2. பணம் செய்ய விரும்பு

விட்டுத் தொலைக்க வேண்டிய மடி என்னும் சோம்பலை விடாமல் வைத்திருக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடியானது (குடும்பம், குலம்) அவன் அழிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும். என்ன தீர்க்கமான எச்சரிக்கை.

‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். பலவற்றையும் ஆக்க உதவும் இந்தப் பணத்தை ஆக்குவதற்கு, அதாவது பணம் சேர்ப்பதற்கு முதலில் நாம் விரும்ப வேண்டும். அந்த விருப்பம் நெறி சார்ந்ததாக இருக்க வேண்டும், வெறி சார்ந்ததாக இருக்கக் கூடாது. முதலில் அறத்தைக் கூறிவிட்டு, இரண்டாவதாகத்தான் பொருளைக் கூறுகிறது நமது பண்பாடு. ஆகையால், பேராசையால் எவ்வழியிலும் பொருள் சேர்க்க விரும்பாமல், அறத்தில் இருந்து வழுவாமல் பொருள் ஈட்ட விரும்ப வேண்டும்.

அதேநேரத்தில் முதலீடு, தொழில் செய்தல், பணத்தைப் பெருக்குதல் இவையெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே வரும், நமக்கெல்லாம் அது ஒத்துவராது என்ற அரைகுறை துறவு மனப்பான்மை பலருக்கு உண்டு. இவர்களுக்கு பணம் தமக்கு வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும்கூட, அதனை உருவாக்குகின்ற செயலில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். இதற்கு அச்சம், தயக்கம், பொருளியல் சார்ந்த அறிவின்மை, முயற்சியின்மை ஆகியவையே காரணங்கள்.

இதுபோன்றவர்களுக்காகத்தான் மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் பணத்தினைப் பெருக்கு என்ற அறிவுரையைக் கூறியுள்ளார். ‘ஈசன் மனிதருக்கு இட்டுள்ள இரண்டாவது கட்டளை பொருள். ஆகையால், பொருளை ஈட்ட அதாவது பணத்தைச் சேர்க்க மனிதர்கள் முயற்சி எடுக்க வேண்டும்’ என்கிறார் பாரதியார்.

இதுதொடர்பாக யேசு கிறிஸ்துவின் வார்த்தை என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதி விளக்கமாகவே கூறுகிறார் - “தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந்தேடுவோர், பணத்தையே தெய்வமென்று கொண்டோர், இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித்தனம் மடத்தனம். தெய்வத்தை எதிர்த்து செல்வம் தேடுதல் தீமை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை, ருக் வேதம் இதுபோலவே சொல்கிறது” என்கிறார்.

ஆக, தீமையற்ற வழிகளிலே பணத்தைச் சேர்ப்பதற்கு நாம் விரும்ப வேண்டும். இதுகுறித்து திருக்குறள் என்ன கூறியிருக்கிறது என்பதை இனி காண்போம் -

செல்வம் சேராமைக்கு முதல் காரணம், சோம்பல். இதற்குத் தூய தமிழில் மடி என்று பெயர். திருவள்ளுவர் மடியின்மை என்ற தலைப்பிலே சோம்பலை ஒழிப்பதற்கான 10 குறள்களை மொழிந்துள்ளார். அதிலே, சோம்பல் கொண்டவனுக்கு ஏற்படும் தீங்கை இவ்வாறு எச்சரிக்கிறார் -

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து. (603)

விட்டுத் தொலைக்க வேண்டிய மடி என்னும் சோம்பலை விடாமல் வைத்திருக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடியானது (குடும்பம், குலம்) அவன் அழிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும். என்ன தீர்க்கமான எச்சரிக்கை. குடி குடியைக் கெடுக்கும் மட்டுமல்ல, மடியும் குடியைக் கெடுக்கும். அதிலும், சோம்பலால் ஒருவன் உடலும் உயிரும் அழிவதற்கு முன்பே அவன் பிறந்த குடும்பம் - மனைவி, மக்கள் என அவன் உருவாக்கிய குடும்பம் என்றும் பொருள் கொள்ளலாம் - ஆக மொத்தத்தில் அவனது குடும்பம் அவனது கண் முன்பே அழிந்துவிடும் என்கிறார் வள்ளுவர். ஆகையால், சோம்பலைக் களைக.

சோம்பல் இல்லாதவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனையும் மடியின்மை என்ற தலைப்பில் மற்றொரு குறளில் கூறுகிறார் தெய்வப்புலவர்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

அடியளந்தான் என்பது, வாமன ரூபத்தில் வந்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, பின்பு திரிவிக்ரம கோலத்தில் உலகை எல்லாம் தாவி அளந்த விஷ்ணுவாகிய இறைவனைக் குறிக்கும். ஆக, மடியில்லாத அதாவது சோம்பல் இல்லாத மன்னவன், இறைவன் தாவி அளந்த இந்த உலகம் முழுவதையுமே தனது முயற்சியால் அடைந்துவிடுவான் என்று இதற்குப் பொருள். இது மன்னவனுக்கு மட்டுமல்ல, சோம்பலைக் களைந்து முயற்சி செய்கின்ற மானுடர் அனைவருக்குமே பொருந்தும்.

சோம்பலைக் களைந்து முயற்சி செய்தால்தான் பொருளை, பணத்தை ஆக்க முடியும் என்பதை ஆள்வினை உடைமை என்ற தலைப்பிலான 10 குறள்பாக்கள் அழகுடன் எடுத்தியம்புகின்றன.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)

திரு என்பது செல்வத்தைக் குறிக்கிறது. ஆகையால்தான், செல்வதுக்கு அதிபதி என்று வணங்கப்படும் பெண் தெய்வமாகிய லக்ஷ்மி, திருமகள் என்று போற்றப்படுகிறார். மனிதர்கள் அனைவரும் செல்வ வளத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆணைக் குறிக்க திரு என்ற சொல்லும், பெண்ணைக் குறிக்க திருமதி என்ற சொல்லும் பெயருக்கு முன்னொட்டாகச் சேர்க்கப்படுகிறது. குழந்தகளைக்கூட செல்வன், செல்வி என்று அழைப்பது இதனால்தான்.

அப்பேர்ப்பட்ட செல்வம் என்பது வெறும் எண்ணத்தினால் மட்டும் சேர்ந்துவிடாதே! பெயரளவில் திரு, திருமதி போன்றவை இருந்தால் போதுமா? நிஜத்தில் வேண்டாமா? அதற்கு முயற்சி தேவை. இடைவிடாத முயற்சி இருந்தால்தான் அது செல்வத்தை ஆக்கும். முயற்சியற்ற சோம்பலானது செல்வத்துக்கு எதிர்ப்பதமான இன்மையை அதாவது வறுமையைப் புகுத்திவிடும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சோம்பலானது நமக்குள் வறுமையைப் புகுத்திவிடும், திணித்துவிடும். சோம்பல் குறித்து எச்சரிக்க என்ன அருமையான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர்.

சோம்பலை அகற்றியவனிடம்தான் செல்வம் விரும்பி வந்து சேரும். செல்வம் எப்போதும் செல்வோம், செல்வோம் என்றுதான் இருக்கும். முயற்சியின் மூலம்தான் அதைக் கட்டவும் முடியும், பெருக்கவும் முடியும். இதுகுறித்து திருக்குறள் கூறுவதைக் காண்போம் –

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரை யினாள். (617)

முகடி என்பது ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியாகக் கருதப்படும் மூதேவி என்ற ஜேஷ்டா தேவியைக் குறிக்கிறது. மா என்றால் கருப்பு என்றும் ஒரு பொருள் உண்டு. கரிய நிறம் கொண்ட அந்த மூதேவி, சோம்பலில்தான் உறைகிறாள். அதேநேரத்தில், சோம்பல் இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பவனின் காலடியில் செல்வத்தின் கடவுளான, தாமரையில் வாசம் செய்யும் திருமகள் குடியிருப்பாள். இறைவனின் காலடிகளை தாமரைக்கு ஒப்பாகக் கூறுவார்கள். திருமகளோ தாமரை மலரில் வீற்றிருப்பவள். ஆக, முயற்சி உடையவன் தெய்வாம்சம் பொருந்தியவனாகிறான். ஆகையால், அவனது பாதங்களை, தான் வீற்றிருக்கும் தாமரை மலர்போல் கருதி அங்கே லக்ஷ்மி நீங்காது குடியிருப்பாள். இதற்கு முயற்சி உடையவன் எங்கே சென்றாலும் அவனது செல்வம் கொழிக்கவே செய்யும், அவன் செல்லுமிடமெல்லாம் செல்வம் பெருகும் என்று வேறொரு பொருளும் எடுத்துக்கொள்ளலாம்.

முயற்சி என்பது எப்படி வரும்? மனம் தளராத ஊக்கத்தினால்தான் வரும். சோம்பித் திரிபவர்கள் சொல்கின்ற காரணங்களில், “அதில் முதலீடு செய்தேன் சரிவரவில்லை”, “இந்தத் தொழிலைத் தொடங்கினேன் நஷ்டமானது” என்பதே பொதுவாக இருக்கும். ஆனால், இதுபோன்ற சிறிய இடையூறுகளால் மனம் தளராமல் தொடர்ந்து செயல்படுவதே முன்னேற்றத்துக்கு முக்கியத் தேவை. இதனை திருவள்ளுவர், ஊக்கம் உடைமை என்ற தலைப்பில் இவ்வாறு வலியுறுத்துகிறார்-

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார். (593)

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் – அதாவது, தாம் சேர்த்து வைத்த ஆக்கம் ஆகிய செல்வத்தை எல்லாம் இந்த முயற்சியிலே இழந்துவிட்டோமே என்று அயர்ந்துவிடமாட்டார். யார்? ஊக்கம் ஒருவன் தம் கைத்து உடையார் – ஊக்கத்தை தனது கைப்பொருளாக எப்போதும் வைத்திருப்பவர்கள். ஆக, ஊக்கத்தை கைவிடாமல் இருப்பவர்கள், தமது ஆக்கத்தை இழந்துவிட்டோம் என்று கூறி அயர்ந்துவிடமாட்டார்கள், தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள்.

இவ்வாறாக தொடர் முயற்சி உடையவர்களை, அவர்கள் ஏற்கெனவே இழந்த செல்வம் மட்டுமல்ல, புதிது புதிதாகப் பல்வேறு செல்வங்கள் தேடிவந்து அடையும் என்கிறார் அடுத்த குறளில் அருந்தமிழ்ப் புலவர் வள்ளுவர்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (594)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – ஆக்கம் எனப்படும் செல்வமானது, தானே வினவிக்கொண்டு சென்றடையும். எங்கே? அசைவிலா ஊக்கம் உடையான் உழை – இடையூறுகளைக் கண்டு தளர்ந்துவிடாமல் அசையாத ஊக்கம் கொண்டவன் இடத்திலே. ஆக, மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்பவன் இடத்தை, செல்வமானது தானே வழி விசாரித்துக்கொண்டு வந்தடையும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

எனவே, செல்வத்தைச் சேர்ப்பதற்கு, பணம் செய்வதற்கான விருப்பம் நமக்கு முதலில் வேண்டும். அந்த விருப்பம் இடையிலே நழுவிவிடும் அல்ப விருப்பமாக இல்லாமல், அசையாத ஊக்கமாக, தொடர் முயற்சியாக இருக்க வேண்டும். இதுதான் பணம் நம்மிடையே சேர்வதற்கான முதல் படி.

***

துணைத் தகவல்

பணத்தின் வரலாறு

பணம், பண்டமாற்று முறைக்கு மாற்றாக எழுந்தது என்பது பொதுவான கருத்து. இருப்பினும், பண்டமாற்று முறை காலத்திலேயே கடனுக்குக் கொடுத்தல், அதற்கு அடையாளமாக ஏதாவது வாங்கிவைத்தல் என்ற நடைமுறை இருந்தது. அதாவது, பிராமிசரி நோட் எனப்படும் தற்கால உறுதிமொழிப் பத்திரம்போல அப்போதே இருந்தது. அதுவே பின்னர் பண்டத்துக்குப் பதிலான பணமாக உருவெடுத்தது என்பாரும் உள்ளனர். மேலும், பண்டமாற்று முறையிலேயே பலநாள் கெடாத தானியங்கள், கால்நடைகள் ஆகியவற்றை குறிப்பிட்ட ஒரு பண்டத்தை அல்லது பண்டங்களை வாங்குவதற்கான பொதுவான மாற்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் பணத்துக்கு ஒரு முன்னோடிதான்.

வரலாற்று ரீதியில் பணம் எனப்படும் பண்டம் அல்லாத செலாவணியை முதன்முதலில் பயன்படுத்திய நாடு நமது பாரதம்தான். கி.மு. 25-வது நூற்றாண்டைச் சேர்ந்த, அதாவது இன்றைக்கு சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக கால அகழ்வாய்வில் கிடைத்த சில உலோக வில்லைகள் போன்றவை முற்கால நாணயங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாணயத்தின் முன்னோடி 

வராகன் எனப்படும் வெள்ளி, தங்க நாணயங்கள் இந்தியாவின் பண்டைய மன்னராட்சியிலேயே புழக்கத்தில் வந்துள்ளன. பழங்கால பாரதத்தில் அடங்கியிருந்த பல்வேறு தேசங்களின் (அரசுப் பிரிவுகளின்) நாணயங்கள் குறித்து மகாபாரதம் விவரிக்கிறது. இந்த நாணயங்கள் ரூபா என்று அழைக்கப்பட்டன. 

கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில், மௌரியப் பேரரசு காலத்திய நாணயங்கள் பற்றிப் பேசப்படுகிறது. அதில், ருப்யாரூபா எனப்படும் வெள்ளி நாணயங்கள், ஸ்வர்ணரூபா எனப்படும் தங்க நாணயங்கள், தாம்ரரூபா எனப்படும் தாமிர அல்லது செப்பு நாணயங்கள், சீசரூபா எனப்படும் ஈய நாணயங்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது. ரூபா அல்லது ரூப என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு உருவம், வடிவம் என்று பொருள். பொருள்களை வாங்கி, விற்கும் வர்த்தக நடைமுறைக்குப் பயன்படும் குறிப்பிட்ட வடிவம் தாங்கிய பொருள் என்ற வகையிலே இதற்கு ரூபா என்றுபெயர் வந்தது. மேலும் ருப்யா என்பது வெள்ளியைக் குறிக்கும். வெள்ளியைக் குறிப்பிடும் ரூப்யகம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து இது உருவானது.

ரூபாய் வந்த கதை

பொதுவாக, அக்காலத்தில் அதிகமாகப் புழங்கும் நாணயங்கள் வெள்ளியிலேதான் உருவாக்கப்பட்டன. கி.பி. 16-ம் நூற்றாண்டில் தில்லிப் பேரரசை ஆண்ட ஷேர்ஷா சூரி என்ற மன்னர், முதன்முறையாக ருப்யா என்ற பெயரிலேயே வெள்ளி நாணயங்களை உருவாக்கி புழக்கத்தில் விட்டார். இந்தப் பழக்கத்தை இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்களும் பின்பற்றினர். ஆகையால், ருப்யா என்ற வெள்ளியைக் குறிக்கும் சொல்லே நாணயத்தைக் குறிக்கும் ருப்யா என ஆகுபெயராக அமைந்துவிட்டது. இந்த ரூபா அல்லது ருப்யாதான் இன்றைய ரூபாய்க்கு முன்னோடி.

இந்தியாவைப் போலவே பழங்காலத்திலேயே நாணயத்தைப் பயன்படுத்திய நாடுகள் என்ற பெருமை சீனத்துக்கும் கிரேக்கத்துக்கும் உண்டு. சீனாவில் கி.மு. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோவ் வம்ச மன்னர்கள் காலத்தில், வெண்கலத்தால் ஆன சிறிய கத்திகள், வேல்கள் போன்றவை நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

முதல் காகிதப் பணம்

அதேநேரத்தில், இன்றைய காகிதப் பணத்துக்கு சீனாவே முன்னோடி. கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங் வம்ச மன்னர்கள்தான், உலகிலேயே முதன்முறையாக காகிதப் பணத்தாளை அறிமுகப்படுத்தினர். வர்த்தகர்களுக்கு இடையேயான கடன் பத்திரங்கள், உறுதிமொழிப் பத்திரங்களே பொது நாணயமான பணத்தாளாக வடிவெடுத்தது. கி.பி. 13-ம் நூற்றாண்டில், வர்த்தகர்கள் மூலம் குறிப்பாக மார்க்கோ போலா போன்ற உலகம் சுற்றிய வர்த்தகப் பயணிகள் மூலம், சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் காகிதப் பணம் அறிமுகமானது. 

கி.பி. 1661-ல், ஐரோப்பிய நாடுகளிலேயே முதன்முறையாக ஸ்டாக்ஹோம்ஸ் பாங்கோ (இன்றைய பேங்க் ஆஃப் ஸ்வீடனின் முன்னோடி) என்ற வங்கிதான், பணத்தாளை வங்கிகள் அச்சடிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இதனைப் பின்பற்றி பிரிட்டனிலும், பின்னர் அமெரிக்காவிலும் வங்கிப் பணத்தாள்கள் (பேங்க் நோட்ஸ்) அறிமுகமாகின. பின்னர் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டின் மைய வங்கி மூலம் அல்லது அரசு நிர்வாகமே பணத்தாளை அச்சடித்து, புழக்கத்தில் விடும் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் பணத்தாள்

ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியப் படையெடுப்பாளர்கள் மூலம் இந்தியாவில் பணத்தாள் அறிமுகமானது. கி.பி. 1770 முதல் 1832 வரை இயங்கிய பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற கிழக்கிந்திய கம்பெனியாரின் வங்கிதான், இந்தியாவில் முதல் பணத்தாளை அச்சடித்ததாகக் கருதப்படுகிறது. இதேபோல், ஜெனரல் பேங்க் ஆஃப் பெங்கால் அண்ட் பிஹார், பெங்கால் பேங்க் ஆகியவையும் தொடக்கக் காலத்தில் பணத்தாள்களை அச்சடித்து விநியோகித்தன.

கி.பி. 1861-ல்தான், பிரிட்டீஷ் அரசாட்சியின் கீழ் இயங்கிய இந்திய அரசு, முதன்முறையாக அதிகாரப்பூர்வமான காகிதப் பணத்தை அறிமுகப்படுத்தியது. இதேபோல், இந்தியப் பகுதிகளை ஆட்சி செய்த பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் போன்றவர்களும் காகிதப் பணத்தை ஆங்காங்கே அறிமுகப்படுத்தினர். இவர்களைப் பின்பற்றி திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாம் போன்ற குறுநில மன்னர்களும் தங்களது ஆட்சிப் பகுதிகளில் காகிதப் பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டனர். 
விடுதலைக்குப் பின்

இந்திய விடுதலைக்குப் பின்னர் படிப்படியாக இந்த அந்நிய ஆட்சியாளர்களின் பணங்களும், உள்நாட்டு சமஸ்தானங்களின் பணங்களும் வழக்கொழிக்கப்பட்டு, ஒரே சீரான இந்திய ரூபாய் பணத்தாள்களின் புழக்கம் நடைமுறைக்கு வந்தது. ஒரு ரூபாய் பணத்தாளை மட்டும் இந்திய அரசு நேரடியாக அச்சடித்து வந்தது. (கி.பி. 1995-ல் ஒரு ரூபாய் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது). மற்ற அனைத்து மதிப்பிலான ரூபாய் பணத்தாள்களையும் ரிசர்வ் வங்கி எனப்படும் இந்திய அரசின் மைய வங்கியே அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது.

மத்திய அரசு உருவாக்கி அங்கீகரிக்கும் வடிவமைப்பில், ரிசர்வ் வங்கி ரூபாய் தாள்களை அச்சடிக்கிறது. இவற்றில் பழைய ரூ.500, ரூ.1000 மதிப்பிலான பணத்தாள்கள் அண்மையில் (8.11.2016) ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 பணத்தாள்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. ரூ.1000 மீண்டும் வருமா என்பது தெரியவில்லை. தற்போது ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகிய மதிப்பிலான பணத்தாள்களை ரிசர்வ் வங்கி அச்சடித்து, புழக்கத்தில் விட்டு, இப் பண விநியோகத்தை நிர்வகிக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ், ஹொஸங்காபாத், மேற்கு வங்க மாநிலம் சல்போனி, கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள பிரத்யேக அச்சகங்களில், ரிசர்வ் வங்கி பணத் தாள்களை அச்சடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com