புதுச்சேரி,
நெல்லித்தோப்பு இடைத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் தேதியை மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவிப்பார் என வேட்பாளரும், முதல்வருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்த கூட்டம் தில்லியில் நடக்கிறது. அதில் கல்வி அமைச்சர் கமலகண்ணன் பங்கேற்கிறார். ஏற்கனவே மத்திய அரசு புதிய கல்வி கொள்கை குறித்து அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதுவை அரசு சார்பிலும் இதை எதிர்க்கிறோம்.
இந்தியை போல சமஸ்கிருதத்தை திணிப்பதை ஏற்க மாட்டோம். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நசுக்குவதை ஏற்க மாட்டோம். ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பயிற்சி, புதிய பாடத்திட்டம் ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துகள் இடம்பெறுகிறது. இதையும் ஏற்கமாட்டோம். இதுதொடர்பாக புதுவை அரசின் கருத்துக்களை அமைச்சர் கமலகண்ணன் தில்லி கூட்டத்தில் பதிவு செய்வார்.
காவிரி நீரை பெற தமிழகத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இடைக்கால தீர்ப்பையும் ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்கி தரவில்லை.
இதனால் குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். இந்த கூட்டத்தை நடத்தாதது வருத்தமளிக்கிறது. திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்கின்றன.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் அனுப்பி காவிரி நீரை பெற முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வேட்பு மனு தாக்கல் தேதியை மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவிப்பார் என்றார் நாராயணசாமி.