20. உலகம் உணர்ந்து செய்

உலகமயமாக்கலையும், உலகப் பொருளாதாரச் சூழலையும் உவகையோடு ஏற்காவிட்டாலும், உதாசீனப்படுத்தாமல் புரிந்துகொண்டு முன்னேற்றம் காணத் தலைப்படுவோம்.

‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பது தமிழ் மூதுரை. பல்வேறு மாற்றங்களைக் கண்டுவரும் தற்கால 21-ஆம் நூற்றாண்டுச் சூழலில், ‘உலகோடு ஒத்து வாழ்’ என்பதே பொருத்தமான புதுமையுரையாக இருக்கும். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக இப்போது உலகமே ஒரு கிராமம்போல் சுருங்கிவிட்டது. அடுத்த கிராமத்தில் நடக்கும் விஷயத்தை அறிந்துகொள்ளவே சில நாட்கள் பிடிக்கும் காலம் மலையேறிவிட்டது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நொடியே, அவ்வளவு ஏன் அந்த நொடியிலேயே உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும் நவீன யுகமிது.

நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிடினும் உலகமயச் சூழலில் இருந்து நாம் இனி தப்ப முடியாது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (நண்பர்) என்றும், ‘வசுதா ஏவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்றும் சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகமயச் சூழலுக்கு வரவேற்புக் கூறியவர்களின் வாரிசுகள் அல்லவோ நாம்! ஆகையால் உலகமயமாக்கலையும், உலகப் பொருளாதாரச் சூழலையும் உவகையோடு ஏற்காவிட்டாலும், உதாசீனப்படுத்தாமல் புரிந்துகொண்டு முன்னேற்றம் காணத் தலைப்படுவோம்.

மாறுவது உலகின் இயல்பு. உலகம் என்றால் பூமி என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளலாகாது. உலகில் வாழும் மக்கள் சமூகம் என்றே இங்கு பொருள். மக்கள் சமூகம், காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது, சிலவற்றைக் கொண்டும் வருகிறது. இந்த மாற்றங்கள் அக்காலத்தைப்போல மெதுவாக அன்றி, வேகமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகின்றன. வாழ்க்கையே சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொள்வதுதான். ஆகையால், உலக அளவில் ஏற்படும் சமூக, பொருளாதார மாற்றங்களை நாமும் உடனுக்குடன் அறிந்துகொண்டு நமது நடவடிக்கைகளை அதற்கேற்ப மேற்கொள்ள வேண்டும்.

‘உலகத்தோடு பொருந்தி வாழ்’ என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறை நாயகர் போதித்துள்ளார். ‘ஒழுக்கம் உடைமை’ என்ற அதிகாரத்தின் கீழ் அமைந்த அக்குறளை இப்போது காண்போம்.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்

கல்லா ரறிவிலா தார். (140)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவு இலாதார் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். ஒழுகல் அல்லது ஒழுகுதல் என்றால் தொடர்ந்து கடைப்பிடித்தல், இடைவிடாது பின்பற்றுதல் என்று பொருள். இதில் இருந்துதான் ஒழுக்கம் என்ற சொல் உருவானது. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றால் உலகின் சான்றோர்களோடு (உயர்ந்தவர்களோடு) பொருந்துமாறு ஒழுகுதல் என்று பொருள். இதனைக் கல்லாதவர்கள், பல நூல்களைக் கற்றவர்களாக இருந்தாலும் அறிவு இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்கிறார் திருவள்ளுவர். ஆக, பொருளாதார விஷயங்களிலும் உலகின் சான்றோர், உயர்ந்தோர், நிபுணர்கள் எவற்றைக் கடைப்பிடிக்கிறார்களோ அவற்றை அறிந்துகொண்டு அவற்றை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

உலகமயமாக்கலின் விளைவாக எந்தவொரு நாட்டில் ஏற்படும் - உதாரணத்துக்கு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்படும் - பங்கு விலைச் சரிவு, பிற நாடுகளிலும் எதிரொலிக்கும். இதேபோல் பெட்ரோலிய விலைச் சரிவு அல்லது விலையேற்றமும் விரைவில் பிற நாடுகளிலும் பிரதிபலிக்கும். அத்துடன் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை, சங்கிலித் தொடர்போல பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் உடனுக்குடன் அறிந்துகொண்டு அதற்கேற்ப நமது செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். உதாரணத்துக்கு, அமெரிக்கச் செலாவணியான டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால், இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம், இறக்குமதி நிறுவனங்களுக்குத் திண்டாட்டம். இதுவே, ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் நிலைமை தலைகீழாக மாறும். இதற்கேற்ப, இந் நிறுவனங்கள் சார்ந்த பங்குகளை சமயோசிதமாக வாங்கவோ, விற்கவோ செய்ய வேண்டும். பெட்ரோலியத்தின் விலை சரிந்தால், ஐ.ஓ.சி. உள்ளிட்ட எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலையும் சரியும். சாஃப்ட்வேர் துறைக்கு பாதிப்பு என்றால் அதுசார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரியும்.

இவற்றையெல்லாம் ஒருவர் விரிவாக எடுத்துக் கூறினால்தான் புரிந்துகொள்ளும் நிலையில் ஒரு முதலீட்டாளர் இருக்கக் கூடாது. சில குறிப்புகளைக் கொண்டே சரியான கணிப்புகளை எடுத்தாக வேண்டும். தாமதித்தால் இழப்பைச் சந்திக்க நேரிடும். அறியாமையும், மெத்தனப்போக்கும், முயற்சியின்மையும் முதலீட்டாளர்களின் பரம எதிரிகள். அமெரிக்காவில் ஹெச்1பி விசா வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறை, இந்தியாவைச் சேர்ந்த ஐ.பி.எம்., விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையையும், அவர்களது ஊதியத்தையும் குறைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த நிலைமையை அமெரிக்க அதிபரானபோதே டிரம்ப் உணர்ந்துகொண்டு, மாற்று ஏற்பாடுகளை பாதிக்கப்படும் நிறுவனங்களும், அவற்றின் பணியாளர்களும் தொடங்கியிருக்க வேண்டும். இதேபோல், இந் நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்களும் நிலைமைக்குத் தகுந்தவண்ணம் முன்கூட்டியே செயல்பட வேண்டும். ‘குறிப்பு அறிதல்’ என்ற அதிகாரத்தின் கீழ் இதுபோன்ற செயல்படுவதை அக்காலத்திலேயே வலியுறுத்தியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி (701)

ஒரு விஷயத்தை எடுத்துக் கூறாமல், முகக் குறிப்பு, கண் ஜாடை ஆகிய குறிப்புகளின் மூலமாகவே அல்லது நிலைமையைப் பார்க்கும்போது தென்படுகின்ற குறிப்புகளின் மூலமே அறிந்துகொள்ளக்கூடியவன், எப்போதுமே இந்த வையத்துக்கு, அதாவது உலகுக்கு அணிகலன்போலத் திகழ்கிறான் என்று பாராட்டுகிறார் வள்ளுவர். (வையத்துக்கு என்பது வையக்கு என்று வந்திருப்பது இலக்கணப்படியான விகாரம்). ஆக, பொருளாதார விஷயங்களையும் முதலீட்டாளர்கள் குறிப்பால் அறிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

உலகை உணர்வதற்கு, முதலில் தன்னை அறிந்துகொள்ள வேண்டும். தனது தேவைகள் என்ன, தனது ஊதியம் உள்ளிட்ட வருவாய் என்ன, தனக்குள்ள அத்தியாவசியச் செலவுகள் என்ன, தனது எதிர்கால இலக்குகள் என்ன, அதற்காகச் செய்ய வேண்டியவை என்ன என்பதை ஒருவர் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அத்தியாவசியச் செலவுகள் என்ன, ஆடம்பரச் செலவுகள் என்ன என்பதை சரியாக வரையறுக்க வேண்டும். வசிப்பிடத்தில் இருந்து பணியாற்றும் இடம் மிகவும் தள்ளியிருக்கும் நிலையில் இருசக்கர வாகனமோ, காரோ வாங்குவது அத்தியாவசியத் தேவைதான். அதனை ஆடம்பரமாகக் கருத முடியாது. அதேநேரத்தில் நம்மிடம் தற்போதுள்ள சேமிப்பு, வருமானம், கைக்கு அடக்கமான கடனுதவி ஆகியவற்றைக் கொண்டு இதனை வாங்க முடியும் பட்சத்தில்தான் இதனை வாங்க வேண்டும். இல்லையேல், அத்தியாவசியமாக இருந்தாலும்கூட அது அநாவசியத் தொல்லைகளைப் பின்னர் ஏற்படுத்திவிடும். இதனை ‘வலியறிதல்’ என்ற அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும். (480)

தூக்காத என்றால் சீர்தூக்கிப் பார்க்காத என்று பொருள். தனக்கு உள்ள செல்வத்தின் அளவை சீர்தூக்கிப் பார்க்காமல் மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடானது, தற்போது உள்ள செல்வத்தையும் விரைவில் கெடுத்துவிடும், அதாவது அழித்துவிடும் என்று எச்சரிக்கிறது இக்குறள்.

அதேநேரத்தில், கடன் வாங்குதல் என்பது தற்போது தவறான செயலாகப் பார்க்கப்படுவதில்லை. இது இன்றைய உலகின் மிகப் பெரும் மாற்றம். வாகனக் கடன், வீட்டுவசதிக் கடன் மட்டுமல்ல, உயர்கல்வி பெறுவதற்குக்கூட தற்போது கடனுதவிகள் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், ‘விரலுக்குத் தகுந்த வீக்கம்’ என்பதைப்போல, இந்தக் கடனுதவி குறைந்த வட்டியிலானதுதானா, நம்மால் குறித்த காலத்துக்குள் திருப்பித் தர இயலுமா என்பதை ஒருவர் உறுதி செய்துகொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்பவர் எனில், கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவதிலும் தவறில்லை. ஆனால், ஊதாரிச் செலவுகளுக்கு உற்ற துணையாக இவற்றைக் கருதினால், ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.

சேமிப்புக் கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய சமூகம், தற்போது மெதுவாக நுகர்வுக் கலாசாரத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. இந்நிலையில், ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை உணர்வு அவசியம். தேவையானவற்றை வாங்கி நுகரலாம் தவறில்லை. ஆனால், தேவையில்லாதவற்றைத் தற்போது பணம் கையில் இருக்கிறது என்பதற்காக வாங்கிவிட்டு, சேமிப்பைத் தவிர்த்தோமானால், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணங்களால் தற்போது வேலை பறிபோதலும், பணிமாற்றமும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. ஆகையால், சேமிப்புப் பணம் கையிருப்பிலும் வங்கியிருப்பிலும் இருப்பது அவசியம்.

அத்துடன், அரசு ஊழியர்களுக்கே தற்போது ஓய்வூதியத்தை அரசாங்கம் தருவதில்லை. மாறாக, ஊழியர்களின் ஊதியத்திலேயே பிடித்துச் சேமித்து, பின்னர் அவர்கள் ஓய்வு பெற்றதும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களைத் தருகின்ற புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. அரசு ஊழியர் நிலையே இப்படியென்றால், மற்றவர்கள், தங்கள் வயதான காலத்துச் செலவுகளுக்கான ஏற்பாடுகளை வயதுள்ள காலத்திலேயே செய்துகொண்டாக வேண்டும். மேலும் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது அதிகரித்துள்ளதற்கு ஏற்ப, மருத்துவம் உள்ளிட்ட வயதான காலத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளன. ஆகையால், ‘காலத்தே பயிர் செய்’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிகழ்காலத்தில் விதைக்கின்ற விதைதான் எதிர்காலத்தில் மரமாக வளர்ந்து, பழங்களைத் தரும். அதேபோல் நிகழ்காலச் சேமிப்புதான் எதிர்காலப் பலன்களைத் தரும்.

சிலருக்குச் சேமிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர்களில் பலர், அவசரக்காரர்களாகவோ அல்லது பேராசைக்காரர்களாகவோ இருப்பர். வேறு சிலர், சேமிப்பைக் கண்டுகொள்ளாத அலட்சியக்காரர்களாக இருப்பர். இவை அனைத்துமே தவறு. இதுதொடர்பாக ‘இடனறிதல்’ என்ற அதிகாரத்தின் கீழ் இயம்பியுள்ளார் செந்நாப்போதர்.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்னல் லது. (491)

எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும் அதற்குரிய இடம் சரியானதுதானா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் செயலில் இறங்கக் கூடாது. அதேபோல், முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ஏளனமாய் இகழவும் கூடாது என்கிறது இக்குறள். முதலீட்டாளர்களுக்கும் இது மிகவும் பொருத்தமானது. நாம் முதலீடு செய்கின்ற இடம் அதாவது நிறுவனம், குறிப்பிட்ட திட்டம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் அறியாமையாலோ, பேராசையாலோ அதில் சேரக் கூடாது. அதேபோல், எந்தவொரு முதலீட்டுத் திட்டம் குறித்தும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், எல்லாம் தெரிந்தவர்போல் ஏளனம் பேசி அலட்சியப்படுத்தக் கூடாது.

முதலீட்டுக்கு இடம் எவ்வாறு முக்கியமோ, அதேபோல் காலமும் மிக முக்கியமானது. சிறந்த முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீட்டை அல்லது நடுத்தரக் கால முதலீட்டைத் தேர்ந்தெடுப்பார்கள். காலம் கனியும்வரை பொறுமையாகக் காத்திருந்து, பயனை அறுவடை செய்வார்கள். ஆனால் அவசரக்காரர்களும், அச்சத்தின் பிடியில் சிக்கியவர்களும், சுயமாகச் சிந்தித்துப் பார்க்காதவர்களும், அறியாமை உள்ளவர்களும் ஒன்று, நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ளமாட்டார்கள்; ஒருவேளை அப்படியே மேற்கொண்டாலும், உரிய காலம் வரை காத்திருக்கும் பக்குவமற்றவர்களாக இருப்பார்கள். முதலீடுகளுக்கு மிகுந்த பலன் கிடைக்க, தெளிவான சிந்தனையும், பொறுமையும் மிகவும் அவசியம். இதனை ‘காலமறிதல்’ அதிகாரத்தின் கீழ் கட்டாயம் என விதிக்கிறார் முப்பால் முனிவர்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து. (490)

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். குளக்கரையில் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்கானது, ‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை’ ஒற்றைக்கால் தவமிருக்கும். மிகுந்த பொறுமையோடு காத்திருக்கும் அந்தக் கொக்கானது, தனக்கு உரிய மீன் வந்தவுடன் அந்தப் பொறுமைக்கு முற்றிலும் மாறாக விரைந்து செயல்பட்டு அந்த மீனைக் கொத்திக் கவ்வும். இதனைத்தான் திருவள்ளுவரும் கூறியுள்ளார். கூம்பும் பருவம் என்றால் காத்திருக்கும் பருவம். சீர்த்த இடத்து என்றால் உரிய காலம் வரும்போது என்று பொருள். காத்திருக்கும்போது கொக்கு எவ்வாறு பொறுமையாகக் காத்திருக்குமோ அதனைப்போல ஒருவர் காத்திருக்க வேண்டும். உரிய காலம் வரும்போது, மீனை கொக்கு குத்தித் தூக்கும்போது எவ்வளவு விரைவில் செயல்படுமோ, அந்த வேகத்தில் செயல்பட வேண்டும் என்கிறது இக்குறள். முதலீட்டாளரும் இதனைப்போல உரிய காலம் வரும்வரை கொக்கைப்போல பொறுமை காக்க வேண்டும்; உரிய காலம் வந்தவுடன் அதன் அலகு வேகமாக இரையைக் குத்துவதைப்போல விரைந்து செயல்பட்டு, பலனை அறுவடை செய்ய வேண்டும்.

பொருளாதார விஷயத்தில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல், அதாவது உலகின் நிபுணர்கள், விஷயம் அறிந்தவர்களைப் பின்பற்றுதல் என்பதற்கு, இடத்தையும் காலத்தையும் அனுசரித்தால் மட்டும் போதாது. அதற்கு மேலும் 3 அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி ‘வினை செயல்வகை’ என்ற அதிகாரத்தின் கீழ் விளக்கம் அளித்துள்ளார் திருவள்ளுவர்.

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல். (675)

எந்தவொரு செயலைச் செய்வதற்கும் பொருள், கருவி, காலம், வினை (செயல்), இடம் ஆகிய ஐந்தையும் இருள் தீர, அதாவது மயக்கம், குழப்பம் தீர்ந்த வகையில் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது இக்குறள். பொருள் என்பது ஒரு செயலைச் செய்வதனால் ஆகும் பொருள் என்ன, அழியும் (செலவாகும்) பொருள் என்ன என்பதைக் குறிக்கும். கருவி என்றால் வழிமுறை, பயன்படும் உபகரணம் என்று பொருள். காலம் என்பது அந்தச் செயல் நிறைவு பெற ஆகின்ற காலத்தைக் குறிக்கும். வினை என்பது குறிப்பிட்ட செயலின் தன்மை, செயல்படுத்துகின்ற தன்மையைக் குறிக்கிறது. இடம் என்பது குறிப்பிட்ட செயலை சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு உரிய இடத்தைக் குறிக்கிறது.

முதலீடுகளுக்கும் இது மிகவும் பொருத்தமானது. ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் முன்பு, அதற்காக நாம் செலவிட வேண்டிய தொகை எவ்வளவு, அவ்வாறு செலவிட்டு மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய தொகை எவ்வளவு என்பது பொருள். அந்த முதலீட்டுக்கு உரிய திட்டம் என்ன என்பது கருவி. அந்த முதலீடு எத்தனை ஆண்டுகளுக்கானது என்பது காலம். அந்த முதலீட்டுத் திட்டத்தின் தன்மை, பயன்கள் என்ன என்பது வினை. அந்த முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் அல்லது அமைப்பு என்பது இடம். இந்த ஐந்தையும் நமக்குள்ள சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவை தீரும் வகையிலே நன்கு ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். அதுதான் இன்றைய காலகட்டத்தில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதாகக் கருதப்படும்.

***

துணைத் தகவல்

உலகமயமாக்கலின் விளைவுகள்

உலகமயமாக்கல், உலகின் எந்தவொரு நாட்டிலும் தவிர்க்க இயலாத அம்சமாகத் தற்போது உள்ளது. இதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு; வாய்ப்புகளும் உண்டு; சவால்களும் உண்டு. உலகை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, பன்னாட்டு மக்களை இணைத்ததும், போட்டியிடும் திறனை அதிகரித்ததும், தொழில்நுட்ப வளர்ச்சிப் பரவலும், உலகமயமாக்கலின் மிகப்பெரிய நன்மைகள். ஒரு நாட்டின் பிரச்னை பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதும், உள்நாட்டுத் தொழில்களின் நசிவும் மிகப்பெரிய தீமைகள்.

மனிதர்களுக்காகத்தான் கொள்கைகளே அன்றி, கொள்கைகளுக்காக மனிதர்கள் அல்ல. காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப கொள்கைகளும் மாற்றம் பெறலாம். ஆயினும், குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட கொள்கைகள் காலத்தின் கட்டாயமாக கோலோச்சுவது உலகின் இயல்பு. காலவெள்ளத்தில் அதுவும் கரைந்துபோகும். ஆயினும், அதுவரையிலும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுவதும் அல்லது அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளையோ தற்காப்பு ஏற்பாடுகளையோ வடிவமைத்துக்கொள்வதும் தவிர்க்க இயலாதது. அந்த வகையில், இன்றைய உலகின் பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல். கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டுள்ள சீனாகூட, உலகமயமாக்கலை உதறித்தள்ள முடியவில்லை. தாராளச் சந்தைப் பொருளாதாரத்தோடு அதுவும் இணைந்தே நடைபோடுகிறது.

1991-இல் இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுகமானது. காங்கிரஸ் சார்பில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில், அன்றைய மத்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங் இதனைக் கொண்டுவந்தார். உலகமயமாக்கல் மட்டும் தனியாக வரவில்லை. அது அடிப்படையில் மூன்று கொள்கைகளின் கலவை. அதைச் சுருக்கமாக எல்பிஜி என்பர். தாராளமயமாக்கல் (லிபரலைசேஷன் – எல்), தனியார்மயமாக்கல் (பிரைவேடைசேஷன் – பி), உலகமயமாக்கல் (குளோபலைசேஷன் – ஜி) ஆகிய மூன்றும் சேர்ந்ததே எல்பிஜி.

1969-இல் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது, 14 மிகப் பெரிய தனியார் வங்கிகள், பொதுத் துறை (அரசுத் துறை) வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. 1991-இல் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், தனியார் துறையில் வங்கிகள் தொடங்கவும், அந்நிய நாட்டு வங்கிகளும் நிறுவனங்களும் இங்கே நுழையவும் அனுமதி அளிக்கப்பட்டன. இதுதான் காலத்தின் கோலம் போலும்.

உலகமயமாக்கல், இந்தியப் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிவிடும் என்று தொடக்கத்தில் அஞ்சப்பட்டது. 1991-இல் இந்தியா பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவித்தது. ஆகையால், உலகமயமாக்கல் இந்தப் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் என்ற பலரும் பயந்ததில் ஓர் அர்த்தம் இருந்தது. இருப்பினும், தொடக்கத்தில் சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியபோதிலும், உலகமயமாக்கலால் பின்னர் இந்தியாவுக்கு நன்மைகளும் விளைந்தன. அந்நிய முதலீடுகளும், புதிய தொழில்நுட்பங்களும் இந்தியாவில் வெள்ளமெனப் புகுந்தன. அதேநேரத்தில், அந்நிய நேரடி முதலீடுகள் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. எச்சரிக்கை உணர்வுடன் சில கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டே அனுமதிக்கப்பட்டன.

தேவையான நேரத்தில் உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) தாராளமயமாக்கல், உலகமயமாக்கலின் பாதிப்புகளில் இருந்து தன்னை மட்டுமின்றி, தன்னை ஒத்த வளரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கவும் இந்தியா குரல் கொடுத்தது. கடந்த 2001-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த டபிள்யூடிஓ மாநாட்டின்போது, அன்றைய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன், இந்தியா சார்பில் கடுமையாக வாதாடினார். அதன் விளைவாக, உயிர் காக்கும் மருந்துப் பொருள்களின் விலையை, வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சி அபிவிருத்திக் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவில் நிர்ணயிப்பது தடுத்து நிறுத்தப்பட்டு, வளரும் நாடுகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன.

இதேபோல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், கடந்த 2015-இல், கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த டபிள்யூடிஓ மாநாட்டில், வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படும் வரை மானியங்கள் தொடர வேண்டும் என்று தொழில் - வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாதாடி, ஏற்றுக்கொள்ளச் செய்தார். இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உணவுப் பொருள் விலையேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஒருகாலத்தில், உலகத்துக்கு உலகமயமாக்கலை போதித்ததுடன், உள்ளூர் தொழில்களுக்கு மானியங்கள் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்புகளையும் வழங்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா, தற்போது உலகமயமாக்கலின் பாதிப்புகளை நேரில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக, உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க நாங்கள் மானியம் வழங்குவோம் என்று பேசத் தொடங்கியுள்ளது அமெரிக்காவின் புதிய அரசு.

உலகமயமாக்கலைத் தொடங்கிவைத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு நிபுணர்களின் சேவையும், அயல்பணி வர்த்தகச் சேவையும் (அவுட் சோர்ஸிங்) கிடைக்கத் தொடங்கியது. இதனால், தொடக்கத்தில் குறைந்த செலவில் தரமான சேவைகளைப் பெற்ற அந்நாடுகள், தற்போது உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் பறிபோக நேர்ந்ததாகக் கூறி, தடுப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதுவும் காலத்தின் கோலம்தான்.

ஆக, கருவி எத்தகையதாக இருந்தாலும் அவற்றை நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com