அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே நிரந்தரமாக உரியது என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக சார்பில் இன்று லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் பி.புருஷோத்தமன் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
கூட்டத்துக்கு தலைமை தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு அதிமுக தொண்டர்கள், தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். தற்போதுள்ள முதல்வர் முதல் கடைகோடி தொண்டன் வரை அனைவரும் ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என்றே அழைத்து வந்தோம்.
இந்த பதவியை வேறு எவருக்கும் தர்ககூடாது. நிரந்தர பொதுச் செயலர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். கட்சியில் தலைவர், பொறுப்பாளர் வேறு எவரையும் நியமித்துக்கொள்ளலாம். அப்படி பெயரை சூட்டிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தொண்டனும் ஜெயலலிதாவுக்கு தந்த அங்கீகாரம் நிரந்தர பொதுச் செயலர் என்ற பதவியாகும். இதை தமிழகத் தலைமைக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கோரிக்கையை ஏற்கிறார்களோ இல்லையோ வலியுறுத்த வேண்டியது தொண்டனாகிய எனது கடமையாகும். அனைத்து தொண்டர்களும் இதையே விரும்புகின்றனர் என்றார் ஓம்சக்திசேகர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுவை நகரின் மையப்பகுதியில் அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும், புதிய மணிமண்டபம் கட்ட வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் சொந்த நிலத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் மணிமண்டபம் கட்டி ஜெயலலிதா முழு உருவச் சிலை நிறுவப்படும்.
நிர்வாகிகள் திருநாவுக்கரசு, காசிநாதன், காசிலிங்கம், பரசுராமன், மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெ. மறைவுக்காக கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இக்கூட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த பிற எம்.எல்.ஏக்களான அன்பழகன், பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.