அதிகாரம் - 21. தீவினையச்சம்

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.
அதிகாரம் - 21. தீவினையச்சம்

அதிகார விளக்கம்

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர், வீடுபேறு பெற நினைப்பவர், தீமை செய்யாது விலகி இருக்க வேண்டும்.

201. தீவினையார் அஞ்சார் விழுமியோர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

தீய வினை என்ன அகங்காரத்துக்கு, கேடு செய்பவர்கள் அஞ்சமாட்டார்கள். ஆனால், வாழ்வை நேசிப்பவர்கள் அஞ்சுவார்கள்.

202. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் எப்போதும் கெடுதல்தான் ஏற்படும். அதனால், நெருப்பைவிட தீய செயல்கள் தீங்கானது.

(குறிப்பு: நெருப்பு மேலும் நெருப்பை உண்டாக்க வல்லது)

203. அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

தனக்குத் தீமை செய்தவர்க்குக்கூட தீமை செய்யாமல் இருப்பதுதான் அறிவினுள் சிறந்த அறிவு.

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும்கூட பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது. அப்படி செய்ய நினைத்தால் அறமே உனக்குத் தீங்கு விளைவிக்கும்.

205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

ஏதும் இல்லாதவனுக்குக் கெடுதல் செய்ய நினைக்காதே; அப்படிச் செய்தால், உன்னிடம் இருக்கும் அனைத்தும் விலகிப்போய் நீயே ஏதும் இல்லாதவனாகிவிடுவாய்.

206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

தன்னைத் துன்பங்கள் தீண்டக் கூடாது என்று நினைப்பவர்கள், மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யக் கூடாது.

207. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென் றடும்.

எந்த வித எதிர்ப்பையும் மீறி ஒருவர் வாழ்க்கையில் மீண்டு வர முடியும். ஆனால், நாம் செய்யும் தீய செயல்களால் வரும் பகை நம்மைத் துன்புறுத்திக் கொல்லும்.

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடியுறைந் தற்று.

ஒருவரை அவருடைய நிழல் தொடர்வதைப்போல, அவர் செய்த கேடும் அவரைத் தொடர்ந்து வந்து துன்பம் தரும்.

209. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

ஒருவன் தன் மீது நேசம் உள்ளவனாக இருந்தால், மற்றவர்களுக்கு எப்போதும் தீங்கு செய்யக் கூடாது.

210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

தீவினைகள் செய்யாமல் இருப்பவன் வாழ்க்கையில் ஒருபோதும் துன்பம் இல்லாமல் இருப்பான்.

குறிப்பு

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com