சென்னை
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை 2வது முறையாக, தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனையின்பேரில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்தி, விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது, காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும், இதர முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நாளை (அக்.,24) மாலை 5 மணியளவில், 2வது முறையாக, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் மற்றும் உதய் மின்சார திட்டம் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.