சென்னை,
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா, தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு நடைபெறுகிறது.
கடந்த 1993-ஆம் ஆண்டு, நடிகர் பிரபு நடிப்பில் வெளியான -உழவன்- படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்பா. முன்னணி நடிகரான நடிகர் ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் காதலா காதலா, விஜய்யுடன் மின்சாரக் கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கார்த்திக்குடன் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, லிவிங்ஸ்டனுடன் நடித்த சுந்தர புருஷன் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, பெங்காலி ஆகிய மொழிகளில் சுமார் 100 படங்கள் வரை நடித்துள்ளார்.
-த்ரீ ரோசஸ்- என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தன் மூலம் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னையில் சிக்கி மீண்டார். பின்னர் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.
அப்போது இலங்கையை பூர்வீகமாக கொண்ட, கனடா பிரபல தொழிலதிபரான இந்திரன் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இருவரும் கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-இல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கனடாவில் வாழ்ந்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2012 முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த நிலையில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-இன் கீழ் (தாம்பத்திய உரிமையை மீட்டுத் தரக்கோரி) இணைந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை இரண்டாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா என்கிற விஜயலட்சுமி சனிக்கிழமை(அக் 22) மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி, விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.