4. முதல் செலவு சேமிப்பு

ஒருவரது வருமானத்துக்கு மேல் செலவுகள் இருந்தால் அவர் கடன் வாங்கத் தொடங்கி, அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல், அவமானம் தாங்க முடியாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தவறான முடிவைக்கூட எடுக்க நேரிடும

“வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா” என்ற பழைய திரைப்படப் பாடலை பலரும் கேட்டிருப்பீர்கள். “வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது” என்ற வார்த்தைகளும் அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும். அர்த்தமுள்ள திரைப்படப் பாடல் அது.

ஒருவரது வருமானத்துக்கு மேல் செலவுகள் இருந்தால் அவர் கடன் வாங்கத் தொடங்கி, அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல், அவமானம் தாங்க முடியாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தவறான முடிவைக்கூட எடுக்க நேரிடும். வரவுக்குள் செலவுகளைச் சுருக்கி சிக்கனமாக வாழ்வை நடத்த வேண்டும் என்பதை இந்தத் திரைப்படப் பாடல் எடுத்துரைக்கிறது.

இந்தக் கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திறம்பட எடுத்தியம்பியுள்ளார். வலி அறிதல் என்னும் தலைப்பின் கீழ் அமைந்துள்ள அதற்குரிய குறள் இதோ -

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை. (478)

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை – ஆகு ஆறு என்றால் பொருள் அல்லது பணம் வருகின்ற வழி என்று பொருள். இட்டிது என்றால் சிறியது என்று பொருள். பொருள் வருகின்ற வழியானது சிறியதாக இருந்தாலும் அதனால் கேடில்லை. எப்போது? போகு ஆறு அகலாக் கடை. - பொருள் அல்லது பணம் செல்கின்ற (செலவழிக்கின்ற) வழியானது வருவாய் வருகின்ற வழியைவிட அகண்டதாக, அதாவது பெரியதாக ஆகிவிடாத பட்சத்தில். வருவாய் எவ்வளவுதான் சிறிதாக இருந்தாலும், செலவு அதனை விஞ்சி விடாமல் கட்டுக்குள் இருந்தால். கேடு எதுவும் விளைந்துவிடாமல் தவிர்க்கப்படும் என்கிறார் வள்ளுவர்.

வருமானம் குறைவாக இருப்பவர்கள்தான் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி, செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். சிலருக்கு வருமானம் அதிகமாகவே வரும். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்தால் கேடுதான் விளையும். இதுகுறித்து அடுத்த குறள் எச்சரிக்கிறது.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

எந்தவொரு மனிதரும் தம்மிடம் உள்ள பொருளின் – பணத்தின் அளவை அறிந்து செலவுகளைச் செய்யப் பழக வேண்டும். அவ்வாறின்றி, வகைதொகை இல்லாமல் தான்தோன்றித் தனமாகச் செலவழித்தால் – அளவை அறியாத வாழ்க்கை வாழ்ந்தால், அவர்களது வளமானது இருப்பதைப்போலவே தோற்றம் கொடுத்து திடீரென இல்லாமல் மறைந்துவிடும். அளவு தெரியாமல் செலவழிப்பவர்களிடம் உள்ள பணம், ஒரு தோற்ற மயக்கம் மாத்திரமே. அவரது செல்வ வளம் திடீரென அவரை விட்டு நீங்கிவிடும்.

அவ்வாறானால் எவ்விதம் வாழ வேண்டும்? இதற்கு முந்தைய குறள் ஒன்று விடை பகர்கின்றது.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி. (477)

ஈதல் என்றால் கொடுத்தல் என்று பொருள். தானம் கொடுத்தல் மட்டுமே ஈதல் அல்ல. எந்தவொரு செயலுக்காகவும் பணம் கொடுத்தல் அல்லது செலவு செய்தலும் இதில் அடங்கும். இங்கே ஈக என்ற கட்டளைச் சொல் வழங்குக என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது. அந்த வகையில், ஆற்றின் அளவு அறிந்து ஈக. அதாவது, ஆற்ற வேண்டிய செயலின் தன்மையை அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல பணத்தை வழங்குக, செலவு செய்க. அவ்வாறு அளவு அறிந்து செலவழிப்பதே, பொருளைப் போற்றி வழங்குகின்ற நெறிமுறை ஆகும். பொருள் போற்றுதலுக்குரியது. அதாவது, பணம் மதிப்புக்குரியது. பண மதிப்பு இருந்தால்தான் மனிதருக்கு முகமதிப்பே. ஆகையால், பணத்தின் மதிப்பை அறிந்து அதனை உரிய வகையில் செலவழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

இவ்வாறாக, வரவுக்குள் செலவுகளைக் கட்டுவதன் மூலம் சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தச் சிக்கனத்தின் மூலமே சேமிப்பு நிகழ்கிறது. இந்தச் சேமிப்பே, பொருள் வளத்தைப் பெருக்குவதற்கான முதலீடாக விதைக்கப்படுகிறது. ஆகையால், வருமானம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, அதற்குள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். நமது செலவுகளில் முதல் செலவு இந்தச் சேமிப்புகாகன பண ஒதுக்கீடாக இருக்க வேண்டும். செலவுகளுக்கான பிள்ளையார் சுழிபோல இந்தச் சேமிப்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

நமது வருமானத்தின் முதல் செலவு சேமிப்பு என்ற வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை சிறுசேமிப்பாக ஒதுக்கி வைக்க வேண்டும். இத் தொகையை எந்த வகையிலும் வேறு செலவுகளுக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை, இத் தொகையை அவசரத்தில் செலவழித்துவிடுவோமோ என்று அச்சப்பட்டால் வங்கிக் கணக்கில் சேமித்துவிட வேண்டும். அதையும் எடுத்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுவோருக்கு, பய நிவாரணி ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர் சேமிப்பு. மாதந்தோறும் வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் இத் தொடர் வைப்பைத் தொடங்கலாம். வங்கிகளில் ஓராண்டு அல்லது ஈராண்டாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அஞ்சலகங்களில் ஐந்தாண்டுத் திட்டமாக தொடர் வைப்புக் கணக்கு தொடங்கப்படுகிறது.

இவ்வாறாகச் சேமிக்கப்படும் தொகையை முதலீடாக மாற்ற வேண்டும். சேமிப்பில் உள்ள பணம் வெறும் சேமிப்பாகவே இருக்கும்போது அது தேக்கம் அடைகிறது. அதேநேரத்தில் தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு உள்ளிட்ட திட்டங்களில் பணம் செலுத்தப்படும்போது அது முதலீடாக உயர்கிறது. முதல் இடு என்பதே முதலீடு ஆனது. எதற்கு முதல் இடுகிறோம். நமது செல்வ வளத்தைப் பெருக்குவதற்காக முதல் செயலைப் புரிகிறோமே அதுதான் முதல் இடுதல். இந்த முதலீடு வட்டி தந்து, மறு முதலீட்டிலும் புகுந்து பல்கிப் பெருகி நமக்கு வளம் சேர்க்கிறது. அதுகுறித்து அலசுவதற்கு முன்பு இதுதொடர்பாக, தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் திருக்குறள் கூறுவதைக் கேட்போம்.

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை

ஆராய்வான் செய்க வினை. (512)

வாரி என்றால் பொருள் அல்லது பணம் வரும் வாயில்கள். பெருக்கி என்றால் பெருகச் செய்து என்று பொருள். ஆக, பொருள் வருகின்ற வழிவகைகளை முதலில் விரிவுபடுத்த வேண்டும். பின்னர் அதனை வளம் படுத்து, அதாவது அதனை மேலும் வளரச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்தப் பணத்தை மேலும் பெருகச் செய்வதற்கு உற்ற வழிவகைகள் என்னென்ன, அவற்றில் ஏற்படக்கூடிய இடையூறுகள் யாவை, அவற்றை எவ்விதம் களையலாம் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன்படி, உற்ற முதலீட்டில் பணத்தை இடுதல் என்ற வினையைச் செய்ய வேண்டும் என்று இக்குறளுக்குப் பொருள் கொள்ளலாம். இனி இதனை விரிவாகப் பார்ப்போம்.

வீட்டிலேயே சிறுவாட்டுப் பணமாக அல்லது அஞ்சறைப் பெட்டிகளில் முடங்கிக்கிடக்கும் சேமிப்புகளுக்கு வட்டி கிடைக்காது. அதேவேளையில், வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கிலோ, தொடர் வைப்பிலோ இடப்படும் பணத்துக்கு வட்டி கிடைக்கும்.

இவ்வாறு, தொடர் முதலீட்டின் மூலம் சேமிக்கப்படும் தொகை, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வட்டியோடு சேர்த்து கணிசமான தொகையாக நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கிணங்க, வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் தொடர் முதலீடு, ஓரிரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பெரும் பணமாகத் திரும்பக் கிடைக்கும். இப்போது இதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான நிலை வைப்பாக (ஃபிக்ஸட் டெபாஸிட்டாக) முதலீடு செய்ய வேண்டும்.

இந்த நிலை வைப்பையும் வங்கிகள், அஞ்சலகங்கள் அல்லது நம்பத்தகுந்த நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளலாம். ஓராண்டு, ஈராண்டு என குறிப்பிட்ட ஆண்டுகள் என்ற வகையில் இந்த முதலீட்டை மேற்கொள்ளலாம். சில திட்டங்கள் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளாகக்கூட உள்ளன. வருமான வரி விலக்கு உள்ள முதலீட்டுத் திட்டங்கள் இதுபோன்ற கூடுதல் காலம் கொண்டவையாக உள்ளன. இந்த முதலீட்டுக்கு மாத வட்டி அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி கணக்கிட்டுத் தரும் வழக்கமும் உள்ளது. வளர்வீத வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வின்போது மொத்தமாக வழங்கப்படுவதும் உண்டு.

கணிசமான தொகையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பாக வைத்து, அவ்வப்போது அதனைப் புதுப்பித்து வர வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் மாத வட்டியைப் பெற்றுக்கொண்டு, அத் தொகையை புதிய தொடர் வைப்பாக முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்துள்ள இத் தொகையைக் கொண்டு புதிய நிரந்த வைப்பு முதலீட்டை மேற்கொள்ளலாம். இவ்வாறாக, பழத்தைத் தின்றுவிட்டு அதன் கொட்டையை விதைத்து மரமாக்கி, மேலும் மேலும் பழங்களைத் தின்னலாம் என்பதைப்போல, சிறு முதலீட்டின் மூலமே பல பெரிய முதலீடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளலாம். அவற்றின் பலன்களைக் கொண்டும் பல முதலீடுகளைத் தொடரலாம்.

தனது திருமணம், புதிய வீடு வாங்குதல், வாகனங்கள் வாங்குதல், மகள் அல்லது மகன் திருமணம், ஓய்வு காலத்தை நிம்மதியாகக் கழித்தல் என பிற்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்துக்கொண்டு அதற்கேற்ப சேமிப்பைத் தொடங்கி, பின்னர் அதனை முதலீடுகளாக மாற்றிப் பயன் பெறலாம். எத்தனை காலத்துக்குப் பிறகு, எந்தத் தேவைக்காக, எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை முதலில் கணிக்க வேண்டும். அதற்கேற்ப நமக்கு இப்போது கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, உரிய காலங்களில் உரிய முதலீடுகளை மேற்கொண்டு பணத்தைப் பெருக்க வேண்டும்.

இதுபற்றி அறிவுறுத்துகின்ற குறளை இப்போது காண்போம். இத் திருக்குறள், காலம் அறிதல் என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்? (483)

உரிய கருவிகளை, அதாவது தகுந்த சாதனங்களைக் கொண்டு, அதற்குரிய காலத்தையும் அறிந்துகொண்டு ஒரு செயல் செய்யப்பட்டால், செய்வதற்கரிய செயல் (அருவினை) என்று ஏதாவது இருக்க முடியுமா? என்று வினவுகிறார் வள்ளுவர். ஏற்ற காலத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற கருவிகளுடன் துணையோடு ஒரு செயல் மேற்கொள்ளப்பட்டால் நிகழ்த்த முடியாதது என்று எதுவும் இருக்க முடியாது என்பதே இதன் பொருள். ஆகையால், எதிர்காலத் தேவையை முதலில் தீர்மானித்துக்கொண்டு, அதற்குரிய முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேற்கொள்ளும்போது நமது விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறுவது சாத்தியமே.

***

துணைத் தகவல்

பணம் சேமிக்க பத்து கட்டளைகள்

1. செலவுகளை ஆய்வு செய்

முதலில் நமது அன்றாடச் செலவுகளைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். அவற்றில் தேவையானவை எவை, தேவையற்றவை எவை, குறைப்பதற்கு சாத்தியமுள்ளவை எவை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதனைத்தான் திருக்குறள் அளவறிதல் என்கிறது.

2. சிக்கனம் செய்

ஆய்வு செய்து பார்த்ததில் தேவையற்ற செலவுகளை உடனடியாகக் கைவிட வேண்டும். பிறவற்றில் முடிந்த அளவுக்கு செலவுகளைச் சுருக்க வழிபார்க்க வேண்டும். இவ்வாறு செலவுகளை இறுக்கிப் பிடிக்கும் சிக்கனத்தின் மூலம் நமது பணம் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. இதனைத்தான் திருக்குறள் போகாறு அகலாக் கடை என்கிறது.

3. இலக்கை உருவாக்கு

சிக்கனத்தின் மூலம் தினந்தோறும், மாதந்தோறும், ஆண்டுதோறும் எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியும் என்ற இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறாக சேமிப்புக்கு ஒரு மதிப்பீட்டையும் மதிப்பையும் உருவாக்க வேண்டும். இதனைத்தான் திருக்குறள் பொருள் போற்றுதல் என்கிறது.

4. வருவாயைப் பெருக்கு

சில சமயங்களில் நமது வருவாயும், அதன்மூலம் உருவாக்கப்படும் சேமிப்பும் நமது தேவைகளுக்குப் போதுமானவையாக இல்லாமல் போகலாம். ஆயினும் நாம் முயன்றால், அந்தத் தேவைகளில் பலவற்றை நிறைவேற்றிவிட முடியும். அதற்காக நாம் கூடுதல் உழைப்பையும், திறனையும் செலவிடவேண்டி இருக்கும். பணியாற்றும் இடங்களில் கூடுதல் நேரம் (ஓவர் டைம்) உழைத்தல், பகுதி நேரமாக பிற இடங்களில் பணியாற்றுதல் (பார்ட் டைம்), வேறு ஏதேனும் சிறு வியாபாரம் அல்லது கைத்திறன் வேலைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் கூடுதல் பணத்தை ஈட்டுவதற்கு முயல வேண்டும். இதனைத்தான் திருக்குறள் வாரி பெருக்குதல் என்கிறது.

5. திட்டத்தைத் தேர்ந்தெடு

மாதந்தோறும், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கலாம் என்று தெரிந்துகொண்ட பிறகு அவற்றைச் சேமிப்பதற்கு, முதலீடாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை அலசி ஆராய வேண்டும். எந்த வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனைத்தான் திருக்குறள் உற்றவை ஆராய்தல் என்கிறது.

6. சேமிப்பை முதலிடு

சிறிய மீனைப் போட்டு பெரிய மீனை தூண்டிலில் பிடிப்பதைப்போல, நம்மிடம் சேமிப்பாக உள்ள சிறிய தொகையை மேலும் பணம் சேர்ப்பதற்கான முதலீடாக நாம் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே ஆராய்ந்து தேர்ந்தெடுத்த திட்டங்களில் இப்போது நமது சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும். இதனைத்தான் திருக்குறள் செய்க வினை என்கிறது.

7. தொடர்ந்து முதலிடு

நமது முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலும், முதிர்வுத் தொகையிலும் கணிசமான பகுதியை மறுமுதலீட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். இவற்றினால் நமது பணவளம் பெருகும். இதனைத்தான் திருக்குறள் வளம் படுத்துதல் என்கிறது.

8. காலத்தைக் கணி

நமது எந்தத் தேவைகளுக்காக முதலீடுகளை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, வியாபார வளர்ச்சி என்பது போன்ற குறுகிய காலத்துக்கு ஆனதாகவோ அல்லது குழந்தைகளின் எதிர்காலக் கல்வி, அவர்களது திருமணச் செலவு என்பது போன்ற நீண்ட காலத்துக்கு உரியதாகவோ இருக்கலாம். இதனைத்தான் திருக்குறள் காலம் அறிதல் என்கிறது.

9. முதலீடுகளைக் கண்காணி

நமது முதலீடுகளின் வளர்ச்சி எவ்விதம் உள்ளது, அவை இடப்பட்டுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் போக்கு எப்படி உள்ளது, வட்டி விகிதங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா ஆகியவற்றை அவ்வப்போது தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கேற்ப தேவைப்பட்டால் நமது முதலீடுகளில் உரிய திருத்தங்களை, மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். இதனைத்தான் திருக்குறள் கருவி அறிதல் என்கிறது.

10. பொறுமை பூண்

பணத்தைச் சேமித்து பெருக்க நினைப்பவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம். எதிர்பாராமல் ஏற்படும் திடீர் தேவைக்காக சேமிப்பில் இருந்து செலவழித்தல், முதலீடுகளை பாதியிலேயே திரும்பப் பெறுதல் ஆகிய தவறுகளைச் செய்யக்கூடாது. உயிர்காப்பு மருத்துவம் போன்ற தவிர்க்க இயலாத தேவைகளுக்காக அன்றி வேறு தேவைகளுக்காக முதலீட்டைத் திரும்பப் பெறக்கூடாது. நம்மால் சமாளிக்க முடியாதோ என்ற வீண் அச்சம் காரணமாகவும், சலிப்பு காரணமாகவும் இல்லையேல் அறியாமையினாலோதான் முதலீட்டைப் பெரும்பாலும் திரும்பப் பெறுகிறார்கள். ஆகையால் பொறுமையைக் கடைப்பிடிக்கும் சேமிப்பாளர்கள், முதலீட்டாளர்களுக்கு, திருக்குறள் குறிப்பிட்டிருப்பதைப்போல், அருவினை என்பது எதுவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com