காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே விமானத்துக்கான ஒயிட்பெட்ரோல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் விமான எரிபொருளான வெள்ளைப் பெட்ரோல் (ஒயிட்பெட்ரோல்) டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
லாரி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மூன்று கிரேன்களின் உதவியோடு லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.