புது தில்லி,
நாட்டிலிருந்து ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக ஒழிப்பதே எனது முதன்மையான குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் "தி எகனாமிக்ஸ் டைம்ஸ்' இதழ் சார்பில் ஆசிய வர்த்தக நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினரும், வர்த்தக நிபுணர்களும் பங்கேற்றனர்.
தில்லியிலிருந்து இந்த மாநாட்டில் காணொலி முறை மூலம் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் நீண்டகாலமாக மலிந்திருந்த ஊழலையும், பொருளாதார தேக்க நிலையையும் பூண்டோடு ஒழிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கும், சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் வழிகோலும். பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறுவதற்கு கருப்புப் பணமும், ஊழலும் பெரும் தடைகளாக இருக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்துக்கு சமமான வளர்ச்சியை கருப்புப் பணப் பொருளாதாரமும் அடைந்திருக்கிறது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதே எனது முதன்மைக் குறிக்கோளாக இருக்கிறது.
அதற்கான நடவடிக்கைகளும் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.