தாம்பரம்,
தாம்பரம் ரயில்நிலையத்தில் 3 வது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு,டிசம்பர் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.
சென்னையில் எழும்பூர்,சென்ட்ரல் ஆகிய ரயில் இரு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்னை புறநகர் பகுதியில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள்,தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில்,ரூ35 கோடி செலவில் தாம்பரம் ரயில்நிலையத்தில் 3 வது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தற்போது நடைபெற்று வரும் மின்கம்பிகள் இணைப்பு,ரயில் பெட்டிகளை சிரமமில்லாமல் கொண்டு செல்ல துணை பாதைகளுக்கான தண்டவாளங்கள்,துணை மின்நிலையம்,குடிநீர் இணைப்பு ஆகிய பல்வேறு பணிகளை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பெரும்பாலான பணிகள் நிறைவு பெறும் நிலையில்,பருவ மழை காரணமாக பணியில் தேக்கநிலை ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
மழை காலத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மூழ்காமல் தடுக்க உரிய நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தினார்.