்டு வட்டித் தொகையானது காலத்தைப் பொருத்து மாறுபடும். எந்த அளவு குறைந்த இடைவெளியில் கூட்டு வட்டி கணக்கிடப்படுகிறதோ அந்த அளவுக்குக் கூடுதலாக வட்டித் தொகை கிடைக்கிறது. உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.10,000 முதலீட்டை ஆண்டுக்கு 10 சதவீத கூட்டு வட்டித் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி கணக்கிடப்பட்டால் வட்டித்தொகையை கால அளவோடு பெருக்கும்போது 10 ஆண்டு காலத்தில் 10 முறை 10 சதவீத வட்டி கிடைக்கிறது. இதன்மூலம் கூட்டு வட்டி சூத்திரத்தின்படி அவருக்கு 10 ஆண்டு இறுதியில் ரூ.5,937.42 வட்டித் தொகையாகக் கிடைக்கிறது. அதேநேரத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டித் தொகை கணக்கிடப்பட்டு அசலுடன் கூட்டப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு காலத்தில் 20 முறை 5 சதவீத வட்டி (ஆண்டுக்கு 10 சதவீதம் என்றால் 6 மாதங்களுக்கு 5 சதவீதம்தானே) அசலுடன் சேர்கிறது. இவ்வாறு இடையில் கூடுதலாக வட்டி சேர்வதன் மூலம் அவருக்கு 10 ஆண்டு இறுதியில் கூட்டு வட்டித் தொகையாக மொத்தம் ரூ.6,392.58 கிடைக்கிறது.

இதுவே, 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டு வட்டி கணக்கிடப்பட்டால், 10 ஆண்டுக் காலத்தில் 40 முறை 2.5 சதவீத வட்டித் தொகை அசலுடன் சேர்கிறது. இதன் மூலம் அவருக்கு 10 ஆண்டுக் கால இறுதியில் கிடைக்கக் கூடிய மொத்த கூட்டு வட்டித் தொகை ரூ.6,850.64 ஆக உயர்கிறது. இதுவே மாதத்துக்கு ஒரு முறை என கூட்டு வட்டி கணக்கிடப்பட்டால் 10 ஆண்டுக் காலத்தில் 120 முறை 0.833 சதவீத வட்டித் தொகை அசலுடன் சேர்க்கப்பட்டு, 10 ஆண்டுக் கால இறுதியில் அவருக்கு மொத்த கூட்டு வட்டியாக ரூ.7,070.41 என மிகுந்த தொகை கிடைக்கிறது. ஆக, கூட்டு வட்டி தருகின்ற முதலீட்டிலும் ஆண்டுக்கு ஒருமுறை என்பதைவிட மாதத்துக்கு ஒருமுறை என வட்டி தருகின்ற திட்டம், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பயனைத் தருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com