நாமக்கல்,
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு தீவிர பிரசாரம் செய்வது என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ரா.உடையவர் தலைமையில் நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன் வரவேற்று பேசினார். திமுக துணை பொதுச்செயலர் வி.பி.துரைசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உறுதுணையாக இருக்கும்.
நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தலைமை அறிவித்துள்ளபடி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடவேண்டும். இதற்காக நவம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அங்கேயே தங்கியிருந்து திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வது.
முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத்குமார், பழனியம்மாள், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பா.ராணி, சட்டத் திட்ட திருத்தக் குழு உறுப்பினர் நக்கீரன், விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, விமலா சிவக்குமார், நகர செயலர்கள் மணிமாறன், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.